Thursday 26 September 2019

மார்க்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகள் – எங்கெல்ஸ்

“வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம் மற்றும் உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.”
(டூரிங்குக்கு மறுப்பு)

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்,  உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று, இனி அடுத்தபடிச் செய்ய வேண்டியிருந்த பணி அதன் எல்லா விவரங்களையும் உறவுகளையும் வகுத்தமைத்திடுவதுதான்”
(கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்)


“அங்கக இயற்கையின் (organic nature) வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார், மனிதன் அரசியல், அறிவியல், கலை, மதம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது, ஆகவே உடனடியான பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.

ஆனால் அது மட்டுமல்ல. மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் அந்த உற்பத்திமுறை தோற்றுவித்துள்ள முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்தின் சிறப்பு விதியையும் கண்டுபிடித்தார். உபரி மதிப்பைக் கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது, அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளி வர்க்கப் பொருளியலாளர்கள், சோஷலிஸ்டு விமர்சகள் ஆகிய இரு தரப்பினரும் இதற்கு முன்பு செய்த எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் கொண்டிருந்தன.

ஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதும். அத்தகைய ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்தால்கூட அந்த மனித அதிர்ஷ்ட்டமுடையவரே.”
(மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரை

Tuesday 24 September 2019

முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்படுகிற பொருளாதார நெருக்கடிக்கு, வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளினால் உருவான மிகை உற்பத்தியே காரணமாகும். குறைநுகர்வு என்பது இதற்கு கீழ்மட்ட நிலையில் அதாவது இரண்டாம் நிலை காரணமாகும் என்பது பற்றி லெனின்:-

"நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்விரண்டு கோட்பாடுகள் நெருக்கடிகளைப் பற்றி முற்றிலும் வெவ்வேறான விளக்கங்கள் தருகின்றன. உற்பத்திக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு முதல் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது, உற்பத்தியின் சமுதாயவகைப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிகொள்வதின் தனியுடைமை முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு இரண்டாம் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது.

எனவே, முந்தைய கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்திக்கு அப்பால் வெளியே இருப்பதாகக் காண்கிறது, பிந்தையத் கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்தி நிலைமைகளிலேதான் இருப்பதாகக் காண்கிறது. மேலும் சுருங்கச் சொல்வதானால், முந்தைய கோட்பாடு குறைநுகர்வை கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது, பிந்தைய கோட்பாடு உற்பத்தி உற்பத்தியின் அராஜகத்தன்மையைக் கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது.

ஆக, இரு கோட்பாடுகளுமே பொருளாதார அமைப்புமுறைக்குள்ளேயேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு நெருககடிகளை விளக்குகிறபோதிலும், அந்த முரண்பாட்டின் தன்மை விஷயத்திலே அவ்விரண்டுமே முற்றிலும் வேறுபடுகின்றன. ஆனால் கேள்வி இதுதான், உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு என்கிற உண்மையை இரண்டாம் கோட்பாடு மறுக்கிறதா, குறைநுகர்வு என்கிற உண்மையை அது மறுக்கிறதா? கிடையவே கிடையாது. அது அந்த உண்மையை முற்றாக அங்கீகரிக்கிறது, ஆனால் அதை அதற்குரிய கீழ்மட்ட இடத்தில் வைக்கிறது, இந்த உண்மையால் நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று அது போதிக்கிறது, அந்த நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது இன்றையப் பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படையானதாக இருக்கும் மற்றொரு, மேலும் ஆழமான முரண்பாடு ஆகும். -அதாவது, உற்பத்தியின் சமுதாயவகைப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கி கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையேயுள்ள முரண்பாடுதான்."
(“பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை” பக்கம் 61-62)
(A Characterization of Economic Romanticism)

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணமல்ல – எங்கெல்ஸ்


(முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவாய் ஏற்படுகிற மிகை உற்பத்தியே பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகிறது, குறை-நுகர்வு பிரச்சினை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன்பே காணக்கூடியது. புதியதாகத் தோன்றிய பொருளாதார நெருக்கடிக்கு குறை-நுகர்வு காரணமாது)
*******************************************************************************************************************************************
“ஹெர் டூரிங்கைப் பொருத்தவரை, சோஷலிசம், வரலாற்று வளர்ச்சியின் அவசியமான விளைவு அல்லவே அல்ல, மற்றும் முற்றிலும் வயிற்றை நிரப்பும் திசையில் நெறியாண்மை செய்யப்படும் இன்றைய படுமோசமான பொருளாயதத் தன்மை வாய்ந்த பொருளாதார நிலைமைகளின் விளைவும் அல்ல. இதை எல்லாம் அவர் மேலும் நல்ல முறையில் செய்து நிறைவேற்றியுள்ளார். அவரது சோஷலிசம் ஓர் இறுதியும் அறுதியுமான உண்மை;

அது “சமுதாயத்தின் இயற்கையான அமைப்பு'', இதன் வேர்கள் “நீதியின் சர்வப்பொதுக் கோட்பாட்டில் காணப்படுவன;

கடந்த காலத்தின் பாவகரமான வரலாறு சிருஷ்டித்த தற்போதைய நிலைமையைக் கவனிக்காமல் அவரால் தவிர்க்க முடியவில்லை என்றால், அதற்குப் பரிகாரம் காண்பதற்காக, இதை நீதியின் புனிதக் கோட்பாட்டுக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம் என்றே கருதவேண்டும். ஹெர் டூரிங் மற்றவை எல்லாவற்றையும் போலவே தமது சோஷலிசத்தையும் தமது புகழார்ந்த இரு மனிதர்களை ஊடகமாக் கொண்டே உருவாக்குகிறார். சென்ற காலத்தில் இந்த இரு பொம்மைகளும் எஜமான், வேலையாள் என்ற பாத்திரங்களில் நடித்தது போலன்றி, மாறாக இந்தத் தடவையில், ஒரு மாறுதலுக்காக, உரிமைகளின் சமத்துவம் பற்றிய கதையினை நடிக்கின்றனர்-டூரிங்கின் சோஷலிசத்தின் அடித் தளங்கள் நிறுவப்பட்டுவிட்டன.

எனவே ஹெர் டூரிங்கைப் பொருத்தவரை, தொழில் துறையில் ஏற்படும் அலை வட்ட நெருக்கடிகளுக்கு நாம் கற்பித்துக் கூறுமாறு நிர்ப்பந்திக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் எதுவுமே இல்லை என்பது கூறாமலே விளங்கும். அவரது கருத்துப்படி,

நெருக்கடிகள் “சகஜ நிலையில் இருந்து” எப்போதாவது ஏற்படும் திரிபுகள் மட்டுமே, மற்றும் அவை “மேலும் முறைப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பின் வளர்ச்சியை” மேம்படுத்தவே பெரும்பாலும் உதவுகின்றன என்பதாகும். மிகை உற்பத்தியால் தான் நெருக்கடிகள் ஏற்படுகின்றன என்று விளக்கும் “சாமான்ய முறை'' அவரது “விஷயங்கள் குறித்த மேலும் துல்லியமான கருத்தோட்டத்திற்கு” எவ்வகையிலும் போதுமானதல்ல. அத்தகைய விளக்கம் "குறிப்பிட்ட பகுதிகளிலான பிரத்தியேக நெருக்கடிகள் விஷயத்தில் அனுமதிக்கப்படலாம்'' என்பது வாஸ்தவம். உதாரணம்: “பெருமளவில் விற்பனை செய்யத் தகுதியுள்ள நூல்களைத் திடீரென மறுபதிப்பாக வெளியிட்டுப் புத்தக மார்க்கெட்டை விழுங்கிவிடுவது.''

அவரது அமரத்துவம் பெற்ற நூல்கள் இத்தகைய உலகப் பேரிடர் எதையும் என்றுமே கொண்டு வந்துவிடா என்ற மன ஆறுதல் உணர்வுடன் ஹெர் டூரிங் உறங்கச் செல்லலாம்.

பெரிய நெருக்கடிகளில் “தரவுக்கும் தேவைக்கும் இடையிலான பிளவை இத்தனை மோசமாக விரிவாக்குவதற்கு” மிகை உற்பத்தி காரணம் அல்ல என்றும், மாறாக “வெகுஜன நுகர்வு பின்தங்கி இருப்பதும்.., செயற்கையாக உருவாக்கப்படும் குறை-நுகர்வும்... மக்களின் தேவைகளின்" (!) “இயல்பான பெருக்கத்தில் தலையிடுவதுமே" காரணம் என்றும் வாதாடுகிறார்.

அவரது இந்த நெருக்கடிக் கோட்பாட்டுக்கு ஒரு சீடரைப் பெறும் நல்வாய்ப்பும் அவருக்குக் கிட்டியுள்ளது.

ஆனால் துரதிருஷ்டவசமாக வெகு ஜனங்களின் இந்தக் குறை- நுகர்வும், அவர்களது பராமரிப்பு மற்றும் இனப் பெருக்கத்துக்குத் தேவையான நுகர்வைக் கட்டுப்படுத்துவதும் ஒரு புதிய புலப்பாடன்று. சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்கள் இருந்தவரையில் இது தொடர்ந்து நிலவி வந்துள்ளது. வெகுஜனங்களின் நிலைமை விசேஷமாயும் சாதகமாக இருந்த அந்த வரலாற்றுக் காலகட்டங்களில் கூட, உதாரணமாக 15 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில், மக்கள் குறை-நுகர்வுக்கு இலக்காயிருந்தார்கள். தமது நுகர்வுக்குத் தமது ஒட்டு மொத்தமான வருடாந்த உற்பத்திப் பொருளைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே குறை- நுகர்வு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றில் ஓர் இடையறாத அம்சமாக இருந்து வந்துள்ளது.

அதே பொழுதில், உபரி உற்பத்தியின் விளைவாக ஏற்படும் நெருக்கடிகளால் மார்க்கெட் பொதுவாகச் சுருங்குவது என்பது கடந்த ஐம்பதாண்டுகளாக மட்டுமே இருக்கும் ஒரு புலப்பாடாகும்; எனவே இந்தப் புதிய மோதலை மிகை உற்பத்தி என்ற புதிய புலப்பாடு மூலம் அல்லாது ஆயிரமாண்டு பழமையான குறை-நுகர்வு என்ற புலப்பாடு மூலம் விளக்குவதற்கு ஹெர் டூரிங்கின் மேம்போக்கான கொச்சைப் பொருளியல் முழுதும் தேவைப்படுகிறது. இது, ஒரு கணிதவியலாளர் நிலையான ஒன்றும் மாற்றத்தக்க ஒன்றுமான இரு அளவுகளின் இடையிலான விகிதத்திலுள்ள வகை பிரிவினை மாறத்தக்க அளவைக் கொண்டு அல்லாமல் நிலையான அளவு மாற்றமடையாமல் இருக்கிறது என்ற உண்மையை வைத்து விளக்க முயல்வது போன்று உள்ளது.

வெகு ஜனங்களின் குறை- நுகர்வு சுரண்டலை அடிப்படையாக்கியதான எல்லா வடிவங்களிலு மான சமுதாயத்தின், இதன் பின்விளைவாக முதலாளித்துவ வடிவ சமுதாயத்தினதுமான அவசியமான நிபந்தனையாகும்; ஆனால் உற்பத்தியின் முதலாளித்துவ வடிவம்தான் முதலில் நெருக்கடிகளுக்குக் காரணமாக உள்ளது. எனவே வெகு ஜனங்களின் குறை- நுகர்வு நெருக்கடிகளுக்கான முன்தேவையான ஒரு நிபந்தனையுமாகும், மற்றும் இது நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டு வந்த ஒரு பாத்திரத்தை அவற்றில் வகிக்கிறது. ஆனால் இது முன்னே ஏன் நெருக்கடிகள் நிலவவில்லை என்பதற்கு எவ்விதக் காரணமும் கூறாதது போலவே இன்று ஏன் நெருக்கடிகள் நிலவு கின்றன என்பதற்கும் எவ்விதக் காரணமும் கூறவில்லை.”
(டூரிங்குக்கு மறுப்பு- பொருளுற்பத்தி)

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணமல்ல - மார்க்ஸ்


“பயன்திறனுள்ள நுகர்வு (effective consumption) அல்லது பயன் திறனுள்ள நுகர்வாளர் பற்றாக்குறையாகி விடுவதுதான் நெருக்கடிகளுக்குக் காரணம் என்கிறார்கள். கூறியதையே கூறும் சொற்புரட்டு ஆகுமே தவிர இது காரண விளக்கம் ஆகாது. பஞ்சையர் நுகர்வையும் மோசடிக்காரர் நுகர்வையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால், முதலாளித்துவ அமைப்பானது பயன்திறனுள்ள நுகர்வைத் தவிர வேறு எந்த விதமான நுகர்வையும் அறியாதது. சரக்குகள் விற்பனையாகாமல் தேங்குகின்றன என்றால், விலை கொடுத்து வாங்கக் கூடியவர்கள், அதாவது பயன்திறனுள்ள நுகர்வாளர்கள் அவற்றுக்கு யாரும் கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். (ஏனெனில், இறுதியாகப் பார்க்கையில், திறனுடை நுகர்வுக்காகவோ சொந்த நுகர்வுக்காகவோதான் சரக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள்.)

தொழிலாளி வர்க்கம் உற்பத்தி செய்வதில் மிகச் சிறு பகுதியே அதன்கைக்குக் கிடைக்கிறது. இன்னும் கூடுதலான ஒரு பங்கு அதற்குக் கிடைக்குமானால், அதாவது அதற்குக்கிடைக்கும் கூலி உயருமானால், கேடு தீர்ந்து விடும் என்று வாதாடி. மேற்கூறிய சொற் புரட்டுக்கு நியாய விளக்கம் அளிக்க முயலுவார்களாயின், அவர்களுக்கு நாம் கூற விரும்புவது இதுதான்:

பொதுவாக எல்லாருக்கும் கூலி எப்போது உயர்ந்து செல்கிறதோ, சமுதாயத்தின் வருடாந்தரப் பொருளுற்பத்தியில் நுகர்வுக்கென அமையும் பகுதியில் தொழிலாளி வர்க்கத்துக்கு எப்போது உள்ளபடியே பெரியதொரு பங்கு கிடைக்கிறதோ, அந்தக் காலகட்டம்தான் எப்போதுமே நெருக்கடிகளுக்குத் தயாரிப்பு செய்யும் காலகட்டமாகிறது. குற்றங்குறையற்ற ''சர்வ சாதாரண" (!) அன்றாடப் பொது அறிவை ஆதாரமாய்க் கொண்டு வாதாடுவதாகக் கூறுகிற இவர்களது கண்ணோட்டத்தின் படி, இம்மாதிரியான ஒரு காலகட்டம் நெருக்கடி வராமல் அல்லவா தடுத்து நிறுத்த வேண்டும்?

ஆக முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கு அவசியமான நிலைமைகள் எப்படிப்பட்டவை என்பது தெளிவாகிறது. யாருடைய நல்ல எண்ணத்தையோ, கெட்ட எண்ணத்தையோ சார்ந்திராத இந்நிலைமைகள் தொழிலாளி வர்க்கம் கணப் பொழுதுக்கு மட்டும் ஒப்பளவில் வளமான வாழ்வு (relative pros perity) வாழ்வதற்கு அனுமதி அளிக்கின்றன, அதுவுங்கூட வரப்போகும் நெருக்கடியின் முன்னறிவிப்பாக அமையும் பொருட்டு அனுமதி அளிக்கின்றன என்பது தெளிவாகிறது.”
(மூலதனம்- தொகுதி இரண்டு- பக்கம்-543)

Saturday 27 July 2019

தொழிலாளி வர்க்கமும் தேசியப் பிரச்சினையும் – 1913 - லெனின்

The Working Class and the National Question


ருஷ்யா, தேசிய இனங்கள் சம்பந்தப்பட்டவரை, ஒரு கதம்பமான நாடு. அரசாங்கக் கொள்கை- அது பூர்ஷ்வாக்களால் ஆதரிக்கப்படுகிற நிலவுடைமையாளர்களது கொள்கையேட - கறுப்பு நூற்றுவர் தேசிய வாதத்தில் ஊறியிருப்ப தாகும்.

ருஷ்யக் குடிமக்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கின்ற ருஷ்ய மக்களினங்களின் பெரும்பான்மையினருக்கு விரோதமான வகையில் ஈட்டி போலத் தாக்குவது இந்தக் கொள்கை. இதற்குப் பக்கத்திலேயே மற்ற தேசிய இனங்களின் (போலிஷ், யூத, உக்ரேனிய, ஜார்ஜிய, இதரவை) பூர்ஷ்வா தேசிய வாதம் தன் தலையைத் தூக்குகிறது; ஒரு தேசியப் போராட்டம் அல்லது தேசியக் கலாச்சாரத்துக்கான போராட்டத்தின் மூலம் உழைப்பாளி வர்க்கத்தை, அதன் மகத்தான உலகு தழுவிய கடமைகளிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்கிறது.

வர்க்க உணர்வு கொண்ட எல்லாத் தொழிலாளர்களும் தேசியப் பிரச்சினையைத் தெளிவாக முன்வைப்பதும் தீர்ப்பதும் அவசியம்.

பூர்ஷ்வா வர்க்கம் மக்களோடு சேர்ந்து, உழைப்பில் ஈடுபடுகின்ற எல்லோருடனும் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த பொழுது, அது தேசங்களின் முழு சுதந்திரத்துக்காகவும் சமமான உரிமைகளுக்காகவும் நின்றது. வளர்ச்சியடைந்த நாடுகள்-ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், நார்வே, மற்ற நாடுகள் - ஒரு உண்மையான ஜனநாயக அமைப்பின் கீழ் சுதந்திரமான தேசிய இனங்கள் சமாதானமாக எப்படி ஒத்து வாழ்கின்றன அல்லது ஒன்றுக் கொன்று எப்படி சமாதானமாகப் பிரிந்து விடுகின்றன என்பதற்கு நமக்கு உதாரணங்களைத் தருகின்றன.

இன்று பூர்ஷ்வாக்கள் தொழிலாளர்களைக் கண்டு அஞ்சி பிற்போக்காளர்களோடு, புரிஷ்கேவிச்சுகளோடு கூட்டணி ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்; அவர்கள் ஜனநாயகத்தைக் காட்டிக் கொடுத்து, தேசிய இனங்களுக்கிடையே ஒடுக்கு முறையை அல்லது சமத்துவமாக இல்லாத உரிமைகளை வலியுறுத்தித் தொழிலாளர்களைத் தேசியவாதக் கோஷங்களின் மூலம் கெடுக்கிறார்கள்.

நம் காலத்தில் தேசங்களின் உண்மையான சுதந் திரத்தையும் எல்லா தேசங்களின் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் காப்பாற்றுவது பாட்டாளி வர்க்கம் மட்டுமே.

பல தேசங்கள் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் ஒன்றுகூடி வாழ்வதற்கும் அல்லது பிரிந்து போய் வெவ்வேறு அரசுகளை அமைத்துக் கொள்வதற்கும் (அது அவர்களுக்கு அதிக வசதியாக இருக்குமானால், தொழிலாளி வர்க்கத்தினால் காப்பாற்றப்படுகிற முழுமையான ஜனநாயகவாதம் அவசியமாகும். எந்த தேசத்துக்கும் அல்லது எந்த ஒரு மொழிக்கும் தனியான சிறப்பு உரிமைகள் கிடையாது! ஒரு தேசியச் சிறுபான்மையைப் பொறுத்தவரையிலும் மிகக் குறைவான அளவுக்கு ஒடுக்குமுறை அல்லது மிகச் சிறிய அநீதி கூடக் கிடையாது! இவை தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் கொள்கைகள்.

முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் வெவ்வேறு தேசங்களின் தொழிலாளர்களைப் பிரித்து என்ன விலை கொடுத்தாவது பிரித்து வைத்திருக்க விரும்புகிறார்கள் ஆனால் ஆட்சியிலிருப்போர் கோடிக் கணக்கில் பணத்தைப் போட்டிருக்கும் லாபகரமான தொழில்களில் (லேனா தங்கச் சுரங்கங்களைப் போல) பங்குதாரர்கள் என்ற முறையில் சிறப்பான வகையில் கூடி வாழ்கிறார்கள்; மரபுவழிக் கிறிஸ்தவர்களும் யூதர்களும், ருஷ்யர்களும் ஜெர்மானியர்களும், போலிஷ்காரர்களும் உக்ரேனியர்களும், மூலதனத்தை வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் ஓன்றுசேர்ந்து எல்லா தேசங்களின் தொழிலாளர்களையும் சுரண்டுகிறார்கள்.

வர்க்க உணர்வு படைத்த தொழிலாளர்கள் எல்லா தேசங்களின் தொழிலாளர்களுக்கும் இடையே ஒவ்வொரு தொழிலாளர் ஸ்தாபனத்திலும் கல்வி, தொழிற்சங்கம், அரசியல், இதரவை --முழு ஒற்றுமையை வலியுறுத்துகிறார்கள். காடேட்டுகளான கனவான்கள் உக்ரேனியர்களுக்குச் சம உரிமைகள் வழங்குவதன் முக்கியத்துவத்தை மறுப்பது அல்லது குறைவாக மதிப்பதன் மூலம் தங்களையே அவமானப்படுத்திக் கொள்ளட்டும், எல்லா தேசங்களின் பூர்ஷ்வாக்களும் தேசியக் கலாச்சாரம், தேசியக் கடமைகள், இதரவை, இதரவை பற்றி பொய்யான சொற்களை உபயோகிப்பதன் மூலம் கிடைக்கின்ற சுகத்தை அனுபவிக்கட்டும்.

தேசியக் கலாச்சாரம், ''தேசிய-கலாச்சார சுயாட்சி'' பற்றிய இனிப்பான பேச்சுக்கள் தங்களைப் பிரித்து வைத்திருப்பதற்குத் தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா தேசங்களின் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட முயற்சியின் மூலம் ஸ்தாபனங்களில் முழு சுதந்திரத்தையும் முழுமையான சமத்துவ உரிமைகளையும் காப்பாற்றி நிற்கிறார்கள் - அதுவே உண்மையான கலாச்சாரத்துக்கு உத்தரவாதம்.

உலக முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் - சுதந்திரத்துக்கு ஆதரவாக, ஒடுக்கு முறைக்கு எதிராக இருப்பவர்கள் நெடுங்காலமாக இதற்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய உலகத்துக்கு, தேசிய ஒடுக்குமுறை, தேசிய சச்சரவு, தேசியத் தனிமை என்று உலகத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஒரு புதிய உலகத்தை, எல்லா தேசங்களின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை என்ற உலகத்தை, எவ்விதமான தனி உரிமைகளும் அல்லது மிகச் சிறிய அளவுக்கு மனிதனை மனிதன் ஒடுக்கு வது கூட இல்லாத உலகத்தை எதிரே நிறுத்துகிறார்கள்
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் – பக்கம் – 78-81)

Monday 15 July 2019

முரணுள்ள முதலாளி வர்க்கத்தை எதிர்ப்பதில் பாட்டாளி வர்க்கத்தின் கைகள் கட்டுண்டு போகும் அபாயத்தைப் பற்றி லெனின்:-


“ஜனநாயகப் புரட்சி முழு வெற்றி பெறும் போதுதான் முரணுள்ள முதலாளி வர்க்கத்தை எதிர்க்கும் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் கைகள் கட்டுண்டு போகாமல் விடுபட்டு இருக்கும்; அப்போது மட்டுமே அது முதலாளித்துவ ஜனநாயகத்தில் ''கலந்து கரைந்து'' போகாமல் புரட்சி முழுவதின் மீதும் தன்னுடைய பாட்டாளி வர்க்க முத்திரையை, சொல்லப்போனால் பாட்டாளி வர்க்க - விவசாயி மக்களின் முத்திரையைப் பதியவைக்கும். 

சுருங்கச் சொன்னால், முரணுள்ள முதலாளித்துவ ஜனநாயகத்தை எதிர்க்கும் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் கைகள் கட்டுண்டு போவதைத் தவிர்க்க வேண்டுமானால் விவசாயிமக்களுக்குப் புரட்சி உணர்வூட்டி எழுப்புவதற்கும், அதன் தாக்குதலுக்கு வழிகாட்டிச் செலுத்துவதற்கும், அதன் வழியே முரணற்ற பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துவத்தை நிலைநாட்டுவதற்கும் போதிய வர்க்க உணர்வும் வலிமையும் பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்க வேண்டும்.

முரணுள்ள முதலாளி வர்க்கத்தை எதிர்க்கும் போராட் டத்தில் நம் கைகள் கட்டுண்டு போகும் அபாயத்தைப் பற்றிய பிரச்சினை யிலுள்ள் விவகாரம் இதுவே.”
(ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின்
இரண்டு போர்த்தந்திரங்கள்- பக் 254-256)

Wednesday 10 July 2019

ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு என்ற நூலினுடைய முன்னுரை (பகுதி) - மார்க்ஸ்


ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய விமர்சனம் சாராம்சத்தில் நிறைவடைந்துவிட்டது. மதத்தைப் பற்றிய விமர்சனம் அனைத்தும் பற்றிய விமர்சனத்தின் முன்நிபந்தனையாக உள்ளது.

.. பரலோகத்தில் வினோதார்த்தமான யதார்த்தத்தில் அதிமானுடனைக் காணவிரும்பிய மனிதன் அங்கு தனது சொந்தப் பிரதிபிம்பத்தைத் தவிர வேறு எதையுமே காணவில்லை, தான் தேடுகின்ற இடத்தில் அந்த அதிமானுடன், தன்னையே ஒத்திருக்கும் தோற்றத்தைக் காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த இயலாது. மனிதன் தனது உண்மையான யதாரத்தத்தையே கண்டறிந்தாக வேண்டும்.
..
மதஎதிர்ப்பு விமர்சனத்தின் அடிப்படையாக இருப்பது: மனிதனே மதத்தை உண்டாக்குகிறான், மதம் மனிதனை உண்டாக்குவதில்லை.  இதையே வேறு வார்த்தைகளில் கூறினால், தன்னைத்தானே இன்னும் கண்டறிந்து கொள்ளாதவன் அல்லது தன்னைத் தானே மறுபடியும் இழந்துவிட்டவனின்  தன்னறிவும் தன்னுணர்வும்தான் மதமாகும். ஆனால் மனிதன் இவ்வுலகிற்கு அப்பால் அமர்ந்திருக்கும் கற்பனையானவன் அல்ல.

மனிதன் என்பவன் மனிதனின் உலகம், நாடு, சமூகம் அனைத்தும் தான். இந்த அரசும், சமூகமும் உலகம் பற்றிய தலைகீழ் உணர்வாக மதத்தைப் படைத்துள்ளன. ஏனென்றால் அவையும் தலைகீழ் உலகமே. அந்த உலகத்தின் பொதுவான கொள்கையாகவும், அறிவுத் திரட்டலாகவும், தர்க்கத்தின் பிரபல வடிவமாகவும், சமூகத்தின் ஆன்மீக கௌரமாகவும் அது மதிக்கப்படுகிறது. ஒழுக்க விதிகளைக் கட்டுப்படுத்துகிறது. மன ஆறுதலுக்கான பொதுவான சாதனமாகவும் தோன்றுகிறது. அது மனித சாராம்சத்தின் விசித்திரமான புரிந்துணர்வு ஆகும். ஏனெனில் மனித சாராம்சம் என்பது இன்னும் எந்த உண்மையான யதார்த்தத்தையும் அடையவில்லை. எனவே, மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது, ஆன்மீக மணம் வீசும் மதத்தைக் கொண்டு  விளங்கும் மறுஉலகத்தை எதிர்த்து நடத்தும் தொடர்பு மிக்க போராட்டம்தான்.

மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது.

மக்கள் உண்மையான மகிழ்ச்சி பெறுவதற்காக, மக்களது மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை அழிப்பது அவசியமாக்குகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும். மதம்பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்கு பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது.

கட்டுத்தளையின் மீதுள்ள கற்பனை மலர்களை விமர்சனம் பிடுங்கி எறிந்துவிட்டது. எந்தவிதமான மன ஆறுதலும், மனோகற்பிதமும் இல்லாமல் மனிதன் அந்தத் தளையைத் தரித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, அவன் அந்தத் தளையை உதறித் தள்ளி, ஜீவனுள்ள மலரைப் பறித்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். மதத்தின் விமர்சனம் என்பது மனிதனின் பிரம்மையைக் குலைத்து, அவனைச் சிந்திக்கவும், செயல்படுத்தவும், அவனது யதார்த்தத்தை அவனே உருவாக்கவும் பிரம்மையைக் குலைந்த மனிதனைப்போல் அவன் பகுத்தறிவுக்கு மீண்டு வந்து, தன்னைத்தானே அவன் சுற்றிவரவும், அதன்மூலம் அவனது உண்மையான சூரியனைச் சுற்றிவரவும் செய்கிறது. மனிதன் தன்னைத்தானே சுற்றி வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச் சூரியன்தான் மதம் என்பது.

எனவே, வரலாற்றின் கடமை என்பது, உண்மைக்குப் புறம்பான உலகம் மறைந்தவுடனேயே, இந்த உலகத்தின் உண்மையை நிலைநாட்ட வேண்டியதுதான். வரலாற்றிற்குப் பணியாற்றுவதற்காகக் காத்திருக்கும் தத்துவத்தின் உடனடிக் கடமையும், மனிதன் தன்னைத் தானே அன்னியமாகிக் காட்டும் மகானுபாவ உருவத்தை திரைகிழித்துக் காட்டியவுடனேயே, அதன் புனிதமற்ற உருவங்களிலுள்ள தன்னைத்தானே அன்னியப்படுத்தும் தன்மையையும் திரைகிழித்துக் காட்டவேண்டியதுதான். இவ்வாறாக. பரலோகத்தைப்பற்றிய விமர்சனம் பூவுலகைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது, மதத்தைப் பற்றிய விமர்சனம் உரிமையைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது.
..
விமர்சனம் என்ற ஆயுதத்தை, நிச்சயமாக ஆயுதத்தின் விமர்சனத்தை அகற்ற முடியாது. பொருளாயத பலத்தைப் பொருளாயத பலத்தினால்தான் தூக்கி எறிய முடியும். ஆனால் மக்கள் மனத்தைப் பற்றிப் பிடித்தவுடனேயே, கொள்கையும் ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது. கொள்கை மனித உணர்ச்சியைத் தொட்டுச் சாதித்தவுடனேயே அது மக்களைப் பற்றிப் பிடித்துவிடுகிறது, அது பகுத்தறிவு பூர்வமாக மாறியவுடனேயே மனித உணர்ச்சியைத் தொட்டுச் சாதித்துவிடுகிறது. பகுத்தறிவு பூர்வமாக ஆவதெனில், அது விஷயத்தின் ஆணிவேரையே பற்றிப் பிடிக்கவேண்டும். ஆனால் மனிதனுக்கோ மனிதன்தான் ஆணிவேர். ஜெர்மன் கொள்கையின் பகுத்தறிவு வாதத்துக்கும், அதன் காரணமாக அதன் காரியார்த்தமான சக்திக்கும் உரிய கண்கண்ட சாட்சியம் எதுவெனில், அது உறுதியாக, உறுதிப்பாடான மத ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது.

மதத்தைப் பற்றிய விமர்சனம் மனிதனுக்கு மனிதன்தான் உன்னதமாக சாராம்சம் என்பதைப் போதிப்தோடு, எனவே கீழ்த்தரமாக, அடிமையாக, ஒதுக்கப்பட்டவனாக, வெறுக்கத்தக்க சாராம்சமாக மனிதனை ஆக்கிவைத்துள்ள எல்லா உறவுகளையும், நாய்களின் மீது வரிபோடவேண்டும் என்று திட்டமிடப்பட்ட பொழுது  அட, அப்பாவி நாய்களே  அவர்கள் உங்களை மனிதர்களைப்போல் நடத்த விரும்புகிறார்களே- என்று கூக்குரல் எழுப்பிய ஒரு பிரஞ்சுக்காரனைக் காட்டிலும் விளக்கமாகக் கூறிவிட முடியாத, அந்த உறவுகள் அனைத்தையும் தூக்கி எறியவேண்டிய திட்டவட்டமான அத்தியாவசியத்தையும் போதிப்பதோடு அது முடிவடைகிறது.
..
இதற்கிடையில், அடிப்படை பூர்வமான ஜெர்மன் புரட்சியின் பாதையில் ஒரு பெரும் தடை குறுகிட்டு நிற்பதாகத் தோன்றுகிறது.

ஏனெனில், புரட்சிகளுக்கு ஒரு செயலற்ற தன்மையும், ஒரு பொருளாயத  அடிப்படையும் தேவை. எந்த அளவுக்கு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அந்த மக்களிடையே கோட்பாடும் நிறைவு செய்விக்கப்படுகிறது. ஆனால், ஜெர்மானியச் சிந்தனையின் கோரிக்கைகளுக்கும், ஜெர்மானிய யதார்த்தம் அளிக்கும் விடைகளுக்குமிடையே உள்ள பூதாகரமான வேற்றுமையானது.  குடிமை சமூதாயத்துக்கும் அரசுக்கும், குடிமை சமூதாயத்துக்கும் தனக்குமே இடையேயுள்ள அதேபோன்ற வேற்றுமையைக் கண்டுகொள்ளுமா? கோட்பாடார்த்தமான தேவைகளே உடனடியான காரியார்த்த தேவைகளாகிவிடுமா? யதார்த்த சித்திபெறுவதற்குச் சிந்தனை மட்டும் பாடுபட்டால் போதாது, யதார்த்தமும் சிந்தனையை நோக்கிப் பாடுபட வேண்டும்.

ஆனால் நவீன நாடுகளைப்போல் அரசியல் விடுதலைக்கான இடைநிலைக் கட்டத்துக்கு அதே சமயத்தில் ஜெர்மனி உயர்ந்து வந்துவிடவில்லை. கோட்பாடு விஷயத்தில் அது மேம்பட்டு எட்டிவிட்ட கட்டங்களுக்கு அது நடைமுறையில் இன்னும் எட்டி வந்துவிடவில்லை .. .. ..
..
.. ஒரு ஜெர்மன் விடுதலைக்கான உறுதிப்பாடான சாத்தியப்பாடு எங்கேயுள்ளது?

விடை:- ..
..இறுதியாக, சமுதாயத்தின் ஏனைய எல்லாப் பகுதிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பகுதி, அதன் மூலம் ஏனைய எல்லாச் சமுதாயப் பகுதிகளையும் விடுவிக்காத ஒரு பகுதி ஒரே வார்த்தையில் சொன்னால் மனிதனின் பூரண இழப்பாக உள்ள ஒரு பகுதி அது, எனவே அந்தப் பகுதி மனிதனை  மீண்டும் பூரணமாக வென்று மீள்வதன் மூலம்தான் தன்னைத்தானே வெற்றிகொள்ள முடியும். சமுதாயம் இத்தகைய ஒரு குறிப்பிட்ட பகுதியாக சீர்குலைந்து உருமாறுவதுதான் பாட்டாளி வர்க்கம்.

வளர்ந்துவரும் எந்திரத் தொழில் இயக்கத்தின் விளைவாகப் பாட்டாளி ஜெர்மனியில் உருவாகத் தொடங்கியுள்ளான். ஏனெனில், இயற்கையாகத் தோன்றும் ஏழையராக இல்லாமல், செயற்கையாகப் பஞ்சையராக்கப்பட்டவர்கள் ..  .. .. ..
தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.
..
நாம் இதன் முடிவைத் தொகுத்துச் சொல்வோம்:

ஜெர்மனியின் நடைமுறை சாத்தியமான ஒரே விடுதலையானது, மனிதனுக்கு மனிதன்தான் மேன்மையான சாராம்சம் என்று பிரகடனப்படுத்தும் அந்தக் கொள்கையின் கருத்தோட்டத்திலிருந்து கிட்டும் விடுதலைதான்.
..
ஜெர்மானிய விடுதலை என்பது மனிதனின் விடுதலைதான். இந்த விடுதலையின் மூளை தத்துவம், இதன் இதயம் பாட்டாளி வர்க்கம்.”

Monday 8 July 2019

11)புதிய உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் அந்தப் பழைய சமுதாய அமைப்பு முறைக்குள்ளேயே முளைக்கின்றன என்பது பற்றி ஸ்டாலின்:-


புதிய உற்பத்திச் சக்திகளும் சரி, அவற்றிற்குகந்த உற்பத்தி உறவுகளும் சரி பழைய சமுதாய அமைப்பு முறைக்கு அப்பால் நின்றபடி, அந்த அமைப்பு முறை அழிந்து போன பிறகு தனியே முளைத்தெழுவதில்லை, அதற்குப் பதிலாக, அந்தப் பழைய சமுதாய அமைப்பு முறைக்குள்ளேயேதான் அவை முளைக்கின்றன. மனிதன் ஆர அமரச் சிந்தித்து உணர்வுபூர்வமாக வேலை செய்வதன் விளைவாக அவை எழுவது மில்லை. போகிற போக்கிலே உணர்வற்ற வகையிலே மனிதச்சித்தத்திற்கு அப்பாற்பட்டுத் தன்னியல்பாக அவை உதிக்கின்றன. போகிற போக்கிலே, மனித சித்தத்திற்கு அப்பாற்பட்டு அவை நிகழ்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவதாக, இந்த உற்பத்தி முறை வேண்டுமா அல்லது அந்த உற்பத்திமுறை வேண்டுமா என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள மனிதர்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பது ஒரு காரணம். ஏனென்றால், ஒவ்வொரு புதிய தலைமுறையும் பிறந்து வாழத் தொடங்கும் போது, தனக்கு முன் சென்ற தலைமுறைகளின் நடவடிக்கைகளின் விளைவாக ஏற்கனவே நிலவிக் கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகளையும், உற்பத்தி உறவுகளையும் அது காண்கிறது. எனவே, உற்பத்தித் துறையில் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள எல்லா வற்றையும் அந்தத் தலைமுறை ஏற்றுக் கொண்டு, அவற்றிற்கு ஏற்ற வகையில் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் முதன் முதலில் ஏற்படுகிறது. அப்படிச் செய்தால்தான் பொருளாய்த செல்வங்களை அதனால் உற்பத்தி செய்ய இயலும்.

இரண்டாவதாக: ஏதாவதொரு உற்பத்திக் கருவியை முக்கிய மாகக் கருது கிற காலத்தில் - உற்பத்தி சக்திகளின் ஏதாவதொரு அம்சத்தை முதன்மைப்படுத்துகிற காலத்தில் - அப்படி முக்கியப் படுத்து வதனால் சமுதாயத் துறையில் என்ன விளைவுகள் உண்டாகும் என்று மனிதர்கள் அறிவதில்லை; புரிந்து கொள்வது மில்லை, சிந்திக்கவும் காத்திருப்பதில்லை. தங்களுடைய அன்றாட நலன்களைப் பற்றித்தான், தங்களுடைய உழைப்பின் பளுவை எப்படிக் குறைப்பது என்பதைப் பற்றித்தான் - தமக்கு ஏதாவது நேரடியாகக் கை மேல் கிடைக்கக்கூடிய உருப்படியான பலன் களைப் பெறுவதைப் பற்றித்தான் - அவர்களின் சிந்தனை உள்ளது.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- பக்கம் 49-50)


10)மார்க்சிய - லெனினியத்தின் வலிமையும் உயிர்த் துடிப்பும் எதிலிருந்து பிறக்கின்றன?-ஸ்டாலின்:-


மார்க்சிய - லெனினியத்தின் வலிமையும் உயிர்த் துடிப்பும் எதிலிருந்து பிறக்கின்றன? சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் வளர்ச்சியின் தேவைகளைச் சரியாய் பிரதிபலிக்கும்படியான ஒரு முற்போக்கான கோட்பாட்டை பற்றுக்கோடாகக் கொண்டிருப்பதிலிருந்துதான் - கோட்பாட்டை ஒரு சரியான மட்டத்துக்கு உயர்த்தி வைத்ததிலிருந்துதான் - மக்களை அமைப்பாகத் திரட்டவும், அணி வகுக்கவும், மாற்றியமைக்கவும் இந்தக் கோட்பாடு பெற்றுள்ள ஆற்றலை ஒரு துளிகூட விடாமல் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்வது தனது கடமை என்று கருதுவதிலிருந்துதான் - அந்த வலிமையும் உயிர்த் துடிப்பும் பிறக்கின்றன.

சமுதாய நிலைமைக்கும், சமுதாய உணர்வுக்கும் இடையிலுள்ள உறவு என்ன - பொருளாயத வாழ்வின் வளர்ச்சியின் நிலைமைக ளுக்கும் சமுதாயத்தின் அறிவுசார்ந்த (spiritual) வாழ்வின் வளர்ச்சிக்கும் இடையி லுள்ள உறவு என்ன என்று கேட்கப்படும் கேள்விக்கு வரலாற்று பொருள்முதல்வாதம் கொடுக்கும் பதில் அதுதான்.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- பக்கம் 29)

09)புதிய சமுதாயக் கருத்துக்களும், கொள்கைகளும் எப்பொழுது உதிக்கின்றன?- என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிக்கிறார்:-


புதிய சமுதாயக் கருத்துக்களும், கொள்கைகளும் எப்பொழுது உதிக்கின்றன? சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் வளர்ச்சியானது சமுதாயத்தின் முன், நிறைவேற்ற வேண்டிய புதிய கடமைகளை வைத்த பிறகுதான் அவை உதிக்கின்றன. அதற்குமுன் உதிப்பதில்லை . ஆனால், ஒரு தடவை உதித்து விட்டால் போதும், அப்புறம் அவை மிகவும் ஆற்றல் மிக்க சக்தியாக மிளிர்கின்றன. சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு வளர்ச்சி நம்முன் வைக்கும் புதிய கடமைகளை நிறைவேற்றுவதை அந்தச் சக்தி சுலபமாக்குகின்றது. சமுதாயம் முன்னேறுவதை அது சுலபமாக்குகிறது; இங்கேதான் மக்களை அமைப்பாக மாற்றும் சக்தி, மக்களை அணி திரட்டும் சக்தி, மக்களைப் புதிய சமுதாயமாக மாற்றியமைக்கும் சக்தி வெளிப்படுகிறது.

புதிய சமுதாயக் கருத்துக்களும், கொள்கைகளும், புதிய அரசியல் கண்ணோட்டங்களும், புதிய அரசியல் நிறுவனங்களும் ஏன் தோன்றுகின்றன?

ஏனென்றால், அவை சமுதாயத் துக்குத் தேவைப்படுகின்றன. ஏனென்றால், அவற்றின் அணி திரட்டும் படியான, அமைப்பாக்கும் படியான, புதிய நிலையை உருவாக்கும் படியான வேலைகள் நடக்காமல் சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு வளர்ச்சியானது நம்முன் வைக்கும் கடமை களை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு வளர்ச்சி முன் வைக்கிற கடமைகளிலிருந்து தோன்றி இந்தப் புதிய சமுதாயக் கருத்துக்களும் கொள்கைகளும் பல வந்தமாக வெடித்துக் கொண்டு வெளிக் கிளம்புகின்றன; அவை மக்களின் சொத்தாகின்றன. சமுதாயத்திலுள்ள நசிந்து வரும் சக்திகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி அமைப்பாக மாற்றி அமைக் கின்றன. அப்படிச் செய்வதன் மூலமாக சமுதாயத்தின் பொருளா யத வாழ்வின் வளர்ச்சியைத் தடுக்கும் இந்தச் சக்திகளைத் தகர்த் தெறிவதை எளிதாக்குகின்றன

எனவே, சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் வளர்ச்சி - சமு தாய நிலைமையின் வளர்ச்சி முன்வைக்கிற அவசரக் கடமைகளை அடிப்படையாகக் கொண்டுதான், சமுதாயக் கருத்துக்களும் கொள்கைகளும் அரசியல் நிறுவனங்களும் எழுகின்றன. அவ்வாறு எழுந்தவுடன் அவை சமுதாய நிலைமையின் மீதும் சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் மீதும் எதிர் வினை ஆற்றுகின்றன. சமு தாயத்தின் பொருளாயத வாழ்வின் வளர்ச்சி முன்வைக்கின்ற கடமை களை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் சமுதாயம் மேலும் வளர் வதற்கும் அவசியமான நிலைமைகளை அவை உருவாக்குகின்றன.

இது தொடர்பாக மார்க்ஸ் கூறுவதாவது: ''மக்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டவுடன் தத்துவம் எனப்பட்டது ஒரு பௌதீக சக்தியாக மாறிவிடுகிறது.'' ('ஹெகெலினுடைய உரிமை பற்றிய தத்துவத்தின் மீதான ஒரு விமர்சனம்' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை)

எனவே சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் நிலைமைகள் மீது செல்வாக்குச் செலுத்த வேண்டுமென்றால் - அவற்றின் வளர்ச் சியைத் துரிதப்படுத்த வேண்டு மென்றால் - எப்படிப்பட்ட சமு தாயக் கோட்பாட்டைப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி பற்றுக் கோடாகக் கொள்ள வேண்டும்? சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை எந்தச் சமுதாயக் கோட்பாடு சரியாகப் பிரதிபலிக்கிறதோ, அப்படிப்பட்ட தொரு கோட் பாட்டைப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி பற்றுக்கோடாகக் கொள்ள வேண்டும். அப்படிச் சரியாகப் பிரதிபலிக்கும் ஒரு சமுதாயக் கோட் பாடுதான், பெருவாரியான மக்களை இயங்கும்படி செய்து, அணி சேர்த்து, பிற்போக்குச் சக்திகளைத் தூள்தூளாக்கவும், சமுதாயத்தின் முற்போக்குச் சக்திகள் முன்னேறுவதற்கு பாதையை ஒழுங்கு படுத்தவும் தயாராக, மக்களை அமைப்பு ரீதியில் பாட்டாளி வர்க்கக் கட்சியின் மாபெரும் படையாகத் திரட்டுவதற்கும் ஆற்றல் பெற்றிருக்கும்.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- பக்கம் 27-28)