(ஏகாதிபத்தியமும்
சோஷலிசத்தில் பிளவும் என்ற நூலில் இருந்து)
ஏகாதிபத்தியத்துக்கும்
ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் (சமூக-தேசியவெறியின் வடிவில்) கண்டிருக்கும்
ஈனத்தனமான, அருவருக்கத்தக்க வெற்றிக்கும் ஒட்டுறவு உண்டா?
இது நவீனகால சோஷலிசத்துக்குரிய
அடிப்படைப் பிரச்சினையாகும். முதலாவதாக, நாம் வாழும் இச்சகாப்தமும் தற்போது நடைபெறும்
யுத்தமும் ஏகாதிபத்தியத் தன்மைவாய்ந்தவை என்பதையும், இரண்டாவதாக, சமூக-தேசிய வெறியும்
சந்தர்ப்பவாதமும் பிரிக்க முடியாதவாறு வரலாற்று வழியில் இணைந்திருக்கின்றன என்பதையும்,
மற்றும் அரசியல் சித்தாநதத்தில உள்ளார்ந்த முறையில் இவை ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன
என்பதையும் நமது கட்சி வெளியீடுகளில் முழு அளவுக்கு நிலைநாட்டிவிட்ட நாம், இந்த அடிப்படைப்
பிரச்சினையைப் பகுத்தாராய முற்படலாம், அவசியம் முற்பட்டாகவும் வேண்டும்.
ஏகாதிபத்தியம் குறித்து
எவ்வளவு முடியுமோ அவ்வளவு துல்லியமான, முழுமையான
இலக்கணத்தை அளித்து நாம் இந்தப் பகுத்தாய்வைத் தொடங்க வேண்டும். ஏகாதிபத்தியமானது முதலாளித்துவத்தின்
தனியொரு வரலாற்றுக் கட்டமாகும். அதன் தனித்தன்மை மூன்று வகைப்பட்டது, ஏகாதிபத்தியமானது
(1) ஏகபோக முதலாளித்துவமாகும்,
(2) புல்லுருவித்தனமான,
அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமாகும்,
(3) அந்திமக்கால முதலாளித்துவமாகும்.
தடையற்ற போட்டி நீக்கப்பெற்று
அதற்குப் பதிலாய் ஏகபோகம் வளர்ச்சியுறுவதானது ஏகாதிபத்தியத்தின் அடிப்படைப் பொருளாதார
இயல்பு, அதன் சாரப்பொருள். ஏகபோகத் தன்மை
பிரதானமான ஐந்து வடிவங்களில் வெளிப்படுகிறது,
(1) கார்ட்டல்கள், சிண்டிக்கேட்டுகள்,
டிரஸ்டுகள் – முதலாளிகளது இந்த ஏகபோகக் கூட்டுகள் தோற்றுவிக்கப்படும் அளவுக்குப் பொருளுற்பத்தியின்
ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுகிறது,
(2) பெரிய வங்கிகளின் ஏகபோக
நிலை- அமெரிகிகா, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் மூன்று, நான்கு அல்லது ஐந்து பகாசுர
வங்கிகள் நாட்டின் பொருளாதார வாழ்வு அனைத்தையுமே தம் பிடியில் இருத்திக் கொண்டு ஆட்டிப்
படைக்கின்றன,
(3) மூலப்பொருள்களுக்கான
ஆதாரங்களை முதலாளித்து டிரஸ்டுகளும் நிதி ஆதிக்ககும்பலும் கைப்பற்றிக் கொண்டுவிடுகின்றன
(நிதி மூலதனம் என்பது வங்கி மூலதனத்துடன் இணைந்த ஏகபோகத் தொழில் துறை மூலதனமாகும்),
(4) சர்வதேசக் கார்ட்டல்கள்
உலகைத் தம்மிடையே (பொருளாதாரக்) கூறுபோட்டுப் பாகப் பிரிவினை செய்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது.
இவ்வகைச் சர்வதேசக் கார்ட்டல்கள் ஏற்கனவே ஒரு நூறுக்கு மேற்பட்டவை உள்ளன, இவை உலகச்
சந்தை அனைத்தையுமே தமது ஆதிக்கத்திற்கு உட்படுத்திக் கொண்டு, அதனை “இணக்கமுடன்” தம்மிடையே
பாகப்பிரிவினை செய்து கொள்கின்றன- யுத்தத்தின் மூலம் அது மறுபிரிவினை செய்யப்படும் வரை இந்த ஏற்பாடு நீடிக்கிறது. ஏகபோகமல்லாத முதலாளித்துவத்தில்
நடைபெற்று வந்த சரக்கு ஏற்றுமதியைப் போலல்லாது இப்பொழுது மூலதமே ஏற்றுமதி செய்யப்படுவதானது
இக்கட்டத்துக்குரிய தனி விசேஷமாகும், இது பொருளாதார வழியிலும் பிரதேச-அரசியல் வழியிலும்
உலகின் பாகப் பிரிவினையுடன் நெருங்கிய முறையில் இணைந்த நிகழ்ச்சியாகும்,
(5) உலகின் பிரதேசம் (காலனிகள்)
பங்கிட்டுக் கொள்ளப்படுதல் நிறைவுற்றுவிட்டது.
முதலாளித்துவத்தின் உச்ச
கட்டமான ஏகாதிபத்தியம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், பிற்பாடு ஆசியாவிலும் 1898க்கும் 1914க்கும் இடையில்
இறுதி உருப்பெற்றது. ஸ்பானிய-அமெரிக்கப் போர் (1898), ஆங்கிலோ-போயர் போர்
(1899-1902), ருஷ்ய-ஐப்பானியப் போர் (1904-05), 1900ல் ஐரோப்பாவில் வெடித்த பொருளாதார
நெருககடி ஆகிய இவை, உலக வரலாற்றின் இந்தப் புதிய சகாப்தத்துக்குரிய முக்கிய மைல்கற்களாகும்.
புல்லுருவித்தனம் உடையதாகிவிட்ட
அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமே ஏகாதிபத்தியம் என்பது உற்பத்திச் சாதனங்களில்
தனியார் உடைமை நிலவும் அமைப்பில் ஒவ்வொரு ஏகபோகத்துக்கும் உரிய குண விசேஷமாய் அமைந்துவிடும்
அழுகல் போக்கில் யாவற்றுக்கும் முதலாய் வெளியாகிறது. ஜனநாயக-குடியரசுவாத ஏகாதிபத்திய
முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும், பிற்போக்கு-முடியரசுவாத ஏகாதிபத்திய முதலாளித்துவ
வர்க்கத்தாருக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவருகிறது, இரு வகையினருமே உயிருள்ள நிலையிலேயே
அழுகத் தொடங்கிவிட்டதே இதற்குக் காரணம் (ஆனால் தொழில் துறையின் தனிப்பட்ட கிளைகளிலும்,
தனிப்பட்ட சில நாடுகளிலும், தனிப்பட்ட சில காலங்களிலும் முதலாளித்துவம் அசாதாரண வேகத்தில்
வளர முடியாது என்பதல்ல இதன் அர்த்தம்).
இரண்டாவதாக, தமது மூலதனத்தைக்
கொண்டு சுகஜீவிகளாய்ச் “சீட்டுக் கத்தரித்து” ஜீவிக்கும் முதலாளிகளின் ஒரு பெரும் பிரிவு
தோதற்றுவிக்கப்படுவதில் முதலாளித்துவத்தின் அழுகல் தன்மை வெளியாகிறது. இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்சு, ஜெர்மனி – தலைமையான
இந்நான்கு ஏகாதிபத்திய நாடுகளில் ஒவ்வொன்றிலும் பணவுறுதிச் சீட்டுகளில் 10,000 அல்லது
15,000 கோடி பிராங்கு வரை மூலதனம் போடப்பட்டிருக்கிறது, இதிலிருந்து இந்நாடு ஒவ்வொன்றும்
ஆண்டுக்கு ஐந்நூறு கோடியிலிருந்து எண்ணூறு கோடிக்குக் குறையாமல் வருமானம் பெறுகிறது.
மூன்றாவதாக, மூலதன ஏற்றுமதியானது
புல்லுருவித்தனம் உச்சநிலைக்கு உயர்ந்துவிடுவதைக் குறிக்கிறது.
நான்காவதாக, “நிதி மூலதனம்,
ஆதிக்கத்துககாகப் பாடுபடுகிறதேயன்றி சுதந்திரத்துக்கா அல்ல”. அரசியல் பிற்போக்கு சர்வவியாபகம்
ஆகிவிடுவது ஏகாதிபத்தியத்துக்குரிய குண விசேஷமாகும். பிரம்மாண்ட அளவிலான லஞ்சமும் ஊழலும்
எல்லா வகையான பனாமா விவகாரங்களும் மலிந்துவிடுகின்றன.
ஐந்தாவதாக, ஒடுக்கப்படுகிற
தேசங்கள் மீதான சுரண்டல்- இது நாடுபிடித்து இணைக்கும் முயற்சிகளுடன் இரண்டறக் கலந்ததாகும்-
இன்னும் முக்கியமாய் ஒருசில “பேரரசுகளின்” சுரண்டல், “நாகரிக” உலகினைக் கோடானு கோடியான
பின்தங்கிய தேசத்தவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் புல்லுருவியாக மேலும்மேலும் மாற்றிவருகிறது.
ரோமானியப் பாட்டாளி சமூகத்தின்
செலவில் வாழ்ந்தான், ஆனால் நவீன காலச் சமூகம் நவீனகாலப் பாட்டாளியின் செலவில் வாழ்கிறது.
சிஸ்மொண்டீயின் பொருட் செறிவுள்ள இந்த காக்கியத்தை மார்க்ஸ் வலியுத்திக் குறிப்பிட்டார்.
ஏகாதிபத்தியமானது இந்நிலைமையை ஓரளவு மாற்றியுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி
வர்க்கத்தில் சலுகை படைத்த மேல்தட்டுப் பகுதி ஓரளவுக்கு, கோடானு கோடியான பின்தங்கிய
தேசத்தவர்களின் செலவில் வாழ்கிறது.
ஏகாதிபத்தியமானது அந்திமக்கால
முதலாளித்துவமாய், சோஷலிசத்துக்கு மாறிச் செல்வதற்குரிய முதலாளித்துவமாய் இருப்பது
ஏனென்பது நன்கு விளங்குகிறது, முதலாளித்துவத்தில் இருந்து முளைக்கும் ஏகபோகமானது ஏற்கனவே
மரிக்கத் தொடங்கிவிட்ட முதலாளித்துவத்தை, சோஷலிசத்துக்கு அது மாறிச் செல்வதற்கான கட்டத்தின்
துவக்கத்தைக் குறிப்பதாகும். ஏகாதிபத்தியத்தால் உழைப்பு மகத்தான அளவிக்கு சமூகமயமாக்கப்படுவதாலும்
(ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களான முதலாளித்துவப் பொருளியலாளர்கள் இதனைப் “பின்னிப்பிணைதல்”
என்பதாகக் குறிப்பிடுகிறார்கள்) இதே விளைவு உண்டாகிறது.
ஏகாதிபத்தியத்துக்கு நாம்
அளித்திடும் இந்த இலக்கணம் தம்மைக் காரல் காவுத்ஸ்கியிற்கு நேர்முரணான நிலைக்குக் கொண்டு
வருகிறது. ஏகாதிபத்தியத்தை “முதலாளித்துவத்தின் ஒரு கட்டமாகக்” கருதக் காவுத்ஸ்கி மறுக்கிறார், நிதி மூலதனத்தால் “உகந்ததென விரும்பி ஏற்கப்படும்”
ஒரு கொள்கை என்று, “தொழிற்துறை” நாடுகள் “விவசாய”
நாடுகளைப் பிடித்துத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்குரிய ஒரு போக்கு என்று அதற்கு அவர்
இலக்கணம் கூறுகிறார். காவுத்ஸ்கி கூறம் இலக்கணம் தத்துவார்த்தக் கண்ணோட்டத்தில் முழுக்க
பொய்யானது ஏகாதிபத்தியத்தை இனம் கண்டு கொள்வதற்குரிய அடையாளமாய் இருப்பது தொழில் துறை
மூலதனத்தின் ஆதிக்கம் அல்ல. நிதி மூலதனத்தின் ஆதிக்கமே ஆகும், குறிப்பாய் விவசாய நாடுகளை மட்டும் அல்ல, எல்லா வகையான நாடுகளையும்
பிடித்துத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியே ஆகும்.
“படைக் கலைப்பு”, “அதீத-ஏகாதிபத்தியம்”
இத்தியாதி அபத்தங்களைப் போன்ற கொச்சையான அவரது முதலாளித்துவச் சீர்திருத்தவாதத்துக்குப்
பாதையைச் செப்பனிடும் பொருட்டு காவுத்ஸ்கி ஏகாதிபத்திய அரசியலை ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தில்
இருந்து பிரித்து விலக்குகிறார், அரசியல்
துறை ஏகபோகத்தைப் பொருளாதார துறை ஏகபோகத்தில் இருந்து பிரித்து விலக்குகிறார். இந்தத் தத்துவார்த்தப்
பொய்க் கூற்றுகளின் நோக்கம் எல்லாம், அவற்றின் உட்பொருள் எல்லாம், ஏகாதிபத்தியத்தின்
மிகவும் ஆழமான முருணபாடுகளை மூடிமறைத்து, அதன்மூலம் ஏகாதிபத்திய ஆதரவாளர்களான அப்பட்டமான
சமூக-தேசிய வெறியர்களுடனும் சந்தர்ப்பவாதிகளுடனும் “ஒன்றுபடுவ”தென்ற கோட்பாட்டுக்கு
(theory) நியாயம் கற்பிப்பதுதான்.
இவ்விவகாரத்தில் காவுத்ஸ்கி
மார்க்சியத்தில் இருந்து முறித்துக் கொண்டு சென்றுவிடுவது குறித்து சொத்தியால்-டெமக்ராத்,
கம்முனீஸ்த் இதழ்களில் போதுமான அளவுக்கு விவரமாய் எடுத்துரைத்து இருக்கிறோம்.