Thursday 26 September 2019

மார்க்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகள் – எங்கெல்ஸ்

“வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம் மற்றும் உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.”
(டூரிங்குக்கு மறுப்பு)

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்,  உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று, இனி அடுத்தபடிச் செய்ய வேண்டியிருந்த பணி அதன் எல்லா விவரங்களையும் உறவுகளையும் வகுத்தமைத்திடுவதுதான்”
(கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்)


“அங்கக இயற்கையின் (organic nature) வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார், மனிதன் அரசியல், அறிவியல், கலை, மதம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது, ஆகவே உடனடியான பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.

ஆனால் அது மட்டுமல்ல. மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் அந்த உற்பத்திமுறை தோற்றுவித்துள்ள முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்தின் சிறப்பு விதியையும் கண்டுபிடித்தார். உபரி மதிப்பைக் கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது, அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளி வர்க்கப் பொருளியலாளர்கள், சோஷலிஸ்டு விமர்சகள் ஆகிய இரு தரப்பினரும் இதற்கு முன்பு செய்த எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் கொண்டிருந்தன.

ஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதும். அத்தகைய ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்தால்கூட அந்த மனித அதிர்ஷ்ட்டமுடையவரே.”
(மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரை

Tuesday 24 September 2019

முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்படுகிற பொருளாதார நெருக்கடிக்கு, வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளினால் உருவான மிகை உற்பத்தியே காரணமாகும். குறைநுகர்வு என்பது இதற்கு கீழ்மட்ட நிலையில் அதாவது இரண்டாம் நிலை காரணமாகும் என்பது பற்றி லெனின்:-

"நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்விரண்டு கோட்பாடுகள் நெருக்கடிகளைப் பற்றி முற்றிலும் வெவ்வேறான விளக்கங்கள் தருகின்றன. உற்பத்திக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு முதல் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது, உற்பத்தியின் சமுதாயவகைப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிகொள்வதின் தனியுடைமை முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு இரண்டாம் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது.

எனவே, முந்தைய கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்திக்கு அப்பால் வெளியே இருப்பதாகக் காண்கிறது, பிந்தையத் கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்தி நிலைமைகளிலேதான் இருப்பதாகக் காண்கிறது. மேலும் சுருங்கச் சொல்வதானால், முந்தைய கோட்பாடு குறைநுகர்வை கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது, பிந்தைய கோட்பாடு உற்பத்தி உற்பத்தியின் அராஜகத்தன்மையைக் கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது.

ஆக, இரு கோட்பாடுகளுமே பொருளாதார அமைப்புமுறைக்குள்ளேயேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு நெருககடிகளை விளக்குகிறபோதிலும், அந்த முரண்பாட்டின் தன்மை விஷயத்திலே அவ்விரண்டுமே முற்றிலும் வேறுபடுகின்றன. ஆனால் கேள்வி இதுதான், உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு என்கிற உண்மையை இரண்டாம் கோட்பாடு மறுக்கிறதா, குறைநுகர்வு என்கிற உண்மையை அது மறுக்கிறதா? கிடையவே கிடையாது. அது அந்த உண்மையை முற்றாக அங்கீகரிக்கிறது, ஆனால் அதை அதற்குரிய கீழ்மட்ட இடத்தில் வைக்கிறது, இந்த உண்மையால் நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று அது போதிக்கிறது, அந்த நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது இன்றையப் பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படையானதாக இருக்கும் மற்றொரு, மேலும் ஆழமான முரண்பாடு ஆகும். -அதாவது, உற்பத்தியின் சமுதாயவகைப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கி கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையேயுள்ள முரண்பாடுதான்."
(“பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை” பக்கம் 61-62)
(A Characterization of Economic Romanticism)

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணமல்ல – எங்கெல்ஸ்


(முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவாய் ஏற்படுகிற மிகை உற்பத்தியே பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகிறது, குறை-நுகர்வு பிரச்சினை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன்பே காணக்கூடியது. புதியதாகத் தோன்றிய பொருளாதார நெருக்கடிக்கு குறை-நுகர்வு காரணமாது)
*******************************************************************************************************************************************
“ஹெர் டூரிங்கைப் பொருத்தவரை, சோஷலிசம், வரலாற்று வளர்ச்சியின் அவசியமான விளைவு அல்லவே அல்ல, மற்றும் முற்றிலும் வயிற்றை நிரப்பும் திசையில் நெறியாண்மை செய்யப்படும் இன்றைய படுமோசமான பொருளாயதத் தன்மை வாய்ந்த பொருளாதார நிலைமைகளின் விளைவும் அல்ல. இதை எல்லாம் அவர் மேலும் நல்ல முறையில் செய்து நிறைவேற்றியுள்ளார். அவரது சோஷலிசம் ஓர் இறுதியும் அறுதியுமான உண்மை;

அது “சமுதாயத்தின் இயற்கையான அமைப்பு'', இதன் வேர்கள் “நீதியின் சர்வப்பொதுக் கோட்பாட்டில் காணப்படுவன;

கடந்த காலத்தின் பாவகரமான வரலாறு சிருஷ்டித்த தற்போதைய நிலைமையைக் கவனிக்காமல் அவரால் தவிர்க்க முடியவில்லை என்றால், அதற்குப் பரிகாரம் காண்பதற்காக, இதை நீதியின் புனிதக் கோட்பாட்டுக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம் என்றே கருதவேண்டும். ஹெர் டூரிங் மற்றவை எல்லாவற்றையும் போலவே தமது சோஷலிசத்தையும் தமது புகழார்ந்த இரு மனிதர்களை ஊடகமாக் கொண்டே உருவாக்குகிறார். சென்ற காலத்தில் இந்த இரு பொம்மைகளும் எஜமான், வேலையாள் என்ற பாத்திரங்களில் நடித்தது போலன்றி, மாறாக இந்தத் தடவையில், ஒரு மாறுதலுக்காக, உரிமைகளின் சமத்துவம் பற்றிய கதையினை நடிக்கின்றனர்-டூரிங்கின் சோஷலிசத்தின் அடித் தளங்கள் நிறுவப்பட்டுவிட்டன.

எனவே ஹெர் டூரிங்கைப் பொருத்தவரை, தொழில் துறையில் ஏற்படும் அலை வட்ட நெருக்கடிகளுக்கு நாம் கற்பித்துக் கூறுமாறு நிர்ப்பந்திக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் எதுவுமே இல்லை என்பது கூறாமலே விளங்கும். அவரது கருத்துப்படி,

நெருக்கடிகள் “சகஜ நிலையில் இருந்து” எப்போதாவது ஏற்படும் திரிபுகள் மட்டுமே, மற்றும் அவை “மேலும் முறைப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பின் வளர்ச்சியை” மேம்படுத்தவே பெரும்பாலும் உதவுகின்றன என்பதாகும். மிகை உற்பத்தியால் தான் நெருக்கடிகள் ஏற்படுகின்றன என்று விளக்கும் “சாமான்ய முறை'' அவரது “விஷயங்கள் குறித்த மேலும் துல்லியமான கருத்தோட்டத்திற்கு” எவ்வகையிலும் போதுமானதல்ல. அத்தகைய விளக்கம் "குறிப்பிட்ட பகுதிகளிலான பிரத்தியேக நெருக்கடிகள் விஷயத்தில் அனுமதிக்கப்படலாம்'' என்பது வாஸ்தவம். உதாரணம்: “பெருமளவில் விற்பனை செய்யத் தகுதியுள்ள நூல்களைத் திடீரென மறுபதிப்பாக வெளியிட்டுப் புத்தக மார்க்கெட்டை விழுங்கிவிடுவது.''

அவரது அமரத்துவம் பெற்ற நூல்கள் இத்தகைய உலகப் பேரிடர் எதையும் என்றுமே கொண்டு வந்துவிடா என்ற மன ஆறுதல் உணர்வுடன் ஹெர் டூரிங் உறங்கச் செல்லலாம்.

பெரிய நெருக்கடிகளில் “தரவுக்கும் தேவைக்கும் இடையிலான பிளவை இத்தனை மோசமாக விரிவாக்குவதற்கு” மிகை உற்பத்தி காரணம் அல்ல என்றும், மாறாக “வெகுஜன நுகர்வு பின்தங்கி இருப்பதும்.., செயற்கையாக உருவாக்கப்படும் குறை-நுகர்வும்... மக்களின் தேவைகளின்" (!) “இயல்பான பெருக்கத்தில் தலையிடுவதுமே" காரணம் என்றும் வாதாடுகிறார்.

அவரது இந்த நெருக்கடிக் கோட்பாட்டுக்கு ஒரு சீடரைப் பெறும் நல்வாய்ப்பும் அவருக்குக் கிட்டியுள்ளது.

ஆனால் துரதிருஷ்டவசமாக வெகு ஜனங்களின் இந்தக் குறை- நுகர்வும், அவர்களது பராமரிப்பு மற்றும் இனப் பெருக்கத்துக்குத் தேவையான நுகர்வைக் கட்டுப்படுத்துவதும் ஒரு புதிய புலப்பாடன்று. சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்கள் இருந்தவரையில் இது தொடர்ந்து நிலவி வந்துள்ளது. வெகுஜனங்களின் நிலைமை விசேஷமாயும் சாதகமாக இருந்த அந்த வரலாற்றுக் காலகட்டங்களில் கூட, உதாரணமாக 15 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில், மக்கள் குறை-நுகர்வுக்கு இலக்காயிருந்தார்கள். தமது நுகர்வுக்குத் தமது ஒட்டு மொத்தமான வருடாந்த உற்பத்திப் பொருளைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே குறை- நுகர்வு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றில் ஓர் இடையறாத அம்சமாக இருந்து வந்துள்ளது.

அதே பொழுதில், உபரி உற்பத்தியின் விளைவாக ஏற்படும் நெருக்கடிகளால் மார்க்கெட் பொதுவாகச் சுருங்குவது என்பது கடந்த ஐம்பதாண்டுகளாக மட்டுமே இருக்கும் ஒரு புலப்பாடாகும்; எனவே இந்தப் புதிய மோதலை மிகை உற்பத்தி என்ற புதிய புலப்பாடு மூலம் அல்லாது ஆயிரமாண்டு பழமையான குறை-நுகர்வு என்ற புலப்பாடு மூலம் விளக்குவதற்கு ஹெர் டூரிங்கின் மேம்போக்கான கொச்சைப் பொருளியல் முழுதும் தேவைப்படுகிறது. இது, ஒரு கணிதவியலாளர் நிலையான ஒன்றும் மாற்றத்தக்க ஒன்றுமான இரு அளவுகளின் இடையிலான விகிதத்திலுள்ள வகை பிரிவினை மாறத்தக்க அளவைக் கொண்டு அல்லாமல் நிலையான அளவு மாற்றமடையாமல் இருக்கிறது என்ற உண்மையை வைத்து விளக்க முயல்வது போன்று உள்ளது.

வெகு ஜனங்களின் குறை- நுகர்வு சுரண்டலை அடிப்படையாக்கியதான எல்லா வடிவங்களிலு மான சமுதாயத்தின், இதன் பின்விளைவாக முதலாளித்துவ வடிவ சமுதாயத்தினதுமான அவசியமான நிபந்தனையாகும்; ஆனால் உற்பத்தியின் முதலாளித்துவ வடிவம்தான் முதலில் நெருக்கடிகளுக்குக் காரணமாக உள்ளது. எனவே வெகு ஜனங்களின் குறை- நுகர்வு நெருக்கடிகளுக்கான முன்தேவையான ஒரு நிபந்தனையுமாகும், மற்றும் இது நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டு வந்த ஒரு பாத்திரத்தை அவற்றில் வகிக்கிறது. ஆனால் இது முன்னே ஏன் நெருக்கடிகள் நிலவவில்லை என்பதற்கு எவ்விதக் காரணமும் கூறாதது போலவே இன்று ஏன் நெருக்கடிகள் நிலவு கின்றன என்பதற்கும் எவ்விதக் காரணமும் கூறவில்லை.”
(டூரிங்குக்கு மறுப்பு- பொருளுற்பத்தி)

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணமல்ல - மார்க்ஸ்


“பயன்திறனுள்ள நுகர்வு (effective consumption) அல்லது பயன் திறனுள்ள நுகர்வாளர் பற்றாக்குறையாகி விடுவதுதான் நெருக்கடிகளுக்குக் காரணம் என்கிறார்கள். கூறியதையே கூறும் சொற்புரட்டு ஆகுமே தவிர இது காரண விளக்கம் ஆகாது. பஞ்சையர் நுகர்வையும் மோசடிக்காரர் நுகர்வையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால், முதலாளித்துவ அமைப்பானது பயன்திறனுள்ள நுகர்வைத் தவிர வேறு எந்த விதமான நுகர்வையும் அறியாதது. சரக்குகள் விற்பனையாகாமல் தேங்குகின்றன என்றால், விலை கொடுத்து வாங்கக் கூடியவர்கள், அதாவது பயன்திறனுள்ள நுகர்வாளர்கள் அவற்றுக்கு யாரும் கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். (ஏனெனில், இறுதியாகப் பார்க்கையில், திறனுடை நுகர்வுக்காகவோ சொந்த நுகர்வுக்காகவோதான் சரக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள்.)

தொழிலாளி வர்க்கம் உற்பத்தி செய்வதில் மிகச் சிறு பகுதியே அதன்கைக்குக் கிடைக்கிறது. இன்னும் கூடுதலான ஒரு பங்கு அதற்குக் கிடைக்குமானால், அதாவது அதற்குக்கிடைக்கும் கூலி உயருமானால், கேடு தீர்ந்து விடும் என்று வாதாடி. மேற்கூறிய சொற் புரட்டுக்கு நியாய விளக்கம் அளிக்க முயலுவார்களாயின், அவர்களுக்கு நாம் கூற விரும்புவது இதுதான்:

பொதுவாக எல்லாருக்கும் கூலி எப்போது உயர்ந்து செல்கிறதோ, சமுதாயத்தின் வருடாந்தரப் பொருளுற்பத்தியில் நுகர்வுக்கென அமையும் பகுதியில் தொழிலாளி வர்க்கத்துக்கு எப்போது உள்ளபடியே பெரியதொரு பங்கு கிடைக்கிறதோ, அந்தக் காலகட்டம்தான் எப்போதுமே நெருக்கடிகளுக்குத் தயாரிப்பு செய்யும் காலகட்டமாகிறது. குற்றங்குறையற்ற ''சர்வ சாதாரண" (!) அன்றாடப் பொது அறிவை ஆதாரமாய்க் கொண்டு வாதாடுவதாகக் கூறுகிற இவர்களது கண்ணோட்டத்தின் படி, இம்மாதிரியான ஒரு காலகட்டம் நெருக்கடி வராமல் அல்லவா தடுத்து நிறுத்த வேண்டும்?

ஆக முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கு அவசியமான நிலைமைகள் எப்படிப்பட்டவை என்பது தெளிவாகிறது. யாருடைய நல்ல எண்ணத்தையோ, கெட்ட எண்ணத்தையோ சார்ந்திராத இந்நிலைமைகள் தொழிலாளி வர்க்கம் கணப் பொழுதுக்கு மட்டும் ஒப்பளவில் வளமான வாழ்வு (relative pros perity) வாழ்வதற்கு அனுமதி அளிக்கின்றன, அதுவுங்கூட வரப்போகும் நெருக்கடியின் முன்னறிவிப்பாக அமையும் பொருட்டு அனுமதி அளிக்கின்றன என்பது தெளிவாகிறது.”
(மூலதனம்- தொகுதி இரண்டு- பக்கம்-543)