Saturday 18 July 2015

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி - எங்கெல்ஸ்

(தொழிலாளர்கள் ஒரு தொழிலாளர் கட்சியாக இணைந்து அரசியலில் ஈடுபடவேண்டும். இருக்கும் அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் அரசியல் ஒடுக்கு முறை, தொழிலாளர்களை அரசியலில் ஈடுபடும்படி செய்கிறது. அவர்களை அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதைப் போதிப்பது முதலாளித்துவ வர்க்க அரசியலின் கரங்களுக்குள் விரட்டுவதாக ஆகிவிடும். தொழிலாளர்களின் கட்சி, முதலாளித்துவ வர்க்கக் கட்சிகள் சிலவற்றின் வெறும் ஒட்டுப்பகுதியாக இருக்கக் கூடாது. எந்த அரசியல் நடவடிக்கையுமே இன்றைக்கு இருக்கும் நிலைமையை அங்கீகரிப்பதாகாது. நாம் நடத்த வேண்டிய அரசியல் தொழிலாளர்களின் அரசியலாகும்.)

எங்கெல்ஸ்:-

அரசியல் விஷயங்களில் முற்றிலும் ஒதுங்கி இருப்பது என்பது முடியாது, எனவே ஒதுங்கியிருக்கும் பத்திரிகைகள் அனைத்துமே உண்மையில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இது எப்படிச் செய்யப்பட வேண்டும், எந்தக் கொள்கையைக் கடைப்பிக்க வேண்டும் என்பது ஒன்றே பிரச்சினை. அதைத தவிர, நாம் தலையிடாதிருப்பதும் முடியாது. தொழிலாளர் கட்சி பெரும்பான்மையான நாடுகளில் ஏற்கெனவே ஒர் அரசியல் கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது.

நாம் தலையிடாமையைப் போதித்து இதை அழிக்கக் கூடாது. யதார்த்தமான அனுபவம், அரசியல் அல்லது சமூக காரணங்களுக்காக இன்றைக்கு இருக்கும் அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் அரசியல் ஒடுக்கு முறை – அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்- தொழிலாளர்கள் அரசியலில் ஈடுபடும்படி நிர்ப்பந்திக்கின்றன. அவர்களிடம் ஒதுங்கி இருப்பதைப் போதிப்பது முதலாளித்துவ வர்க்க அரசியலின் கரங்களுக்குள் அவர்கள் விரட்டுவதைப் போன்றதாகும். குறிப்பாக, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நடிவடிக்கையை அட்டவணையில் சேர்த்துவிட்ட பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு ஒதுங்கி நிற்பது என்பது முற்றிலும் இயாலாதே.

வர்க்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதை எப்படி நிறைவேற்ற முடியும்? பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தின் மூலமாகத்தான், இது எங்குமே அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பொழுது அரசியலில் தலையிட வேண்டாம் என்று நம்மிடம் சொல்கிறார்கள்! தலையிடாமையைப் பின்பற்றுகின்ற எல்லோரும் தங்களைப் புரட்சியாளர்கள் என்று – எல்லாவற்றுக்கும் மேலான புரட்சியாளர்கள் என்று கூட- சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் புரட்சி என்பது தலைமையான அரசியல் நடிவடிக்கை, அதை விரும்புபவர் அதன் வழிகளையும் தொழிலாளர்களுக்குப் புரட்சியில் பயிற்சியை- அது இல்லை என்றால் போராட்டத்துக்கு மறுநாளே தொழிலாளர்கள் ஃபாவ்ர்களாலும் பியாட்டுகளாலும் எப்பொழுதும் ஏமாற்றப்படுவார்கள்- கொடுத்து அதற்குத் தயாரிக்கும் அரசியல் நடவடிக்கையையும் பிரும்புவார்கள். ஆனால் நாம் நடத்த வேண்டிய அரசியல் தொழிலாளர்களின் அரசியலாகும்.

தொழிலாளர்களின் கட்சி முதலாளித்துவ வர்க்கக் கட்சிகள் சிலவற்றின் வெறும் ஒட்டுப்பகுதியாக இருக்கக் கூடாது, சொந்த குறிக்கோளையும் சொந்தக் கொள்கையையும் கொண்ட முற்றிலும் சுயேச்சையான கட்சியாக இருக்க வேண்டும்.
அரசியல் சுதந்திரம்- கூட்டம் நடத்தும் சுதந்திரம், சங்கம் அமைக்கம் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் – இவை நம்முடைய ஆயுதங்கள். அவர்கள் இவற்றைப் பறிக்க முயற்சி செய்யும் பொழுது நாம் கைகளைக் கட்டிக்கொண்டு தலையிடாமல் இருப்பதா? எந்த அரசியல் நடவடிக்கையுமே இன்றைக்கு இருக்கும் நிலைமையை அங்கீகரிப்பதை உள்ளடக்கிருக்கிறது என்று நம்மிம் கூறுகிறார்கள். ஆனால் இந்த நிலைமை அதை எதிர்ப்பதற்குரிய சாதனங்களையும் நம்மிடம் கொடுக்கும் பொழுது அத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தினால் இன்றைக்கிருக்கும் நிலைமையை அங்கீகரிப்பது என்று பொருள் கூறமுடியாது.


(அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 75-76)

No comments:

Post a Comment