(ஸ்டாலின் இங்கே ஒரு கம்யூனிஸ்ட்
கட்சியின் தேவையையும் அதன் பணியையும் தெளிவாகக் கூறியுள்ளார். வலது-இடது திரிபற்ற மார்க்சியத்தை
விளக்கி உள்ளார்)
பாட்டாளி வர்க்க அமைப்புகள்
எந்தெந்த வடிவங்களை மேற்கொள்ள வேண்டும் ?
தொழிற்சங்கங்களும்,
தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களும் (பிரதானமாக உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின்
கூட்டுறவு சங்கங்கள்), ஆகமிகப் பரந்த மக்கள்திரள் அமைப்புகளாகும். தொழிற்சங்கங்களின் நோக்கம் என்ன? இப்போதைய
முதலாளித்துவக் கட்டமைவின் வரம்புகளுக்குள், தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கு,
பிரதானமாக தொழில் மூலதனத்தை எதிர்த்துப் போராடுவதாகும். கூட்டுறவுச் சங்கங்களின் நோக்கம்
என்ன? இதுவும் இப்போதைய முதலாளித்துவக் கட்டமைவின் வரம்புகளுக்கு உட்பட்டு, பிரதானமாக
வணிக மூலதனத்தை எதிர்த்துப் போராடுவதாகும். அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளைக் குறைப்பதன்
மூலம், தொழிலாளர்கள் மத்தியில் நுகர்வு மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும். திரளான
பரந்துபட்ட பாட்டாளிகளை அமைப்பாக்குவதற்கான, ஒரு வழிமுறைச் சாதனம் என்ற முறையில், தொழிற்
சங்கங்களும் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் பாட்டாளி வர்க்கத்துக்கு சந்தேகத்துக்கு
இடமின்றி தேவைப்படுகின்றன.
எனவே,
மார்க்ஸ், எங்கெல்சின் பாட்டாளி வர்க்க சோசலிசக் கண்ணோட்டத்தின்படி, இவ்விரு வகையான
அமைப்பு வடிவங்களையும், பாட்டாளி வர்க்கமானது தவறாமல் பயன்படுத்தி, தனது வலுவைக் கூட்டி
தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதைய அரசியல் சூழ்நிலைகளின் கீழ் எவ்வளவு
சாத்தியமோ, அந்த அளவுக்குச் செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.
இருப்பினும், தொழிற்சங்கங்களும்
கூட்டுறவுச்சங்கங்களும் போர்க்குணமிக்கப் பாட்டாளி வர்க்கத்தின் அமைப்பு ரீதியிலான
தேவைகளை நிறைவுசெய்ய முடியாது. இது ஏன்?
ஏனென்றால்,
நாம் குறிப்பிடும் இந்த அமைப்புகள் இப்போதுள்ள முதலாளித்துவ கட்டமைவின் வரம்புகளை மீறிச்
செல்ல முடியாது. இருப்பினும் தொழிலாளர்கள்
விரும்புவது என்ன?
முதலாளித்துவ
அடிமைத்தனத்தில் இருந்து தம்மை முழுமையாக விடுவித்துக் கொள்ள தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.
முதலாளித்துவத்தின் இந்த வரம்புகளை அடித்து நொறுக்க அவர்கள் விரும்புகின்றனரே ஒழிய,
முதலாளித்துவத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு
மட்டுமே செயல்பட அவர்கள் விரும்பவில்லை. எனவே,
இவற்றுக்கும் மேலாக, வேறொரு அமைப்பு பாட்டாளி, வர்க்கத்துக்குத் தேவைப்படுகிறது. அந்த
அமைப்பானது, எல்லா தொழில்களிலுமுள்ள வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்களை தன்னைச் சுற்றிலும்
அணிதிரட்டிக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்; பாட்டாளி வர்க்கத்தை வர்க்க உணர்வுமிக்கதாக
மாற்றக் கூடியதாக அது இருக்க வேண்டும்; முதலாளித்துவக் கட்டமைவை அடித்து நொறுக்குவதை
பாட்டாளி வர்க்கம் தனது நோக்கமாக ஏற்கச் செய்வதாக அந்த அமைப்பு இருக்க வேண்டும். பாட்டாளி
வர்க்கத்தை சோசலிசப் புரட்சிக்குத் தயாரிப்பதாக அது இருக்க வேண்டும்.
இத்தகையதொரு அமைப்புதான்,
பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியாகும்.
இந்தக்
கட்சி ஒரு வர்க்க கட்சியாக, பிற கட்சிகளிடமிருந்து விடுபட்டு முற்றிலும் சுயேச்சையானதொரு
கட்சியாகவே இருந்தாக வேண்டும். ஏன் இப்படி இருக்க வேண்டுமென்றால், இது பாட்டாளி வர்க்கத்தின்
கட்சியாகும்; ஏனென்றால், பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பது, அந்த வர்க்கத்தாலேயே
கொண்டுவரப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
இந்தக் கட்சி ஒரு புரட்சிகரமான
கட்சியாகவே இருந்தாக வேண்டும். அது ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஏனென்றால், புரட்சிகரமான
வழிமுறைச் சாதனங்களால்தான், சோசலிச புரட்சி என்ற சாதனத்தால்தான் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட
முடியும்.
இந்தக் கட்சி ஒரு சர்வதேசக்
கட்சியாகவே இருந்தாக வேண்டும்; எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த வர்க்க உணர்வுமிக்கப்
பாட்டாளிகளுக்கு இந்தக் கட்சியின் கதவுகள் திறந்திருக்க வேண்டும். இது ஏன் அப்படி இருக்க
வேண்டும்? ஏனென்றால், தொழிலாளர்களின் விடுதலை என்பது ஒரு சமூகப் பிரச்சினையே ஒழிய,
ஒரு தேசியப் பிரச்சினை அல்ல. இந்த சமூகப் பிரச்சினையானது, ஜார்ஜியப் பாட்டாளிகள், ரசியப்
பாட்டாளிகள், இன்னும் பிற தேசங்களைச் சேர்ந்த பாட்டாளிகள் அனைவருக்குமே சமமான முக்கியத்துவம்
வாய்ந்த பிரச்சினையாகும்.
எனவே
தெளிவாகத் தெரியும் விசயம் என்னவென்றால், பல்வேறு தேசங்களின் பாட்டாளிகள் மேலும் மேலும்
நெருக்கமாக ஒன்றுபட ஒன்றுபட, அவர்களுக்கு இடையில் எழுப்பப்பட்டுள்ள தேசியத் தடைகள்
மேலும் மேலும் உடைபட உடைபட, பாட்டாளி வர்க்கத்தின் கட்சி மேலும் மேலும் பலமடையும்;
பாட்டாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத ஒரே கட்சியாக, கட்சி அமைவதற்கு வழிவகை செய்யும்.
எனவே,
எந்த அளவுக்குச் சாத்தியமோ அந்த அளவுக்கு, பாட்டாளி வர்க்கத்தின் அமைப்புகளில், கட்சி,
தொழிற்சங்கம், கூட்டுறவுச் சங்கம் என்று எதுவாக இருந்தாலும் அவற்றில், தொளதொளப்பான
கூட்டிணைவுக் கோட்பாட்டுக்கு மாறாக, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை நடைமுறைக்குக்
கொண்டு வருவது அவசியமாகும்.
இன்னொரு
விசயமும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எந்த அளவுக்கு அரசியல் நிலைமைகள் அல்லது பிற நிலைமைகள்
குறுக்கிட்டுத் தடுக்காமல் இருக்கின்றனவோ, அதுவரையில், அந்த அளவுக்கு இந்த அமைப்புகள்
அனைத்துமே, ஜனநாயகக் கோட்பாட்டு அடிப்படையில் கட்டியமைக்கப்பட வேண்டும்.
ஒரு பக்கத்தில் கட்சிக்கும்,
மற்றொரு பக்கத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உள்ள
உறவுகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண் டும்? தொழிற்சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும்
கட்சி சார்பான வையாக இருக்க வேண்டுமா? அல்லது கட்சி சார்பற்றவையாக இருக்க வேண்டுமா?
எந்த
இடத்தில், எந்த நிலைமைகளின் கீழ் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டியுள்ளது என்பதைச் சார்ந்தே
இந்தக் கேள்விக்கான பதில் இருக்கும். ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் கவனிக்க வேண்டிய
ஒரு விசயம் உள்ளது. எந்த அளவுக்கு தொழிற்சங்களும் கூட்டுறவுச் சங்கங்களும் பாட்டாளி
வர்க்கத்தினுடைய சோசலிஸ்டுக் கட்சியுடன் நட்புறவாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு, ஒரு
பக்கத்தில் கட்சியும் இன்னொரு பக்கத்தில் தொழிற்சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும்
கூடுதலாக முழு அளவில் வளர்ச்சியுற்று வலுப்பெறும். இதில் எவ்வித ஐயப்பாடும் இருக்க
முடியாது.
இதை ஏன் சொல்கிறோம்? ஏனென்றால்
தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங் கள் என்ற இரண்டுமே பொருளாதார அமைப்புகள்தான்.
ஒரு பல மிக்க சோசலிஸ்டுக் கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளை இவை கொண்டிராவிட்டால்,
என்ன நடக்கும்? அவற்றில்
அற்ப விசயங்கள், குறுகிய தொழில் நலன்கள், கோரிக்கைகள் முன்னணிக்கு வரும். இவை பாட்டாளி
வர்க்கத்தின் பொதுநலன்களைப் பின்னுக்குத் தள்ளி இதன் மூலம், பாட்டாளி வர்க்க நோக்கத்துக்கு
பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும். ஆகவே எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா வழக்குகளிலும்,
தொழிற்சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும், கட்சியின் சித்தாந்த அரசியல் செல்வாக்குக்கு
உட்பட்டு இருப்பதை உத்திரவாதம் செய்வது அவசியம். இதைச் செய்யும்போது மட்டும்தான், நாம்
குறிப் பிட்ட அமைப்புகள் சோசலிசப் பயிற்சிப் பள்ளியாக மாற்றப்படும். அப்போதுதான் இவை,
இப்போது தனித்தனி குழுக்களாகப் பிளவுண்டு இருக்கும் பாட்டாளி வர்க்கத்தை, வர்க்க உணர்வுமிக்க
வர்க்கமாக ஒழுங்கமைக்கும்.
மார்க்ஸ்-எங்கெல்சினுடைய,
பாட்டாளி வர்க்க சோசலிசத்தின் பொதுவான தனித்தன்மை வாய்ந்த கூறுகள் இத்தகையவைதான்.
(அராஜகவாதமா? சோஷலிசமா?)