1897ஆண்டில்
பொருளாதாரத்
தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை (A Characterisation Of Economic
Romanticism) என்ற நூலை லெனின் எழுதினார். சுவிட்சர்லாந்து நாட்டின்
பொருளாதார அறிஞரான ஸிஸ்மொந்தீயின் கருத்து ருஷ்ய நரோத்னிக்குகளின் சிற்றளவு உற்பத்தியின்
கண்ணோட்டத்துடன் ஒத்ததாக இருந்தது. அதே போல் பெருந்தொழில் உற்பத்தி ஆதரவாளர்களுக்கு
எதிரான போக்கிலும், முதலாளித்துவத்துக்கு வேண்டிய உள்நாட்டுச சந்தை பற்றிய பிரச்சினையிலும்
ஒத்த கருத்துடையவர்களாக இருந்தனர். முதலாளித்துவம் சாத்தியமற்றது என்பதே இவ்விருவரின்
மையக் கருத்தாகும். மொத்தத்தில் குட்டிமுதலாளித்துவ சிந்தனைப் போக்குடையவர்களாவர்.
விரைவான
திரட்சி பெரும் விபத்து என்கிற ஸிஸ்மொந்தீயின் கருத்தை லெனின் மறுக்கிறார்.
“இப்போது
நாம் திரட்சி பற்றிய ஸிஸ்மொந்தீயின் கருத்தை முழுமையாக மதிப்பீடு செய்யமுடியும். விரைவான திரட்சி பெருவிபத்துக்குக் கொண்டுபோய்விடுகிறது
என்கிற அவரது வன்கூற்று முற்றிலும் தவறாகும், அது திரட்சியை அவர் புரிந்துகொள்ளத் தவறியதினாலேதான்
விளைந்தது, அதேபோல் நுகர்வுக்கு மேல் உற்பத்தி
போகக்கூடாது, ஏனெனில் நுகர்வுதான் உற்பத்தியை நிர்ணயிக்கிறது என்று அவர் திரும்பத்திரும்பச்
சொல்லும் கூற்றுகளும் கோரிக்கைகளும் முற்றிலும் தவறாகும். உண்மையிலே, வழக்கு இதற்கு
எதிர்நிலையாகத்தான் உள்ளது, மற்றும் தனிக்குறிப்பான, வரலாற்றுரீதியிலே நிர்ணயிக்கப்பட்ட
வடிவத்திலுள்ள யதார்த்தத்தின் பக்கம் ஸிஸ்மொந்தீ வெறுமே முதுகைத் திருப்பிக்கொள்கிறார்,
பகுப்பாய்வுக்குப் பதிலாகச் சிறுபூர்ஷ்வா தர்மோபதேசங்களை வைக்கிறார்”5
ஆடம்
ஸ்மித்திடம் இருந்து ஸிஸ்மொந்தீ இரவல் வாங்கிய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியைப்
பற்றிய கருத்து தவறான கோட்பாடாகும். இது உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக்
கொண்டு நெருக்கடிக்கு விளக்கம் அளிக்கிறது.
நெருக்கடியைப்
பற்றிய இரண்டு கோட்பாடுகள் இருப்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். இவ்விரண்டிற்கும்
உள்ள வேறுபாட்டை அழித்திடவும் இந்தப் பிரச்சினையை குழப்பிடவும் ஸிஸ்மொந்தீயின் ருஷ்ய
ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர். முதல் கோட்பாடு, நெருக்கடிக்கு காரணம் குறைநுகர்வு
(underconsumption) என்கிறது.
மற்றொரு கோட்பாடு சமூகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்திக்கும் தனியுடைமை விநியோக
முறைக்கும் இடையே உள்ள முரண்பாடு என்கிறது. இதனை சற்று விரிவாக லெனின் விவரிக்கிறார்.
“நாம்
பேசிக்கொண்டிருக்கும் இவ்விரண்டு கோட்பாடுகள் நெருக்கடிகளைப் பற்றி முற்றிலும் வெவ்வேறான
விளக்கங்கள் தருகின்றன. உற்பத்திக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நுகர்வுக்கும் இடையேயுள்ள
முரண்பாட்டைக் கொண்டு முதல் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது, உற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட
தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமை முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக்
கொண்டு இரண்டாவது கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது. எனவே, முந்தைய கோட்பாடு நெருக்கடிக்குரிய
வேர் உற்பத்திக்கு அப்பால் வெளியே இருப்பதாகக்
காண்கிறது, பிந்தையக் கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்தி நிலைமைகளிலேதான் இருப்பதாகக்
காண்கிறது. மேலும் சுருக்கமாகச் சொல்வதானால், முந்தையக் கோட்பாடு குறைநுகர்வை கொண்டு
நெருக்கடிகளை விளக்குகிறது, பிந்தையக் கோட்பாடு உற்பத்தியின் அராஜகத்தன்மையைக் கொண்டு
நெருக்கடிகளை விளக்குகிறது.”6
இரண்டு கோட்பாடுகளும் பொருளாதார அமைப்பு முறைக்குள்ளேயே உள்ள முரண்பாட்டைக்
கொண்டு விளக்கிய போதிலும், முரண்பாட்டின் தன்மையில் வேறுபடுவதாக லெனின் குறிப்பிடுகிறார்.
குறைநுகர்வை
மார்க்சியம் ஏற்றுக் கொள்கிறது ஆனால் அதனை அதற்கே உரிய கீழ்மட்டத்தில் வைக்கிறது, ஏன்
என்றால் இதனைக் கொண்டு நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று மார்க்சியம் போதிக்கிறது.
“..
உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு என்கிற உண்மையை இரண்டாம் கோட்பாடு மறுக்கிறதா?
கிடையவே கிடையாது. அது அந்த உண்மையை முற்றாக
அங்கீகரிக்கிறது, ஆனால் அதை அதற்குரிய கீழ்மட்ட இடத்தில் வைக்கிறது, முதலாளித்துவ உற்பத்தியின்
முழுமையின் ஒரு பிரிவுடன் மட்டும் தொடர்புடைய உண்மையாக அதை வைக்கிறது. இந்த உண்மையால்
நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று அது போதிக்கிறது, அந்த நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது
இன்றையப் பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படையானதாக இருக்கும் மற்றொரு, மேலும் ஆழமான
முரண்பாடு ஆகும், - அதாவது, உற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக்
கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையே உள்ள முரண்பாடுதான்.”
நெருக்கடிகள் பற்றிய இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை
ருஷ்யத் தன்னுணர்ச்சிவாதிகள் மறைத்திட தன்னாலானது அனைத்தையும் செய்கின்றனர். ஆனால்
இரண்டு கோட்பாடுகளும் முதலாளித்துவ அடிப்படையைப் பற்றி வேறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளது.
குறைநுகர்வுக் கோட்பாடு முதலாளித்துவம் வளர்ந்துவரும் பாதையை பொய்யானது
என்று சொல்லி எதார்த்தத்தை மறுப்பதின் மூலம் வேறுபாதையை நாடத்தூண்டுகிறது. ஆனால் உற்பத்தியின்
சமூகமயமாக்கல் தன்மைக்கும் விநியோகத்தில் தனியுடைமை தன்மைக்கும் இடையேயான முரண்பாடாகக்
கொள்ளும் போது முதலாளித்துவத்தின் வளர்ச்சியே சோஷலிச சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்வதை
சுட்டிக்காட்டுகிறது.
குறைநுகர்வு கண்ணோட்டத்தைப்
பற்றி லெனின் கூறுகிறார்:-
“உண்மையிலே,
உற்பத்திப் பொருட்களைத் திருப்பி எடுத்துக் கொள்வது அசாத்தியம் என்பதை வைத்தோ உற்பத்திக்கும்
நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை வைத்தோ நெருக்கடிகளை நாம் விளக்குவோமானால் நாம்
எதார்த்தத்தை மறுத்திடும் நிலைக்குப் போவோம், முதலாளித்துவம் வளர்ந்துவரும் பாதையின்
சரித்தன்மையை நாம் மறுத்திடும் நிலைக்கும் போவோம், இந்தப் பாதை ஒரு “பொய்யான பாதை”
என்று சொல்லி “வெவ்வேறான பாதைகளை”த் தேடிச் செல்கிறோம். இந்த முரண்பாட்டை வைத்து நெருக்கடிகளைப்
பற்றிய முடிவுக்கு வருகிறபோது அது வளர வளர அந்த முரண்பாட்டில் இருந்து விடுபட்டு வெளியே
வருவது மேன்மேலும் கடினமாகிவிடும் என்று நாம் நிச்சயமாக எண்ணப்புகுவோம்.”
மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“..உற்பத்தியின்
சமூகத் தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையேயுள்ள
முரண்பாட்டை வைத்து நாம் நெருக்கடிகளை விளக்குவோமானால், அதன் வழியாக முதலாளித்துவத்துப்
பாதை எதார்த்தமானது என்றும் முன்னேற்றகரமானது என்றும் அங்கீகரித்து “வேறான பாதைகளை”த்
தேடிச்செல்வது முட்டாள்தனமான தன்னுணர்ச்சிவாதம் என்று நிராகரிக்கிறோம். அதன் வழியாக,
இந்த முரண்பாடு மேலும் வளர வளர அதிலிருந்து விடுபட்டு வெளிவருவது மேலும் எளிதாகிவிடும் என்பதையும், இந்த அமைப்புமுறையின்
வளர்ச்சிதான் வெளிவருவதற்கான வழியையும் கொடுக்கிறது என்பதையும் அங்கீகரிக்கிறோம்.”