Tuesday 21 July 2015

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய முன்னுரைகள்

(கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைக்கு- வெளிவந்து 150 ஆண்டுகளுக்கு மேல் சென்றுவிட்டன. இன்றும் இந்த ஆவணம் பயன்படுமா? என்ற கேள்விக்கு, மார்க்சும் எங்கெல்சும் அறிக்கையின் முன்னுரையில் ”அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை.”(1872) கூறியிருப்பதை முன்வைத்து, எதிர்மறையான பதிலைத் தருகின்றனர். அறிக்கை ஆவணமாகிவிட்டது, மாற்ற வேண்டியதை மாற்ற வேண்டும் என்ற கருத்தை மார்க்சும் எங்கெல்சும் கூறினர் என்பது உண்மையே, அவ்வாறு கூறுவதற்கு முன்பு கூறியதையும் பார்க்க வேண்டும். “இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம்.” ஆக, பொதுக்கோட்பாடுகள் சரியானது என்று விவரங்களைச் செம்மை செய்யலாம் என்றும் கூறியிருக்கின்றனர். இந்த செம்மைப்படுத்துதலை ஆவணத்திற்குள் செய்யாமல், முன்னுரையில் செய்ய வேண்டும் என்று கருத்துரைத்துள்ளனர்.

இன்றும் நாம் அறிக்கையை வளர்ச்சியடைந்த நிலைமைகளின் விவரங்களுக்கு ஏற்ப முன்னுரையுடன் வெளியிட வேண்டும். “அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன.” (1883)
அறிக்கையின் முதலாளிகளும் பாட்டாளிகளும் என்ற முதல் அத்தியாயத்தில், முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்முரண்பாட்டால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியைப் பற்றி விவரிக்கிறது. மீண்டும் மீண்டும் இன்றளவும் தோன்றும் பொருளாதார நெருக்கடி மார்க்சியத்தின் அடிப்படைகள் இன்றும்  மெய்யானது என்பதை நிரூபிக்கின்றன. பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் என்ற இரண்டாம் அத்தியாயம், பாட்டாளிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையேயான நெருக்கத்தையும் இணக்கத்தையும் வலியுறுத்துகிறது.)

(அறிக்கையின் சில பகுதிகளை மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாகப் படிக்க பல்வேறு மொழிப் பதிப்புகளுக்கு எழுதிய முகவுரைகள்)

1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை  - கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

"தொழிலாளர்களின் சர்வதேசச் சங்கமாகிய கம்யூனிஸ்டுக் கழகம் (Communist League)[1] அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைமைகளில் ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இக்கழகம் கட்சியின் விரிவான கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பம் இட்டுள்ளோரைப் [மார்க்ஸ், ஏங்கெல்ஸைக் குறிக்கிறது] பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. இதன் கையெழுத்துப் பிரதி, அச்சிடப்படுவதற்காக, பிப்ரவரி புரட்சிக்கு[2] ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டனுக்குப் பயணித்தது. முதலில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது.
...
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள் மீது தனிச்சிறப்பான அழுத்தம் எதுவும் தரப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தைப் பல கூறுகளில் இன்றைக்கு மிகவும் வேறுபட்ட சொற்களில் எழுத வேண்டியிருக்கும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த கட்சி அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும்[6] சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான் அதில் அலசப்பட்டுள்ளது. அத்தோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே.
..
அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்றுவரையுள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும். தற்போது இந்த மறுபதிப்பு மிகவும் எதிர்பாராத நிலையில் வெளியாவதால், இப்பணியைச் செய்துமுடிக்க எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது."

1882-ஆம் ஆண்டின் ருஷ்யப் பதிப்புக்கு எழுதிய முகவுரை - கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

"கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப் பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது. அறுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கோலகல் (Kolokol)[8] இதழின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலை நாட்டினரால் அப்போது அதில் (அறிக்கையின் அந்த ருஷ்யப் பதிப்பில்) ஓர் இலக்கிய ஆர்வத்தை மட்டுமே காண முடிந்தது. அத்தகைய ஒரு கண்ணோட்டம் இன்று சாத்தியமற்றது.

அறிக்கையில், பல்வேறு நாடுகளில் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்பாகக் கம்யூனிஸ்டுகளின் நிலைபாட்டை எடுத்துக்கூறும் கடைசிப் பிரிவு, அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) பாட்டாளி வர்க்க இயக்கம் இன்னும்கூட எவ்வளவு குறுகிய களத்தினில் செயல்படுவதாக இருந்தது என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக ருஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவை பற்றிய தகவல்கள் இப்பிரிவில் விடுபட்டுள்ளன.
...
வெகுவிரைவில் நிகழவிருக்கும், நவீன முதலாளித்துவச் சொத்துடைமையின் தவிர்க்கவொண்ணாத் தகர்வினைப் பிரகடனப்படுத்துவதையே கம்யூனிஸ்டு அறிக்கை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் ருஷ்யாவில், அதிவேகமாக வளர்ந்துவரும் முதலாளித்துவச் சுரண்டல், இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ள முதலாளித்துவ நிலவுடைமை ஆகியவற்றுடன்கூடவே, பாதிக்கும் மேற்பட்ட நிலம் விவசாயிகளின் பொது உடைமையாக இருப்பதை நாம் காண்கிறோம். இப்போதுள்ள கேள்வி இதுதான்: ருஷ்ய ஒப்ஷீனா (obshchina) [கிராமச் சமூகம்] அமைப்புமுறை வெகுவாகச் சிதைவுற்றிருப்பினும், புராதன நிலப் பொது உடைமையின் ஒரு வடிவமான இது, நேரடியாகக் கம்யூனிசப் பொது உடைமை என்னும் உயர்ந்த வடிவத்துக்கு வளர்ச்சியுறுமா? அல்லது அதற்கு மாறாக, மேற்கு நாடுகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சியாக அமைந்த, அதே சிதைந்தழியும் நிகழ்ச்சிப்போக்கை முதலில் அது கடந்து தீரவேண்டுமா?

இதற்கு, இன்றைக்குச் சாத்தியமாக இருக்கும் ஒரே பதில் இதுதான்: ருஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடி ஆகி, இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நிற்குமாயின், நிலத்தின் மீதான தற்போதைய ருஷ்யப் பொது உடைமை, கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படக்கூடும்."

1883-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை - ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

"அந்தோ! தற்போதைய பதிப்பின் இந்த முகவுரைக்கு நான் மட்டும் தனியே கையெழுத்திட வேண்டியுள்ளது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் முழுமையும் வேறு எவரையும்விட அதிகமாகக் கடமைப்பட்டுள்ள அந்த மாமனிதர் மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் உறங்குகிறார். அவருடைய கல்லறையின்மேல் முதலாவது பசும்புல் ஏற்கெனவே அரும்பிக் கொண்டிருக்கிறது. மார்க்சின் மறைவுக்குப்பின் அறிக்கையைத் திருத்தியமைப்பதும், புதியன சேர்ப்பதும் நினைத்துப் பார்க்கவும் இயலாதது. பின்வருவனவற்றை வெளிப்படையாக மீண்டும் இங்கே எடுத்துரைப்பது முன்னைக் காட்டிலும் அவசியமெனக் கருதுகிறேன்:

அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. ஆகவே, (புராதன நிலப் பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.

நான் இதனை ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன். என்றாலும், முக்கியமாக இப்பொழுது அறிக்கையின் முகவுரையிலேயே குறிப்பிட வேண்டியதும் அவசியமாகும்."

1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முகவுரை – ஏங்கெல்ஸ்

"தொழிலாளர்களுடைய சங்கமான “கம்யூனிஸ்டுக் கழகத்தின்” (Communist League) வேலைத்திட்டமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. முதலில் முற்றிலும் ஜெர்மன் தொழிலாளர்களுக்காகவே இருந்த கம்யூனிஸ்டுக் கழகம் பின்னாளில் சர்வதேச அமைப்பாக ஆயிற்று. 1848-க்கு முன்பு [ஐரோப்பா] கண்டத்துள் நிலவிய அரசியல் நிலைமைகளின் காரணமாக, இக்கழகம் தவிர்க்க முடியாதவாறு ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட்டு வந்தது. வெளியிடுவதற்கென ஒரு முழுமையான, கொள்கை மற்றும் நடைமுறை சார்ந்த கட்சி வேலைத்திட்டத்தைத் தயாரித்து அளிக்கும்படி, 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்டுக் கழக மாநாட்டில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பணிக்கப்பட்டனர்.
...
ஆளும் வர்க்கங்கள் மீது மற்றுமொரு தாக்குதலுக்குப் போதுமான பலத்தை ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் மீண்டும் பெற்றபோது, சர்வதேசத் தொழிலாளர் சங்கம் [அகிலம்] உதித்தெழுந்தது. ஆனால், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் மிக்க பாட்டாளி வர்க்கம் முழுவதையும் ஒரே அமைப்பாக ஒன்றிணைக்க வேண்டுமென்ற வெளிப்படையான குறிக்கோளுடன் நிறுவப்பட்ட இச்சங்கத்தால், அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளை உடனடியாகப் பிரகடனப்படுத்த இயலவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும், ஃபிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புரூதோன் (Proudhon)[12] ஆதரவாளர்களும், ஜெர்மன் நாட்டு லஸ்ஸாலியர்களும் (Lassalleans)[ஏ2] ஏற்றுக் கொள்ளும் அளவுக்குப் பரந்த வேலைத்திட்டம் ஒன்றையே அகிலமானது கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

அனைத்துத் தரப்பினரும் மனநிறைவுகொள்ளும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை வரைந்து கொடுத்த மார்க்ஸ், தொழிலாளி வர்க்கத்தின் அறிவுநுட்ப வளர்ச்சியில் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார். அத்தகு வளர்ச்சி, ஒன்றிணைந்த செயல்பாடு, பரஸ்பரக் கலந்துரையாடல் ஆகியவற்றின் நிச்சயமான விளைவாகும். மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நேரடி நிகழ்வுகளும், சாதக பாதகச் சூழ்நிலைகளும், வெற்றிகளையும்விட அதிகமாகத் தோல்விகளும், மனிதர்களின் அபிமானத்துக்குரிய பல்வேறு சாகச உத்திகள் போதுமானவை அல்ல என்பதை அவர்களின் மனதில் உறைக்கும்படி தெளிவாக உணர்த்தும். அவை தொழிலாளி வர்க்க விடுதலைக்குரிய மெய்யான நிலைமைகள் குறித்து, மேலும் முழுமையான உள்ளார்ந்த புரிதலுக்கு வழிகோலவே செய்யும் என மார்க்ஸ் கருதினார். மார்க்ஸின் எண்ணம் சரியாகவே இருந்தது. அகிலமானது 1874-இல் கலைக்கப்பட்டபோது, அது [தொடங்கப்பட்ட ஆண்டான] 1864-இல் கண்ட தொழிலாளிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தொழிலாளிகளையே விட்டுச் சென்றது.
..
... அறிக்கையின் வரலாறு, நவீனத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கிறது. தற்போது அறிக்கையானது, ஐயத்துக்கு இடமின்றி சோஷலிச இலக்கியங்கள் அனைத்தினுள்ளும் மிகப்பரந்த அளவில் செல்வாக்குப் பெற்ற, மிகவும் சர்வதேசத் தன்மை கொண்ட படைப்பாகத் திகழ்கிறது. சைபீரியாவிலிருந்து கலிஃபோர்னியாவரை கோடானு கோடி உழைக்கும் மக்களால் பொது வேலைத்திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் அறிக்கை எழுதப்பட்ட காலத்தில், இதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறம், பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளைத் தழுவியோராக அறியப்பட்டனர்: இங்கிலாந்தில் ஓவனியர்கள் (Owenites)[16], ஃபிரான்சில் ஃபூரியேயர்கள் (Fourierists)[17]. இவ்விரு வகையினரும் ஏற்கெனவே வெறும் குறுங்குழுக்கள் நிலைக்குத் தாழ்ந்து, படிப்படியாக மறைந்து கொண்டிருந்தனர். மறுபுறம், மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராதபடி, எல்லா வகையான ஒட்டுவேலைகள் மூலம், அனைத்து வகையான சமூகக் குறைபாடுகளையும் களைவதாகப் பறைசாற்றினர். இந்த இரு வகையினரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்துகொண்டு, பெரும்பாலும் ''படித்த'' வர்க்கங்களின் ஆதரவையே எதிர்நோக்கியிருந்தனர். தொழிலாளி வர்க்கத்தின் எந்தப் பகுதி, வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் போதாது என்பதைத் தெளிவுபட உணர்ந்துகொண்டு, ஒரு முழுமையான சமுதாய மாற்றத்தின் தேவையைப் பறைசாற்றியதோ, அந்தப் பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக்கொண்டது. அது பக்குவமற்ற, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும், அது மூலாதாரமான கருத்தைத் தொட்டுக் காட்டியது.

அறிக்கையானது எங்களுடைய கூட்டுப் படைப்பாக இருக்கும் நிலையில், இதன் மையக் கருவாக அமைந்த அடிப்படை வரையறுப்பு மார்க்சுக்கே உரியது என்பதைக் குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். அந்த அடிப்படை வரையறுப்பு இதுதான்: வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்போது பொதுவாக நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி முறையும் பரிவர்த்தனை முறையும், அதிலிருந்து தவிர்க்கவியலா வகையில் பெறப்படும் சமூக அமைப்புமுறையும்தான் அடித்தளமாக அமைகின்றன. அதன்மீதே அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் அறிவுத்துறை வரலாறு எழுப்பப்படுகிறது. அந்த அடித்தளத்திலிருந்து மட்டுமே அவற்றை விளக்கவும் முடியும். இதன் காரணமாகவே, மனிதகுல வரலாறு முழுமையும் (நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்டிருந்த புராதனப் பழங்குடி சமுதாயம் சிதைவுற்ற காலம்தொட்டே) வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. அதாவது, சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. இந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறானது பரிணாமங்களின் தொடர்வரிசையாக அமைகிறது. அது, இன்றைய காலகட்டத்தில், ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வர்க்கம் அதாவது பாட்டாளி வர்க்கம், தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையுமே எல்லா விதமான சுரண்டல், ஒடுக்குமுறை, வர்க்கப் பாகுபாடுகள், வர்க்கப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றாகவும் முடிவாகவும் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டுகின்ற, ஒடுக்குகின்ற வர்க்கத்தின் அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து தன்னுடைய விடுதலையைப் பெற முடியாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது.

என் கருத்துப்படி, டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை, இந்த வரையறுப்பு வரலாற்றியலுக்கு ஆற்றப் போவது நிச்சயம். நாங்கள் இருவரும் 1845-க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறுப்பை நோக்கிப் படிப்படியாக நெருங்கி வந்துகொண்டிருந்தோம். நான் சுயேச்சையாக எந்த அளவுக்கு இந்த வரையறுப்பை நோக்கி முன்னேறி இருந்தேன் என்பதை, "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை" (Conditions of the Working Class in England) என்னும் என்னுடைய நூல்மூலம் நன்கு அறியலாம். ஆனால், 1845-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் புரூசெல்ஸ் நகரில் மார்க்ஸை நான் மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைத் தயாராக வகுத்து வைத்திருந்தார். நான் இங்கு எடுத்துரைத்துள்ளது போன்ற அதே அளவு தெளிவான சொற்களில் என்முன்னே எடுத்துவைத்தார்."

1890-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை- ஏங்கெல்ஸ்

"...அறிக்கை வெளியானபோது, அதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் இரண்டு வகையினர் சோஷலிஸ்டுகள் எனக் கருதப்பட்டனர். ஒருபுறம் பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளின் ஆதரவாளர்கள் இருந்தனர். குறிப்பாக, இங்கிலாந்தில் ஓவனியர்கள், ஃபிரான்சில் ஃபூரியேயர்கள். இவ்விரு வகையினரும் அக்காலத்திலேயே குறுங்குழுக்கள் நிலைக்குச் சுருங்கிப் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தனர். மறுபுறம் மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள் இருந்தனர். மூலதனத்துக்கும் லாபத்துக்கும் இம்மியளவும் தீங்கு நேராதபடி, இவர்கள் தமது சகல நோய்நீக்கும் சஞ்சீவிகள் மூலமும் அனைத்துவகை சில்லறை ஒட்டு வேலைகள் மூலமும் சமூகக் கேடுகளைக் களைய விரும்பினர். இவ்விரு வகையினரும் தொழிலாளர் இயக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள். 'படித்த' வகுப்பாரின் ஆதரவையே அதிகமாக நாடியவர்கள். என்றாலும் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி சமுதாய அமைப்பைத் தீவிரமாக மாற்றி அமைக்க வேண்டுமெனக் கோரியது. வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் போதாது என்பதை அது தீர்க்கமாக உணர்ந்திருந்தது. இப்பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது. இன்னமும் அது, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட, பல வேளைகளில் பெரும்பாலும் பக்குவமற்ற ஒரு கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும் அது, ஃபிரான்சில் காபேயின் 'ஐகேரியக்' கம்யூனிசம், ஜெர்மனியில் வைட்லிங்கின் கம்யூனிசம் ஆகிய இரண்டு கற்பனாவாதக் கம்யூனிச அமைப்புகளைத் தோற்றுவிக்கும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்ததாக விளங்கியது. 1847-இல் சோஷலிசம் என்பது முதலாளித்துவ வர்க்க இயக்கத்தையும் [வேறொரு முகவுரையில் நடுத்தர வர்க்க இயக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்], கம்யூனிசம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் குறிப்பனவாக இருந்தன. சோஷலிசமானது, குறைந்தபட்சம் [ஐரோப்பா] கண்டத்தில் மிகவும் மரியாதைக்கு உரியதாக விளங்கியது, ஆனால் கம்யூனிசமோ அதற்கு நேர்மாறானதாக இருந்தது. நாங்கள் மிகத் தொடக்க காலம்தொட்டே, 'தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தின் செயல்பாட்டால்தான் பெறப்பட்டாக வேண்டும்'[21] என்ற தீர்மானகரமான கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தோம். எனவே, [சோஷலிசம், கம்யூனிசம் என்கிற] இரண்டு பெயர்களுள் எதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அன்றைக்கு எங்களிடம் எவ்விதத் தயக்கமும் இருந்திருக்க முடியாது. அன்றுமுதல் இன்றுவரை அப்பெயரை நிராகரிக்கும் எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.

”உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” [அடிக்குறிப்பு எண் 52 காண்க] நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத் திரண்டெழுந்த அந்த முதலாவது பாரிஸ் புரட்சியின் தறுவாயில், நாங்கள் இந்த முழக்கத்தை உலகத்துக்குப் பிரகடனம் செய்தபோது, மிகச்சில ஆதரவுக் குரல்களே எழுந்தன. என்றாலும், 1864 செப்டம்பர் 28-இல் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளி மக்கள், பெருமைமிக்க நினைவுக்குரிய சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தில் [முதலாவது அகிலம்] கைகோத்து நின்றார்கள். இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளே நீடித்தது என்பது உண்மைதான். ஆனால் அது உருவாக்கிய, அனைத்து நாட்டுப் பாட்டாளிகளின் அழிவில்லா ஐக்கியமானது இன்னும் நிலைத்து நிற்கிறது, எப்போதையும்விட வலிமைமிக்கதாக வாழ்கிறது என்பதற்கு இன்றைய நாளைவிட வேறு சிறந்த சாட்சி ஏதுமில்லை. காரணம், இந்த வரிகளை நான் எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய தினம்[22], ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் தனது போரிடும் சக்திகளை மேலாய்வு செய்து வருகின்றது. இந்தப் போராட்ட சக்திகள் முதன்முதலாகத் திரட்டப்பட்டுள்ளன. அதுவும் ஒரே படையணியாக, ஒரே கொடியின் கீழ், ஒரே உடனடிக் குறிக்கோளுக்காகத் திரட்டப்பட்டுள்ளன. 1866-இல் அகிலத்தின் ஜெனீவா மாநாட்டிலும், மீண்டும் 1889-இல் பாரிஸ் தொழிலாளர் மாநாட்டிலும் பிரகடனப்படுத்தியதைப்போல், ஒரே மாதிரியான எட்டு மணிநேர வேலைநாள் என்பதை முறையாகச் சட்டம் இயற்றி நிலைநாட்ட வேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள் ஆகும். இன்றைய இந்தக் காட்சி, அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் இன்றைக்கு மெய்யாகவே ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்கிற உண்மையை, அனைத்து நாடுகளின் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் காணும் வண்ணம் அவர்களின் கண்களைத் திறக்கும்."

1892-ஆம் ஆண்டின் போலிஷ் பதிப்புக்கு எழுதிய முகவுரை- ஏங்கெல்ஸ்

"அனைத்துக்கும் முதலாவதாக, அண்மைக் காலமாகவே, அறிக்கையானது ஐரோப்பாக் கண்டத்தில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியைக் காட்டும் ஒரு சுட்டுகைபோல (index) ஆகியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். ஒரு குறிப்பிட்ட நாட்டில் பெருவீதத் தொழில்துறை விரிவடையும் அதே அளவுக்கு, அந்நாட்டுத் தொழிலாளர்களிடையே, உடைமை வர்க்கங்கள் தொடர்பாகத் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் அவர்களின் நிலைபாடு குறித்துத் தெளிவுபெற வேண்டிய தேவையும் வளர்கின்றது. சோஷலிச இயக்கம் அவர்களிடையே பரவுகின்றது. அறிக்கைக்கான தேவையும் அதிகரிக்கின்றது. இவ்வாறு, ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டு மொழியில் வினியோகமாகின்ற அறிக்கையினுடைய பிரதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு, அந்நாட்டுத் தொழிலாளர் இயக்கத்தின் நிலையை மட்டுமன்றிப் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சி நிலையைக்கூடப் பெருமளவு துல்லியமாக அளவிட்டுவிட முடியும்."

1893-ஆம் ஆண்டின் இத்தாலியப் பதிப்புக்கு எழுதிய முகவுரை
இத்தாலிய வாசகருக்கு- ஏங்கெல்ஸ்


" 1848-ஆம் ஆண்டுப் புரட்சி, சோஷலிசப் புரட்சியாக இருக்கவில்லை. என்றாலும், அது சோஷலிசப் புரட்சிக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது; அதற்கான அடிப்படையை உருவாக்கித் தந்தது. அனைத்து நாடுகளிலும் பெருவீதத் தொழில்துறைக்கு ஊக்கம் அளித்ததன் மூலம், முதலாளித்துவ ஆட்சியமைப்பு, கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில், எண்ணிறந்த, ஒன்றுதிரண்டுள்ள, சக்திமிக்க பாட்டாளி வர்க்கத்தை எங்கெங்கும் தோற்றுவித்துள்ளது. இவ்வாறாக, முதலாளித்துவ வர்க்கம், அறிக்கையின் மொழியில் சொல்வதெனில், தனக்குச் சவக்குழி தோண்டுவோரைத் தானே வளர்த்தெடுத்துள்ளது. ஒவ்வொரு தேசத்துக்கும் தன்னாட்சியையும் ஐக்கியத்தையும் மீட்டளிக்காமல், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையையும், பொதுவான லட்சியங்களை நோக்கிய, இந்தத் தேசங்களின் சமாதான வழிப்பட்ட அறிவார்ந்த ஒத்துழைப்பையும் வென்றெடுப்பது சாத்தியமாக இருக்காது."

No comments:

Post a Comment