Sunday 12 July 2015

2. மதத்தின் வர்க்கத் தன்மை

லெனின்:-
தொழிலாளர்கள் மீதான இந்தப் பொருளாதார ஒடுக்குமுறை எல்லா விதமான அரசியல் ஒடுக்குமுறையையும், சமூக இழிநிலையையும், வெகுஜனங்களது ஆன்மீக, அறநெறி வாழ்வின் நயமற்ற இருண்ட நிலையையும் உருவாக்கியவண்ணமுள்ளது. தொழிலாளர்கள் தமது பொருளாதார விடுதலைக்காகப் போராடுவதற்காக அதிக அளவிலோ குறைந்த அளவிலோ அரசியல் சுதந்திரம் பெற்றுக் கொண்டுவிடலாம், ஆனால் மூலதனத்தின் அதிகாரம் வீழ்த்தப்படாதவரை, எந்த அளவிலான சுதந்திரத்தாலும் அவர்களுடைய வறுமைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் ஒடுக்கு முறைக்கும் முடிவு கட்டிவிட முடியாது. மிகப் பெருந் திரள்களான மக்களை, ஏனையோருக்காகத் தாம் செய்யும் ஓயாத வேலையாலும் மற்றும் இல்லாமையாலும் தனிமைப்பாட்டாலும் நசுக்கப்படும் இம்மக்களை, எங்கும் அழுத்தி இருத்திவைக்கும் ஆன்மீக (அறிவுசார்) ஒடுக்குமுறையின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும்.
-சோஷலிசமும் மதமும் 

லெனின்:-
வாழ்நாள் முழுதும் உழைத்து, இல்லாமையால் துன்புறுவோர் மண்ணுலகில் அடிபணிந்து பொறுமையாய் இருக்கவும், விண்ணுலகில் நற்பேறுக்கிட்டுமென்ற நம்பிக்கையால் மன ஆறுதல் பெறவும் மதம் அவர்களுக்குப் போதிக்கிறது. ஆனால் ஏனையோரது உழைப்பை உண்டு வாழ்வோர் மண்ணுலகில் தர்மவான்களாய் வாழ்வதற்கு மதம் அவர்களுக்குப் போதிக்கிறது, சுரண்டலாளர்களாய் அவர்கள் நடத்தும் வாழ்க்கை அனைத்துக்கும் நியாயம் கற்பித்துக் கொள்ள இவ்விதம் அது மிக எளியமையான ஒரு வழியை அளிப்பதோடு, விண்ணுலக இன்ப வாழ்வுக்கும் மிதமான விலையில் அவர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கிறது. மக்களது அபினியே மதம். ஒருவகை ஆன்மீகக் குடிபோதையே மதம் - மூலதனத்தின் அடிமைகள் தமது மானுட உருவை, ஓரளவேனும் மனிதனுக்கு உகந்த வாழ்வு பெற வேண்டுமென்ற தமது கோரிக்கையை இதில் மூழ்கடித்து மாய்த்துக் கொள்கின்றனர்.  
                                                               -சோஷலிசமும் மதமும் 
மார்க்ஸ்  ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு  என்ற நூலினுடைய முன்னுரையில்:-

ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய விமர்சனம் சாராம்சத்தில் நிறைவடைந்துவிட்டது. மதத்தைப் பற்றிய விமர்சனம் அனைத்தும் பற்றிய விமர்சனத்தின் முன்நிபந்தனையாக உள்ளது.

                .. பரலோகத்தில் வினோதார்த்தமான யதார்த்தத்தில் அதிமானுடனைக் காணவிரும்பிய மனிதன் அங்கு தனது சொந்தப் பிரதிபிம்பத்தைத் தவிர வேறு எதையுமே காணவில்லை, தான் தேடுகின்ற இடத்தில் அந்த அதிமானுடன், தன்னையே ஒத்திருக்கும் தோற்றத்தைக் காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த இயலாது. மனிதன் தனது உண்மையான யதாரத்தத்தையே கண்டறிந்தாக வேண்டும்.
..
மதஎதிர்ப்பு விமர்சனத்தின் அடிப்படையாக இருப்பது: மனிதனே மதத்தை உண்டாக்குகிறான், மதம் மனிதனை உண்டாக்குவதில்லை.  இதையே வேறு வார்த்தைகளில் கூறினால், தன்னைத்தானே இன்னும் கண்டறிந்து கொள்ளாதவன் அல்லது தன்னைத் தானே மறுபடியும் இழந்துவிட்டவனின்  தன்னறிவும் தன்னுணர்வும்தான் மதமாகும். ஆனால் மனிதன் இவ்வுலகிற்கு அப்பால் அமர்ந்திருக்கும் கற்பனையானவன் அல்ல. மனிதன் என்பவன் மனிதனின் உலகம், நாடு, சமூகம் அனைத்தும் தான். இந்த அரசும், சமூகமும் உலகம் பற்றிய தலைகீழ் உணர்வாக மதத்தைப் படைத்துள்ளன. ஏனென்றால் அவையும் தலைகீழ் உலகமே. அந்த உலகத்தின் பொதுவான கொள்கையாகவும், அறிவுத் திரட்டலாகவும், தர்க்கத்தின் பிரபல வடிவமாகவும், சமூகத்தின் ஆன்மீக கௌரமாகவும் அது மதிக்கப்படுகிறது. ஒழுக்க விதிகளைக் கட்டுப்படுத்துகிறது. மன ஆறுதலுக்கான பொதுவான சாதனமாகவும் தோன்றுகிறது. அது மனித சாராம்சத்தின் விசித்திரமான புரிந்துணர்வு ஆகும். ஏனெனில் மனித சாராம்சம் என்பது இன்னும் எந்த உண்மையான யதார்த்தத்தையும் அடையவில்லை. எனவே, மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது, ஆன்மீக மணம் வீசும் மதத்தைக் கொண்டு  விளங்கும் மறுஉலகத்தை எதிர்த்து நடத்தும் தொடர்பு மிக்க போராட்டம்தான்.

மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது.

மக்கள் உண்மையான மகிழ்ச்சி பெறுவதற்காக, மக்களது மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை அழிப்பது அவசியமாக்குகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும். மதம்பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்கு பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது.

கட்டுத்தளையின் மீதுள்ள கற்பனை மலர்களை விமர்சனம் பிடுங்கி எறிந்துவிட்டது. எந்தவிதமான மன ஆறுதலும், மனோகற்பிதமும் இல்லாமல் மனிதன் அந்தத் தளையைத் தரித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, அவன் அந்தத் தளையை உதறித் தள்ளி, ஜீவனுள்ள மலரைப் பறித்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். மதத்தின் விமர்சனம் என்பது மனிதனின் பிரம்மையைக்் குலைத்து, அவனைச் சிந்திக்கவும், செயல்படுத்தவும், அவனது யதார்த்தத்தை அவனே உருவாக்கவும் பிரம்மையைக் குலைந்த மனிதனைப்போல் அவன் பகுத்தறிவுக்கு மீண்டு வந்து, தன்னைத்தானே அவன் சுற்றிவரவும், அதன்மூலம் அவனது உண்மையான சூரியனைச் சுற்றிவரவும் செய்கிறது. மனிதன் தன்னைத்தானே சுற்றி வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச் சூரியன்தான் மதம் என்பது.

எனவே, வரலாற்றின் கடமை என்பது, உண்மைக்குப் புறம்பான உலகம் மறைந்தவுடனேயே, இந்த உலகத்தின் உண்மையை நிலைநாட்ட வேண்டியதுதான். வரலாற்றிற்குப் பணியாற்றுவதற்காகக் காத்திருக்கும் தத்துவத்தின் உடனடிக் கடமையும், மனிதன் தன்னைத் தானே அன்னியமாகிக் காட்டும் மகானுபாவ உருவத்தை திரைகிழித்துக் காட்டியவுடனேயே, அதன் புனிதமற்ற உருவங்களிலுள்ள தன்னைத்தானே அன்னியப்படுத்தும் தன்மையையும் திரைகிழித்துக் காட்டவேண்டியதுதான். இவ்வாறாக. பரலோகத்தைப்பற்றிய விமர்சனம் பூவுலகைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது, மதத்தைப் பற்றிய விமர்சனம் உரிமையைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது.
..
விமர்சனம் என்ற ஆயுதத்தை, நிச்சயமாக ஆயுதத்தின் விமர்சனத்தை அகற்ற முடியாது. பொருளாயத பலத்தைப் பொருளாயத பலத்தினால்தான் தூக்கி எறிய முடியும். ஆனால் மக்கள் மனத்தைப் பற்றிப் பிடித்தவுடனேயே, கொள்கையும் ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது. கொள்கை மனித உணர்ச்சியைத் தொட்டுச் சாதித்தவுடனேயே அது மக்களைப் பற்றிப் பிடித்துவிடுகிறது, அது பகுத்தறிவு பூர்வமாக மாறியவுடனேயே மனித உணர்ச்சியைத் தொட்டுச் சாதித்துவிடுகிறது. பகுத்தறிவு பூர்வமாக ஆவதெனில், அது விஷயத்தின் ஆணிவேரையே பற்றிப் பிடிக்கவேண்டும். ஆனால் மனிதனுக்கோ மனிதன்தான் ஆணிவேர். ஜெர்மன் கொள்கையின் பகுத்தறிவு வாதத்துக்கும், அதன் காரணமாக அதன் காரியார்த்தமான சக்திக்கும் உரிய கண்கண்ட சாட்சியம் எதுவெனில், அது உறுதியாக, உறுதிப்பாடான மத ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது. மதத்தைப் பற்றிய விமர்சனம் மனிதனுக்கு மனிதன்தான் உன்னதமாக சாராம்சம் என்பதைப் போதிப்தோடு, எனவே கீழ்த்தரமாக, அடிமையாக, ஒதுக்கப்பட்டவனாக, வெறுக்கத்தக்க சாராம்சமாக மனிதனை ஆக்கிவைத்துள்ள எல்லா உறவுகளையும், நாய்களின் மீது வரிபோடவேண்டும் என்று திட்டமிடப்பட்ட பொழுது  அட, அப்பாவி நாய்களே  அவர்கள் உங்களை மனிதர்களைப்போல் நடத்த விரும்புகிறார்களே- என்று கூக்குரல் எழுப்பிய ஒரு பிரஞ்சுக்காரனைக் காட்டிலும் விளக்கமாகக் கூறிவிட முடியாத, அந்த உறவுகள் அனைத்தையும் தூக்கி எறியவேண்டிய திட்டவட்டமான அத்தியாவசியத்தையும் போதிப்பதோடு அது முடிவடைகிறது.
..
இதற்கிடையில், அடிப்படை பூர்வமான ஜெர்மன் புரட்சியின் பாதையில் ஒரு பெரும் தடை குறுகிட்டு நிற்பதாகத் தோன்றுகிறது.

ஏனெனில், புரட்சிகளுக்கு ஒரு செயலற்ற தன்மையும், ஒரு பொருளாயத  அடிப்படையும் தேவை. எந்த அளவுக்கு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அந்த மக்களிடையே கோட்பாடும் நிறைவு செய்விக்கப்படுகிறது. ஆனால், ஜெர்மானியச் சிந்தனையின் கோரிக்கைகளுக்கும், ஜெர்மானிய யதார்த்தம் அளிக்கும் விடைகளுக்குமிடையே உள்ள பூதாகரமான வேற்றுமையானது.  குடிமை சமூதாயத்துக்கும் அரசுக்கும், குடிமை சமூதாயத்துக்கும் தனக்குமே இடையேயுள்ள அதேபோன்ற வேற்றுமையைக் கண்டுகொள்ளுமா? கோட்பாடார்த்தமான தேவைகளே உடனடியான காரியார்த்த தேவைகளாகிவிடுமா? யதார்த்த சித்திபெறுவதற்குச் சிந்தனை மட்டும் பாடுபட்டால் போதாது, யதார்த்தமும் சிந்தனையை நோக்கிப் பாடுபட வேண்டும்.

ஆனால் நவீன நாடுகளைப்போல் அரசியல் விடுதலைக்கான இடைநிலைக் கட்டத்துக்கு அதே சமயத்தில் ஜெர்மனி உயர்ந்து வந்துவிடவில்லை. கோட்பாடு விஷயத்தில் அது மேம்பட்டு எட்டிவிட்ட கட்டங்களுக்கு அது நடைமுறையில் இன்னும் எட்டி வந்துவிடவில்லை .. .. ..
..
.. ஒரு ஜெர்மன் விடுதலைக்கான உறுதிப்பாடான சாத்தியப்பாடு எங்கேயுள்ளது?

விடை:- ..
..இறுதியாக, சமுதாயத்தின் ஏனைய எல்லாப் பகுதிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பகுதி, அதன் மூலம் ஏனைய எல்லாச் சமுதாயப் பகுதிகளையும் விடுவிக்காத ஒரு பகுதி ஒரே வார்த்தையில் சொன்னால் மனிதனின் பூரண இழப்பாக உள்ள ஒரு பகுதி அது, எனவே அந்தப் பகுதி மனிதனை  மீண்டும் பூரணமாக வென்று மீள்வதன் மூலம்தான் தன்னைத்தானே வெற்றிகொள்ள முடியும். சமுதாயம் இத்தகைய ஒரு குறிப்பிட்ட பகுதியாக சீர்குலைந்து உருமாறுவதுதான் பாட்டாளி வர்க்கம்.

வளர்ந்துவரும் எந்திரத் தொழில் இயக்கத்தின் விளைவாகப் பாட்டாளி ஜெர்மனியில் உருவாகத் தொடங்கியுள்ளான். ஏனெனில், இயற்கையாகத் தோன்றும் ஏழையராக இல்லாமல், செயற்கையாகப் பஞ்சையராக்கப்பட்டவர்கள் ..  .. .. ..

தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.
..
நாம் இதன் முடிவைத் தொகுத்துச் சொல்வோம்:

ஜெர்மனியின் நடைமுறை சாத்தியமான ஒரே விடுதலையானது, மனிதனுக்கு மனிதன்தான் மேன்மையான சாராம்சம் என்று பிரகடனப்படுத்தும் அந்தக் கொள்கையின் கருத்தோட்டத்திலிருந்து கிட்டும் விடுதலைதான்.
..
ஜெர்மானிய விடுதலை என்பது மனிதனின் விடுதலைதான். இந்த விடுதலையின் மூளை தத்துவம், இதன் இதயம் பாட்டாளி வர்க்கம்."

லெனின்:-
வர்க்க உணர்வு படைத்த நவீன காலத் தொழிலாளி, பெருவீத ஆலைத் தொழிலால் வளர்த்து ஆளாக்கப்பட்டு  நகர வாழ்வினால் ஒளியூட்டப் பெற்ற இந்தத் தொழிலாளி, மதத்தின் தப்பெண்ணங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு, விண்ணுலக வாழ்வைக் குருமார்களிடத்தும் முதலாளித்துவப் பித்தர்களிடத்தும் விட்டுவிட்டு, தனக்கு இங்கே மண்ணுலகில் நல்வாழ்வைப் போராடிப் பெற முயலுகின்றான். இன்றையப் பாட்டாளி வர்க்கம் சோஷலிசத்தின் பக்கம் அணி திரளுகின்றது. சோஷலிசமானது மதத்தின் இருளுக்கு எதிரான போரில் விஞ்ஞானத்தைப் படைசேர்த்துக் கொள்கிறது. இப்பொழுதே இம்மையில், மண்ணுலகில்  நல்வாழ்வுக்கான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றுபடச் செய்வதன்மூலம், அது அவர்களை மரணத்துக்குப் பிற்பாடான மறுமையில் நம்பிக்கை வைப்பதிலிருந்து விடுவிக்கிறது 
-சோஷலிசமும் மதமும்

லெனின்:-
பொருள்முதல்வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவஞானமாகும். இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும். மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும்  .. ..

.. ஆகவே பொருள்முதல்வாதத்தை  மறுப்பதற்கும்  பலவீனப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்துமுதல்வாதத்தின் பலவகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோதான் செய்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள்.

--மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்



No comments:

Post a Comment