“1905ல் போல்ஷிவிக்குகள் 'நாடாளுமன்றத்தைப்"
புறக்கணித்ததானது, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு மதிப்பிடற்கரிய அரசியல் அனுபவத்தை
அளித்துச் செழுமைப்படுத்திற்று. சட்டபூர்வமான, சட்டவிரோதமான போராட்ட வடிவங்களும், நாடாளுமன்ற,
நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்ட வடிவங்களும் ஒன்றிணைக்கப்படுகையில், சில நேரங்களில்
நாடாளுமன்ற வடிவங்களைக் கைவிடுவது பயனளிப்பதாக இருப்பதுடன் அவசியமும் ஆகிவிடுகிறது
என்பதை அது தெளிவு படுத்திற்று. ஆனால் இந்த அனுபவத்தைக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே
காப்பியடிப்பதும், விமர்சனப் பார்வையின்றி பிற நிலைமைகளிலும் பிற சூழல்களிலும் அனுசரிப்பதும்
பெருந் தவறாகிவிடும். 1906ல் போல்ஷிவிக்குகள் டூமாவைப் பகிஷ்கரித்தது சிறிய பிழையே
என்றாலும், எளிதில் நிவர்த்தி செய்து கொள்ளத் தக்கதே என்றதலும் பிழையே ஆகும்.
1907லும் 1908லும்
அடுத்து வந்த ஆண்டுகளிலும் டூமாவின் புறக்கணிப்பு மிகவும் கடுமையான, நிவர்த்தி செய்வது
கடினமான தவறாகிவிட்டது. ஏனெனில் ஒரு புறத்தில், புரட்சி அலை வேகமாக உயர்ந்தெழுந்து,
எழுச்சியாக மாறிவிடுமென்று எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. மறுபுறத்தில், முதலாளித்துவ
முடியாட்சி புதுப்பிக்கப்பட்டபோது உருவான வரலாற்று நிலைமை சட்டபூர்வமான செயற்பாடுகளையும்
சட்டவிரோதமான செயற்பாடுகளையும் ஒன்றிணைத்துக் கொள்வதை அவசியமாக்கிவிட்டது. முழு நிறைவு
எய்திவிட்ட இந்த
வரலாற்றுக் கட்டம் இதற்குப் பிந்தைய கட்டங்களுடன் கொண்டுள்ள
இணைப்பு இப்பொழுது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. முடிவுற்றுவிட்ட இக்கட்டத்தை இன்று
நாம் திரும்பிப் பார்க்கையில், சட்டபூர்வமான போராட்ட வடிவங்களையும் சட்டவிரோதமான போராட்ட
வடிவங்களையும் ஒன்றிணைத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும், மிகவும் பிற்போக்கான
நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான சட்டங்களால் கட்டுண்டிருக்கும் இதர பல நிறுவனங்களிலும்
(நோய்க்கால உதவிச் சங்கங்கள் முதலானவை)
பங்கெடுத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும் என்னும் கருத்தோட்டத்தை போல்ஷிவிக்குகள்
மிக உக்கிரமாய்ப் போராடி நிலைநிறுத்தியிராவிடில், 1908-14ல் அவர்களால் பாட்டாளி வர்க்கப்
புரட்சிக் கட்சியின் உறுதியான மையப் பகுதியை (பலப்படுத்துவதும்
வளர்த்திடுவதும் இருக்கட்டும்) சிதையாது பாதுகாத்துக் கொள்ளக்கூட முடியாமற் போயிருந்திருக்கும்
என்று மிகத் தெளிவாய்த் தெரிகிறது.”
("இடதுசாரி''
கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு-4)
No comments:
Post a Comment