Wednesday, 22 December 2021

02) கட்சியின் நெருக்கடியும் நமது கடமைகளும்- ஜே.வி. ஸ்டாலின்

ஜே.வி. ஸ்டாலின்:-

“நமது கட்சி மிகவும் மோசமானதொரு நெருக்கடியினூடாக செய்ல்பட்டு வருகிறது என்பதொன்றும் ரகசியமான விஷயமல்ல. உறுப்பினர்களை இழந்து வருவது; நமது அமைப்புகள் சுருங்குவது பலவீனமாகி வருவது; அமைப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தனிமைப்பட்டு நிற்பது; ஒருங்கிணைந்த கட்சி செயல்பாடு இல்லாத நிலை ஆகிய இவை அனைத்துமே கட்சி நோய்வாய்ப்பட்டுள்ளதையும், மிக மோசமான நெருக்கடியினூடாக அது சென்று கொண்டிருக்கிறது என்பதையுமே எடுத்துக் காட்டுகின்றன.

கட்சியை சோர்வடையச் செய்யும் முதல் விஷயம் என்பது அதன் அமைப்புகள் விரிவான மக்கள் திரளிடமிருந்து தனிமைப் பட்டு நிற்பதே ஆகும். ஒரு நேரத்தில் நமது அமைப்பின் அணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தனர். அவர்கள் லட்சக்கணக்கான மக்களுக்குத் தலைமை தாங்கி வந்தனர். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. ஆயிரக்கணக்கானவர்கள் என்பதற்குப் பதிலாக இப்போது டஜன் கணக்கில் அல்லது அதிகபட்சமாக நூற்றுக் கணக்கில்தான் நமது அமைப்பில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். லட்சக்கணக்கிலான மக்களுக்குத் தலைமை தாங்குவது என்பதைப் பொறுத்தவரை பேசாமல் இருப்பதே உத்தமம். நமது கட்சி விரிவான அளவில் மக்களிடையே தத்துவார்த்த ரீதியான செல்வாக்கை செலுத்தி வருகிறது என்பதும், மக்களுக்குக் கட்சியைப் பற்றித் தெரியும் என்பதும் மக்கள் அதை மதிக்கிறார்கள் என்பதும் உண்மைதான், அடிப்படையில் அதுவே 'புரட்சிக்கு முந்தைய' கட்சியிலிருந்து 'புரட்சிக்குப் பிந்தைய’ கட்சியை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆனால் நடைமுறையிலோ அது மட்டுமே கட்சியின் செல்வாக்காக இருக்கிறது.

எனினும் தத்துவார்த்த செல்வாக்கு மட்டுமே போதுமானதல்ல; அமைப்பு ரீதியாக எவ்வளவு குறுகிய அளவில் மக்களை அணி திரட்டுகிறோமோ அது தத்துவார்த்த ரீதியான அகலத்தை சமனப்படுத்தி விடுகிறது. இதுவே நமது அமைப்புகள் விரிவான மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்பதற்கான காரணமாகும்.

....      ....       ....            

பொதுவான கட்சி நடவடிக்கையின் அடிப்படையில் மட்டுமே ருஷ்யா முழுவதிலும் சிதறிக் கிடக்கின்ற அமைப்புகளை ஒன்றிணைக்க முடியும். எனினும் உள்ளூர் அமைப்புகளின் அனுபவங்கள் அனைத்தையும் பொதுவான மையமொன்றில் சேகரித்து, அங்கிருந்து பொதுவான கட்சி அனுபவத்தை உள்ளூர் அமைப்புகள் அனைத்திற்கும் பகிர்ந்தளிக்காமல் பொதுவானதொரு கட்சி நடவடிக்கை என்பது இயலாத ஒன்றாகும்.

....      ....       ....            

டூமாவின் மன்றத்திலிருந்து, தொழிற்சங்கங்களிலிருந்து, கூட்டுறவு சங்கங்கள், சவ அடக்கத்திற்கான நிதிகள் வரையில் தன்னைச் சுற்றியுள்ள சட்டபூர்வமான அனைத்து வாய்ப்புகளையும் கட்சி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நெருக்கடியை எவ்வளவு விரைவாக நாம் வெற்றி கொள்கிறோமோ, அவ்வளவு விரைவாக ருஷ்ய சமூக - ஜனநாயகக் தொழிலாளர் கட்சியின் மீட்சிக்கும் புனரமைப்பிற்குமான கடமையை நம்மால் நிறைவேற்ற முடியும்.”

(கட்சியின் நெருக்கடியும் நமதுகடமையும்- ஜே.வி. ஸ்டாலின்:- படைப்புகள்,

தொகுதி 2, பக். 170-179-182 (1909))

அட்டவணை

ஸ்டாலின் படைப்புகளைப் படிப்போம் புதிய சமூகத்தைப் படைப்போம்


****************************************************************

01) பாட்டாளி வர்க்கமானது என்ன செய்ய வேண்டும்

02) கட்சியின் நெருக்கடியும் நமது கடமைகளும்

03) தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன?

01) பாட்டாளி வர்க்கமானது என்ன செய்ய வேண்டும் - ஜே.வி. ஸ்டாலின்

 (ஸ்டாலின் இங்கே கூறுகிற அடிப்படைத் தெளிவு, ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்தக் காரணத்தினால்தான் அங்கே புரட்சி நடத்த முடிந்திருக்கிறது. வேலை நிறுத்தம், ஆர்ப்பட்டாங்கள், பாராளுமன்றம் போன்ற, வர்க்கப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்களை இங்கே ஸ்டாலின் சுட்டிக்காட்டுகிறார். இந்த வழிமுறைகள் மட்டுமே முதலாளித்துவத்தை தூக்கி எறிந்திட போதுமானது அல்ல. இந்த வழிமுறைகள் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கு அவசியமான சில நிபந்தனைகளையும் தயாரிப்பையும் மட்டுமே உருவாக்கும். சோசலிசப் புரட்சியினால் தான் முதலாளித்துவத்தை தூக்கி எறியமுடியும்.  அதைப் பற்றி ஸ்டாலின் கூறியுள்ளார்)

 ஜே.வி. ஸ்டாலின்:-

“பாட்டாளி வர்க்கமானது என்ன செய்ய வேண்டும், தனது கிட்டத்தை உணர்வுபூர்வமாக முன்னெடுக்க அது எந்தப் பாதையில் செல்ல வேண்டும், சோசலிசத்தைக் கட்டியமைக்க அது எந்தப் பாதையில் சென்று முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய வேண்டும்?

இதற்கு விடை தெளிவாக உள்ளது: முதலாளித்துவத்துடன் சமாதானமாக இருந்து கொண்டு அதனால் சோசலிசத்தை சாதிக்க முடியாது - இது நிலைத்து நிற்கக்கூடிய வகையில் போராட்டப் பாதையை மேற்கொள்ள வேண்டும். இப்போராட்டமானது ஒட்டு மொத்த முதலாளி வர்க்கத்தை எதிர்த்து ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் போராட்டமாக, ஒரு வர்க்கப் போராட்டமாக இருக்க வேண்டும். இப்போராட்டத்தினால் ஒன்று முதலாளித்துவ வர்க்கமும் அதன் முதலாளித்துவமும் இருக்க வேண்டும் அல்லது பாட்டாளி வர்க்கமும் அதன் சோசலிசமும் இருக்க வேண்டும்! பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடுகளுக்கும் அதன் வர்க்கப்போராட்டத்துக்கும் இதுவே அடிப்படையாக இருக்க வேண்டும்.

ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப்போராட்டம் எண்ணற்ற வடிவங்களை மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு வேலை நிறுத்தம் - ஒன்று பகுதியளவிலானதாக இருக்கலாம் அல்லது பொது வானதாக இருக்கலாம், அது வர்க்கப் போராட்டமே என்பதில் வேறுபாடு எதுவும் இல்லை . புறக்கணித்தலும், நாசவேலையும் கூட வர்க்கப் போராட்டமே என்பதில் ஐயமில்லை. பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொது பிரதிநிதித்துவ உறுப்புகளில் செயல்படுதல் போன்ற இதரவையும் அவை தேசியப் பாராளுமன்றமோ அல்லது உள்ளூர் அரசாங்க உறுப்புகளோ - அதில் எந்த வேறுபாடும் இல்லை - அவை அனைத்தும் கூட வர்க்கப் போராட்டமே. இவையனைத்தும் ஒரே வர்க்கப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்கள் ஆகும்.

தனது வர்க்கப்போராட்டத்தில் பாட்டாளிவர்க்கத்துக்கு எந்த வடிவிலான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தவில்லை, இங்கு நாம் ஒவ்வொன்றும் உரிய காலத்திலும், களத்திலும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வையும், அமைப்பையும் வளர்த்தெடுப்பதற்கு அத்தியாவசியமான வழிமுறைகளாகப் பாட்டாளிகளுக்குத் தேவைப்படுகிறது என்பதில் ஐயமில்லை என்று வெறுமனே நாம் கருத்துரைக்கிறோம்.

உயிர்மூச்சு எப்படி தேவைப்படுவதாக உள்ளதோ அது போன்றே பாட்டாளி வர்க்கத்துக்கான வர்க்க உணர்வும், அமைப்பும் தேவைப்படுகிறது. எனினும் பாட்டாளி வர்க்கத்துக்கு அந்த அனைத்துப் போராட்ட வடிவங்களும் வெறுமனே தயாரிப்பு, வழிமுறைகள்தான், அதில் ஒன்றை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டால் அதனால் முதலாளித்துவத்தைத் தீர்மானகரமாக தகர்த்துவிட முடியும் என்று சொல்லமுடியாது என்பதையும் கூட கவனிக்க வேண்டும்.

பொது வேலை நிறுத்தத்தால் மட்டுமே முதலாளித்துவத்தைத் தகர்த்துவிட முடியாது: முதலாளித்துவத்தை தகர்ப்பதற்கு அவசியமான சில நிலைமைகளை மட்டுமே பொது வேலைநிறுத்தத்தால் உருவாக்க முடியும். முதலாளித்துவத்தை வெறுமனே தனது பாராளுமன்ற செயல்பாட்டினால் பாட்டாளி வர்க்கம் தூக்கியெறிய முடியும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அவசியமான சில நிபந்தனைகளை மட்டும் பாராளுமன்றத்தினால் உருவாக்க முடியும்.

பின்னர் முதலாளித்துவக் கட்டமைப்பை எந்தத் தீர்மானகரமான வழிமுறைகளைக் கொண்டு பாட்டாளி வர்க்கம் தூக்கியெறியும்?

சோசலிசப் புரட்சிதான் அந்த வழிமுறைகளாக உள்ளன.

வேலைநிறுத்தங்கள், புறக்கணிப்பு, பாராளுமன்றம், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியன அனைத்தும் பாட்டாளிவர்க்கத்தைத் தயார்ப்படுத்தும், அமைப்பாக்கும் சிறந்த போராட்ட வடிவங்கள் ஆகும். ஆனால் நிலவும் ஏற்றத்தாழ்வை இவ் வழிமுறைகள் ஒன்றினால் மட்டும் ஒழித்துக்கட்டி விட முடியாது. இந்த அனைத்து வழிமுறைகளும் ஒரு தலையாயதும், தீர்மானகரமானதுமான வழிமுறையில் ஒன்று குவிக்கப்பட வேண்டும்; முதலாளித்துவத்தை அதன் அடித்தளங்களில் இருந்து தகர்த்து தரைமட்டமாக்கிட முதலாளிய வர்க்கத்தின் மீது ஒரு தீர்மானகரமானத் தாக்குதலை நடத்திட பாட்டாளிவர்க்கம் விழித்தெழ வேண்டும். இந்தத் தலையாயதும், தீர்மானகரமானதுமான வழிமுறைகள்தான் சோசலிசப் புரட்சியாகும்.

சோசலிசப் புரட்சி என்பதை ஒரு குறுகிய திடீர் தாக்குதல் என்று கருதிக் கொள்ள வேண்டாம், சோசலிசப் புரட்சி என்பது பாட்டாளி வர்க்க மக்கள் திரளினரால் முதலாளி வர்க்கத்தை தோல்வியுறச் செய்து அதன் நிலைகளைக் கைப்பற்றிக் கொள்ள நடத்தப்படும் ஒரு தொடர்ச்சியான போராட்டமாகும். பாட்டாளி வர்க்கத்துக்கு வெற்றி என்பது முறியடிக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தின் மீது அதே காலத்தில் நடத்தப்படும் ஆதிக்கம் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் வர்க்கங்களுக்கு இடையிலான ஒரு மோதலில், ஒரு வர்க்கத்தின் தோல்வி என்பது அதன் மீதான மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது. சோசலிசப்புரட்சியின் முதல்கட்டத்தில் முதலாளித்துவத்தின் மீது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம் இருக்கும்.

பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது - இதிலிருந்துதான் சோசலிசப் புரட்சி தொடங்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கம் முழுவதுமாக முறியடிக்கப்படும் வரை, அதன் செல்வம் பறிமுதல் செய்யப்படும் வரை, பாட்டாளி வர்க்கமானது, ஒரு இராணுவப்படையை தவறாது கொண்டிருக்க வேண்டும், அது தவறாது தனது “பாட்டாளிவர்க்கக் காவல் படை'' யைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அதன் துணையோடுதான் அது உயிரை விட்டுக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்தின், எதிர்ப் புரட்சிகரத் தாக்குதலை, கம்யூனின்போது பாரீசு நகரப் பாட்டாளி வர்க்கம் செய்ததைப்போன்று அப்படியே எதிர்க்க வேண்டும்.

பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் அப்புறப்படுத்தலை சாத்தியமாக்க வேண்டுமென்பதற்காக, நிலத்தை, வனத்தை, ஆலைகளையும், தொழிற்சாலைகளையும், ரயில்வே மற்றும் இதரவற்றையும் ஒட்டுமொத்த முதலாளி வர்க்கத்திடம் இருந்து பாட்டாளிவர்க்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என்பதற்காக, பாட்டாளிவர்க்கத்துக்கு சோசலிச சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.

முதலாளி வர்க்கத்தை அப்புறப்படுத்துவதுதான் சோசலிசப் புரட்சி நிறைவேற்ற வேண்டியதாகும்.

தற்போதைய முதலாளித்துவக் கட்டமைப்பை பாட்டாளி வர்க்கம் தூக்கியெறிவதற்கு இதுவே தலையாயதும், தீர்மானகரமானதுமான வழிமுறையாக உள்ளது”

(அராஜகவாதமா சோசலிசமா? - ஜே.வி. ஸ்டாலின்:- படைப்புகள்,

                                                                                                                                               தொகுதி 1, பக். 361-364 (1907))

அட்டவணை



Thursday, 18 June 2020

பாட்டாளி வர்க்கத்தின் தொழில் நலன்களும் கூடுதல் நலன்கன்களான சோசலிசப் புரட்சியையும் பற்றி – ஸ்டாலின்


(வர்க்கப் போராட்டம் என்பது தொழிற்சங்கப் போராட்டத்துடன் நின்றுபோவதில்லை. சோசலிச புரட்சியை நிகழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதாகும். இறுதியில் ஒரு வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தைப் படைத்து, அனைத்து ஒடுக்கு முறையில் இருந்து விடுவிப்பதாகும்.)


பாட்டாளி வர்க்கத்தின் தொழில் நலன்களைக் காப்பதற்குத் தொழிற்சங்கங்கள் உருவாக்கப் படுகின்றன. அச்சங்கங்கள் கூலி உயர்வுக்காகவும், குறைவான வேலை நேரத்துக்காகவும் மற்ற இதர கோரிக்கைகளுக்காகவும் போராடுகின்றன. ஆனால் தொழில் நலன்களை விட கூடுதலாகப் பாட்டாளி வர்க்கத்துக்கு சோசலிசப் புரட்சியை நடத்துவது, சோசலிச சமூகத்தை நிறுவுவது என்ற பொதுவான வர்க்க நலன்களும் உள்ளன. எனினும் ஓர் ஒன்றுபட்ட, பிளவுகளற்ற வர்க்கமாகப் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில் சோசலிசப்புரட்சியை சாதிப்பது சாத்தியமல்ல. இதன் காரணமாக, பாட்டாளி வர்க்கம் அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டியதாகிறது, தனது இத்தகைய அரசியல் இயக்கத்திற்கான சித்தாந்த தலைமையாக செயல்படுவதற்குத்தான் அதற்கு ஓர் அரசியல் கட்சியும் தேவைப் படுகிறது.

பெரும்பான்மையான தொழிலாளர்கள் சங்கங்கள் நிச்சயமாக கட்சி சார்பற்றவையாகவும், நடுநிலை வகிப்பவையாகவும் உள்ளனவாகும். ஆனால் கட்சியிடமிருந்து நிதி விவகாரங்களிலும், அமைப்பு விவகாரத்திலும் தான் அவை சுயேச்சையாக உள்ளன என்பதை மட்டுமே இது பொருள்படுத்துகிறது. அதாவது சங்கங்கள் தமக்கென்று தனியாக சொந்த நிதிகளையும், சொந்த தலைமை அமைப்புகளையும் கொண்டு தமது சொந்தப் பேராயங்களைக் கூட்டுகின்றன, அதிகாரபூர்வமாக அவை அரசியல் கட்சிகளின் தீர்மானங்களால் வரம்பிடப்பட்டவையாக இல்லை.

தொழிற் சங்கங்களின் சித்தாந்த சார்பு என்பதைப் பொறுத்தவரை, அவை ஏதாவது அரசியல் கட்சியை சார்ந்து இருப்பதில் ஐயமிருக்கமுடியாது என்பதோடு அவ்வாறு அவை சார்பின்றி நிலவவும் முடியாது. ஏனெனில் எல்லாவற்றையும் விட வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக தொழிற்சங்கங்களில் இருப்பதால் அவர்கள் தவிர்க்க முடியாமல் தம்முடன் தமது அரசியல் சார்புகளையும் கொண்டு வருவார்கள். ஒருவேளை அரசியல் போராட்டத்தை பாட்டாளி வர்க்கத்தால் நடத்த முடியாதபோது அதனால் சில அரசியல் கட்சியின் சித்தாந்தத் தலைமையை எதிர்கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது. அதனினும் கூடுதலாக தனது சங்கங்களுக்கு "பூலோக சொர்க்கமான” சோசலிசத்தை அடையவும் வழிகாட்டியாக இருக்கும் ஒரு கட்சியை பாட்டாளி வர்க்கம் தானே நாடவேண்டியிருக்கிறது. ஆயினும் இங்கும் கூட பாட்டாளி வர்க்கமானது விழிப்புடனும், எச்சரிக்கையுணர்வுடனும் இருந்து செயல்பட வேண்டும். அது அரசியல் கட்சிகள் விற்பனைச் சரக்காக தம்மிடம் வைத்துள்ள சித்தாந்தங்களை விழிப்புடன் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். மேலும் எந்தக் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகத் தீரமாகவும், உறுதியோடும் முன்னிற்கிறதோ, எந்தக் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் செங்கொடியை உயர்த்திப் பிடிக்கிறதோ, அரசியல் அதிகாரத்தை நோக்கி துணிவோடு வழிநடத்திச் செல்கிறதோ, சோசலிசப் புரட்சியை நோக்கி எந்தக் கட்சி வழிநடத்திச் செல்கிறதோ அக்கட்சியின் சித்தாந்த தலைமையைத் தடையின்றி ஏற்க வேண்டும்.

இப்போதுவரை ரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியானது இப்பாத்திரத்தை செவ்வனே செய்துவருகிறது. எனவே இதன் விளைவாக அதன் சித்தாந்த தலைமையை ஏற்றுக் கொள்வது தொழிற்சங்கங்களின் கடமையாகும்.

இவ்வாறுதான் மெய்யாக தொழிற்சங்கங்கள் நடந்து கொள்ளும் என்பது பொது அறிவுக்கு உகந்ததுதான்.

இவ்வாறு தொழிற்சங்கங்களின் துணையுடன் நடைபெறும் பொருளாதார மோதல்கள், சமூக-ஜனநாயகத்தின் சித்தாந்த தலைமையின் கீழ் நடைபெறும் அரசியல் தாக்குதல்கள் - ஆகியனலே இன்று பாட்டாளி வர்க்கம் நடத்தக்கூடிய வர்க்கப் போராட்டத்தின் வடிவங்களாக உள்ளன.

வர்க்கப் போராட்டமானது மேலும் தீவிரமாக வெடித்தெழும் என்பதில் ஐயமிருக்க முடியாது. தனது போராட்டத்தினுள் அமைப்பின் உணர்வையும் அதன் ஒழுங்கையும் அறிமுகம் செய்வதே பாட்டாளிவர்க்கத்தின் கடமையாகும். இதை நிறைவேற்றுவதற்கு தொழிற்சங்கங்களை ஒன்றுபடுத்தி வலுப்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து ரசிய தொழிற்சங்கங்களின் பேராயத்தால் ஒரு மாபெரும் அளவில் பங்காற்ற முடியும். இன்று நமக்குத் தேவைப்படுவது "கட்டி சார்பற்ற தொழிலாளர்கள் பேராயம் அல்ல, இன்று பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுகளற்ற ஓர் ஒன்றுபட்ட வர்க்கமாகக் கட்டி, யமைப்பதற்காக வேண்டி தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களே இன்று நமக்குத் தேவைப்படுவனவாகும். அதே சமயத்தில், கட்சியை வலுப்படுத்தவும் அதை எஃகுறுதி கொண்ட கோட்டையாக மாற்ற வும் பாட்டாளி வர்க்கம் தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் கட்சிதான் அதன் வர்க்கப் போராட்டத்தில் அரசியல் மற்றும் சித்தாந்த தலைவராக செயல்படக் கூடியதாகும்.
(தொகுதி 1 – வர்க்கப் போராட்டம் – பக்கம்-300 -302)

Wednesday, 10 June 2020

உற்பத்தி உறவுகள் – எங்கெல்ஸ்


“உற்பத்தியின் நிகழ்வுப்போக்கில், மனிதர்கள் இயற்கையின்மீது மட்டுமன்றித் தங்களுக்குள் ஒருவர் மீது மற்றவரும் செயலாற்றுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட வழிமுறையில் ஒன்றுசேர்ந்து உழைப்பதன்மூலமும், தம் செயல்பாடுகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதன்மூலமும்தான் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தி செய்யும் பொருட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் வரையறுத்த தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தச் சமூகத் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் உட்பட்டே இயற்கை மீதான அவர்களின் செல்வாக்குச் செயலாற்றுகிறது, அதாவது உற்பத்தி நடைபெறுகிறது.

உற்பத்தியாளர்கள் இடையிலான இந்தச் சமூக உறவுகளும், எந்த நிலைமைகளின்கீழ் தம் செயல்பாடுகளைப் பரிமாறிக் கொண்டு, உற்பத்திச் செயல்முறை முழுவதிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்களோ அந்த நிலைமைகளும், இயல்பாகவே உற்பத்திச் சாதனங்களின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.
... ... ...
இவ்வாறாக, உற்பத்திக்கான பொருளாயதச் சாதனங்களும் உற்பத்திச் சக்திகளும் மாற்றமும் வளர்ச்சியும் அடைவதைத் தொடர்ந்து, தனியாட்கள் உற்பத்தி செய்வதற்குரிய சமூக உறவுகளும், உற்பத்தியின் சமூக உறவுகளும் மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்பதை நாம் காண்கிறோம். உற்பத்தி உறவுகளே அவற்றின் ஒட்டுமொத்த முழுமையில் சமூக உறவுகளாய் அமைகின்றன”
(கூலியுழைப்பும் மூலதனமும்- முன்னுரை)

நூலை முழுமையாகப் படிக்க:-
கூலியுழைப்பும் மூலதனமும்
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்