Friday 19 August 2016

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு முதன்மை காரணமல்ல- லெனின்.

1897ஆண்டில் பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை (A Characterisation Of Economic Romanticism) என்ற நூலை லெனின் எழுதினார். சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதார அறிஞரான ஸிஸ்மொந்தீயின் கருத்து ருஷ்ய நரோத்னிக்குகளின் சிற்றளவு உற்பத்தியின் கண்ணோட்டத்துடன் ஒத்ததாக இருந்தது. அதே போல் பெருந்தொழில் உற்பத்தி ஆதரவாளர்களுக்கு எதிரான போக்கிலும், முதலாளித்துவத்துக்கு வேண்டிய உள்நாட்டுச சந்தை பற்றிய பிரச்சினையிலும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தனர். முதலாளித்துவம் சாத்தியமற்றது என்பதே இவ்விருவரின் மையக் கருத்தாகும். மொத்தத்தில் குட்டிமுதலாளித்துவ சிந்தனைப் போக்குடையவர்களாவர்.

விரைவான திரட்சி பெரும் விபத்து என்கிற ஸிஸ்மொந்தீயின் கருத்தை லெனின் மறுக்கிறார்.

“இப்போது நாம் திரட்சி பற்றிய ஸிஸ்மொந்தீயின் கருத்தை முழுமையாக மதிப்பீடு செய்யமுடியும். விரைவான திரட்சி பெருவிபத்துக்குக் கொண்டுபோய்விடுகிறது என்கிற அவரது வன்கூற்று முற்றிலும் தவறாகும், அது திரட்சியை அவர் புரிந்துகொள்ளத் தவறியதினாலேதான் விளைந்தது,  அதேபோல் நுகர்வுக்கு மேல் உற்பத்தி போகக்கூடாது, ஏனெனில் நுகர்வுதான் உற்பத்தியை நிர்ணயிக்கிறது என்று அவர் திரும்பத்திரும்பச் சொல்லும் கூற்றுகளும் கோரிக்கைகளும் முற்றிலும் தவறாகும். உண்மையிலே, வழக்கு இதற்கு எதிர்நிலையாகத்தான் உள்ளது, மற்றும் தனிக்குறிப்பான, வரலாற்றுரீதியிலே நிர்ணயிக்கப்பட்ட வடிவத்திலுள்ள யதார்த்தத்தின் பக்கம் ஸிஸ்மொந்தீ வெறுமே முதுகைத் திருப்பிக்கொள்கிறார், பகுப்பாய்வுக்குப் பதிலாகச் சிறுபூர்ஷ்வா தர்மோபதேசங்களை வைக்கிறார்”5

ஆடம் ஸ்மித்திடம் இருந்து ஸிஸ்மொந்தீ இரவல் வாங்கிய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியைப் பற்றிய கருத்து தவறான கோட்பாடாகும். இது உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கொண்டு நெருக்கடிக்கு விளக்கம் அளிக்கிறது.

நெருக்கடியைப் பற்றிய இரண்டு கோட்பாடுகள் இருப்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அழித்திடவும் இந்தப் பிரச்சினையை குழப்பிடவும் ஸிஸ்மொந்தீயின் ருஷ்ய ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர். முதல் கோட்பாடு, நெருக்கடிக்கு காரணம் குறைநுகர்வு (underconsumption) என்கிறது. மற்றொரு கோட்பாடு சமூகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்திக்கும் தனியுடைமை விநியோக முறைக்கும் இடையே உள்ள முரண்பாடு என்கிறது. இதனை சற்று விரிவாக லெனின் விவரிக்கிறார்.

“நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்விரண்டு கோட்பாடுகள் நெருக்கடிகளைப் பற்றி முற்றிலும் வெவ்வேறான விளக்கங்கள் தருகின்றன. உற்பத்திக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு முதல் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது, உற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமை முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு இரண்டாவது கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது. எனவே, முந்தைய கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்திக்கு அப்பால் வெளியே இருப்பதாகக் காண்கிறது, பிந்தையக் கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்தி நிலைமைகளிலேதான் இருப்பதாகக் காண்கிறது. மேலும் சுருக்கமாகச் சொல்வதானால், முந்தையக் கோட்பாடு குறைநுகர்வை கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது, பிந்தையக் கோட்பாடு உற்பத்தியின் அராஜகத்தன்மையைக் கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது.”6

       இரண்டு கோட்பாடுகளும் பொருளாதார அமைப்பு முறைக்குள்ளேயே உள்ள முரண்பாட்டைக் கொண்டு விளக்கிய போதிலும், முரண்பாட்டின் தன்மையில் வேறுபடுவதாக லெனின் குறிப்பிடுகிறார்.

குறைநுகர்வை மார்க்சியம் ஏற்றுக் கொள்கிறது ஆனால் அதனை அதற்கே உரிய கீழ்மட்டத்தில் வைக்கிறது, ஏன் என்றால் இதனைக் கொண்டு நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று மார்க்சியம் போதிக்கிறது.

“.. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு என்கிற உண்மையை இரண்டாம் கோட்பாடு மறுக்கிறதா? கிடையவே கிடையாது. அது அந்த உண்மையை முற்றாக அங்கீகரிக்கிறது, ஆனால் அதை அதற்குரிய கீழ்மட்ட இடத்தில் வைக்கிறது, முதலாளித்துவ உற்பத்தியின் முழுமையின் ஒரு பிரிவுடன் மட்டும் தொடர்புடைய உண்மையாக அதை வைக்கிறது. இந்த உண்மையால் நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று அது போதிக்கிறது, அந்த நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது இன்றையப் பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படையானதாக இருக்கும் மற்றொரு, மேலும் ஆழமான முரண்பாடு ஆகும், - அதாவது, உற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையே உள்ள முரண்பாடுதான்.”

       நெருக்கடிகள் பற்றிய இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை ருஷ்யத் தன்னுணர்ச்சிவாதிகள் மறைத்திட தன்னாலானது அனைத்தையும் செய்கின்றனர். ஆனால் இரண்டு கோட்பாடுகளும் முதலாளித்துவ அடிப்படையைப் பற்றி வேறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளது.

       குறைநுகர்வுக் கோட்பாடு முதலாளித்துவம் வளர்ந்துவரும் பாதையை பொய்யானது என்று சொல்லி எதார்த்தத்தை மறுப்பதின் மூலம் வேறுபாதையை நாடத்தூண்டுகிறது. ஆனால் உற்பத்தியின் சமூகமயமாக்கல் தன்மைக்கும் விநியோகத்தில் தனியுடைமை தன்மைக்கும் இடையேயான முரண்பாடாகக் கொள்ளும் போது முதலாளித்துவத்தின் வளர்ச்சியே சோஷலிச சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்வதை சுட்டிக்காட்டுகிறது.

குறைநுகர்வு கண்ணோட்டத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“உண்மையிலே, உற்பத்திப் பொருட்களைத் திருப்பி எடுத்துக் கொள்வது அசாத்தியம் என்பதை வைத்தோ உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை வைத்தோ நெருக்கடிகளை நாம் விளக்குவோமானால் நாம் எதார்த்தத்தை மறுத்திடும் நிலைக்குப் போவோம், முதலாளித்துவம் வளர்ந்துவரும் பாதையின் சரித்தன்மையை நாம் மறுத்திடும் நிலைக்கும் போவோம், இந்தப் பாதை ஒரு “பொய்யான பாதை” என்று சொல்லி “வெவ்வேறான பாதைகளை”த் தேடிச் செல்கிறோம். இந்த முரண்பாட்டை வைத்து நெருக்கடிகளைப் பற்றிய முடிவுக்கு வருகிறபோது அது வளர வளர அந்த முரண்பாட்டில் இருந்து விடுபட்டு வெளியே வருவது மேன்மேலும் கடினமாகிவிடும் என்று நாம் நிச்சயமாக எண்ணப்புகுவோம்.”

மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-

“..உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை வைத்து நாம் நெருக்கடிகளை விளக்குவோமானால், அதன் வழியாக முதலாளித்துவத்துப் பாதை எதார்த்தமானது என்றும் முன்னேற்றகரமானது என்றும் அங்கீகரித்து “வேறான பாதைகளை”த் தேடிச்செல்வது முட்டாள்தனமான தன்னுணர்ச்சிவாதம் என்று நிராகரிக்கிறோம். அதன் வழியாக, இந்த முரண்பாடு மேலும் வளர வளர அதிலிருந்து விடுபட்டு வெளிவருவது மேலும் எளிதாகிவிடும் என்பதையும், இந்த அமைப்புமுறையின் வளர்ச்சிதான் வெளிவருவதற்கான வழியையும் கொடுக்கிறது என்பதையும் அங்கீகரிக்கிறோம்.”

விஞ்ஞான கம்யூனிசத்தின் விஞ்ஞானத் தன்மையைப் பற்றி- லெனின்

1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி எங்கெல்ஸ் மறைந்தார். இதனை ஒட்டி லெனின் பிரடெரிக் எங்கெல்ஸ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

“தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக்காட்டினார்கள்.

சோஷலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தின் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்.”

மேலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் அதன் வழியில் சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தும் சக்தியான பாட்டாளிகள் பற்றியும் கூறுகிறார்:-

“வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையில் இருந்துதான், பருப்பொருளில் இருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்… ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போல் அல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையில் இருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிப்படையாகப் பொருளாதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.

மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமூக உறவுகளைப் படைக்கிறது, ஆனால் உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன காலத்திய சமூக அமைப்புமுறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது, சோஷலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே குறிக்கோளை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது.

சோஷலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பது எல்லாம்- சமூகச் சக்திகளில் எது நவீன சமூதாயத்தில், தான் வகிக்கும் நிலையின் காரணமாக, சோஷலிசத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம்.”