Tuesday, 12 June 2018

மனத்துக்கு ஆறுதல் அளிக்கிறதாக சொல்லி மதத்தை ஆதரிப்பவரின் நோக்கம் புரட்சிகர வைராக்கியத்தை ஒழிப்பதே- லெனின்

“காவுத்ஸ்கி இணையற்ற முறையில் மார்க்சியத்தைச் சீரழித்து இழிவுபடுத்தியுள்ளார், சரியான சமயச்சபை பாதிரியாராக மாறியுள்ளார், முதலாளிகளை சமாதான வழிப்பட்ட ஜனநாயகத்தைக் கைக்கொள்ளும்படிச் செய்ய முயலுகிறார் அவர் இதை இயக்கவியல் என்பதாக அழைக்கிறார். முதலில் தடையில்லா வாணிபம் இருந்து பிறகு ஏக போகங்களும் ஏகாதிபத்தியமும் வந்தன என்றால், அதீத- ஏகாதிபத்தியமும் அதன் பிறகு மீண்டும் தடையில்லா வாணிபமும் ஏன் வரக்கூடாது

இந்த ''அதீத - ஏகாதிபத்தியம்'' ''சாதிக்கப்படக்” கூடியது தானா என்று சொல்வதற்கு வேண்டிய துணிவுகூட அவரிடம் இல்லை என்றாலும், சமயச் சபைப் பாதிரியாரான அவர் இந்த அதீத-ஏகாதிபத்தியத்தால் கிடைக்கப்போகும் பாக்கியங்களைச் சித்திரித்துக்காட்டி, ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றார்! மனத்துக்கு ஆறுதல் அளிக்கிறது என்று சொல்லி மதத்தை ஆதரித்தவர்களுக்குப் பதிலளிக்கையில் ஃபாயர்பாக், இந்த மன ஆறுதலின் பிற்போக்குவாத உட்பொருளைச் சுட்டிக்காட்டியது முற்றிலும் சரியானதே! அடிமை நிலையை எதிர்த்துக் கிளம்பும்படி அடிமையை உசுப்பி விடுவதற்குப்பதில், அவனுக்கு மன ஆறுதல் அளிப்பவர் எவரும் அடிமை உடைமையாளருக்கு உதவுகிறவரே ஆவார் என்றார் அவர்.

எல்லா ஒடுக்கும் வர்க்கங்களுக்கும் அவற்றின் ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இரு வகைச் சமூகப் பணிகள் தேவைப்படுகின்றன. ஒன்று தூக்கிலிடுவோனின் பணி, மற்றொன்று பாதிரியாரின் பணி. ஒடுக்கப்படுவோரின் கண்டனத்தையும் ஆத்திரத்தையும் அடக்குவதற்காகத் தூக்கிலிடுவோன் தேவைப்படுகிறான். பாதிரியார் தேவைப்படுவது, ஒடுக்கப்படுவோருக்கு ஆறுதல் அளிப்பதற்காக, வர்க்க ஆட்சி பாதுகாக்கப்படும் அதே நேரத்தில் ஒடுக்கப்படுவோரின் துன்பதுயரங்களும் இழப்புகளும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்குச் சித்திரித்துக் காட்டி (இந்த வாய்ப்புகள்கைகூடுமென” உத்தரவாதம் அளிக்காமலே இதைச் செய்வது மிகவும் சுலபம் தான்...), இவ்வழியில் அவர்களை வர்க்க ஆட்சிக்கு இணங்கிவிடும்படிச் செய்து, புரட்சிகரச் செயல்களிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டு, அவர்களது புரட்சிகர மனப்பாங்கிற்குக் குழிபறித்து, அவர்களது புரட்சிகர வைராக்கியத்தை ஒழித்துக் கட்டுவதற்காக, மார்க்சியத்தைக் காவுத்ஸ்கி மிகமிக அருவருப்பான, அசட்டுத்தனமான எதிர்ப்புரட்சித் கோட்பாடாக, படுமோசிமான சமயச் சித்தாந்த வகைப்பட்டதாக மாற்றுகின்றார்.
(இரண்டாவது அகிலத்தின் தகர்வு -பக்கம்-44-45)

Saturday, 9 June 2018

உலகில் “கலப்பற்ற தூய” முதலாளித்துவம் என்பதாக எதுவும் இல்லை, இருக்கவும் முடியாது- லெனின்


இயற்கையிலும் சரி, சமூகத்திலும் சரி, “கலப்பற்ற தூய்மைனான” நிகழ்வுகள் எவையும் இல்லை, இருக்கவும் முடியாது- மார்க்சிய இயக்கவியல் இதைத்தான் நமக்குப் போதிக்கிறது. தூய்மையெனும் கருத்துருவே ஒரு பொருளை அதன் முழுமொத்தத்திலும் அதன் அனைத்துச் சிக்கலிலும் அப்படியே தழுவியணைத்துக் கொண்டுவிட முடியாத மனிதப் புலனுணர்வின் குறிப்பிட்ட குறுகிய தன்மையை, ஒருசார்பினைக் குறிப்பதாகும் என்பதை இயக்கவியல் தெளிவுபடுத்துகிறது.

உலகில் “கலப்பற்ற தூய” முதலாளித்துவம் என்பதாக எதுவும் இல்லை, இருக்கவும் முடியாது, பிரபுத்துவம், குட்டிமுதலாளித்துவம் அல்லது வேறொன்றின் கலப்புடன்தான் எப்போதும் இரு இருக்கக் காண்கிறோம்.
(இரண்டாவது அகிலத்தின் தகர்வு -பக்கம்-52-53)

Friday, 27 April 2018

அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை -மார்க்ஸ்

(இம் முன்னுரையில் மார்க்ஸ் தாம் கண்டுபிடித்த வரலாற்றியல் பொருள்முதல்வாத்தை சுருக்கமாகவும் செறிவாகவும் விளக்கியுள்ளார்.)

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பைக் கீழ்க்கண்ட வரிசைமுறைப்படி நான் ஆராய்கிறேன்: மூலதனம், நிலச் சொத் துடைமை, கூலி உழைப்பு, அரசு, வெளிநாட்டு வர்த்தகம், உலகச் சந்தை. நவீன முதலாளித்துவச் சமூகம் மூன்று மாபெரும் வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வர்க்கங்களின் பொருளாதார வாழ்க்கையின் நிலைமைகளை முதல் மூன்று தலைப்புகளில் ஆராய்கிறேன்; அடுத்த மூன்று தலைப்புகளுக்கு இடையே இருக்கின்ற உள்ளிணைப்பு இயல்பாகவே புலப்படும். முதல் புத்தகத்தின் முதல் பகுதி மூலதனத்தைப் பற்றி ஆராய்கிறது


அதில் கீழ்க்கண்ட அத்தியாயங்கள் உள்ளன: 1) பண்டம்; 2)பணம் அல்லது சாதாரண நாணயச் செலாவணி முறை; 3) பொதுவாக மூலதனத்தைப் பற்றி. முதல் இரண்டு அத்தியாயங்களையும் கொண்டதே இந்தப் புத்தகம். இந்தக் கையெழுத்துப் பிரதிகள் எனக்கு முன்பாகக் கிடக்கின்றன. இவை அச்சிடப்படுவதற்காக எழுதப்பட்டவையல்ல; நீண்ட இடைவெளி கொண்ட வெவ்வேறு காலங்களில் என்னுடைய சுயவிளக்கத்துக்காக எழுதப்பட்டவையே. ஆரம்பத்தில் குறிப்பிட்ட திட்டப்படி இவற்றை ஒன்றுதிரட்டி ஒரே இணைப்பாகத் திருத்தி யமைப்பதென்பது எனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பொறுத்த தாகும்

நான் எழுதிய பொதுவான முன்னுரையை இங்கே சேர்க்கவில்லை. ஏனென்றால் மேலும் சிந்தித்த பொழுது இன்னும் ஆதாரங்களைத் திரட்டி நிரூபிக்கப்பட வேண்டிய முடிவுகளை முன் கூட்டியே தெரி விப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தோன்றுகிறது; உண்மையிலேயே என்னைப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர் குறிப்பிட்டவற்றிலிருந்து பொதுப்படையானவற்றுக்கு முன்னேறுவ தென்று முடிவு செய்துகொள்ள வேண்டும். எனினும் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சியின் வளர்ச்சிப் போக்கைப் பற்றி சுருக்கமாகச் சில வார்த்தைகளைச் சொல்வது இங்கே பொருத்தமானதாகும்.

நான் நீதி இயலைப் படித்த போதிலும், தத்துவஞானத்துக்கும் வரலாற்றுக்கும் உட்பட்ட பாடமாகவே அதைப் படித்தேன். 1842-43ஆம் வருடங்களில், R/reinische zeitung" என்ற பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில், பொருளாயத நலன்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவற்றை விவாதிக்க வேண்டிய இக்கட்டான நிலை முதல் தடவையாக எனக்கு ஏற்பட்டது. காட்டு விறகுகள் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப் படுவதையும், நிலச் சொத்துடைமை துண்டு துண்டாகப் பிரிக்கப் படுவதையும் பற்றி ரைனிஷ் நாடாளுமன்றத்தில் (Landtag) நடைபெற்ற விவாதங்கள்; மோஸெல் பள்ளத்தாக்கிலுள்ள விவசாயிகளின் நிலையைப் பற்றி Rheinische Zeitting எழுதியவற்றுக்கு எதிராக ரைன் மாநிலத்தின் ஓபர் - பிரசிடெண்ட் ஹெர் வொன் ஷாப்பர் எழுப்பிய அதிகாரபூர்வமான வாதங்கள், கடைசியாக வர்த்தக சுதந்திரம், வர்த்தகக் காப்பு வரி பற்றி நடைபெற்ற சொற்போர்கள் என்னை முதலில் பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனத்தைச் செலுத்துமாறு செய்தன. இதற்கு மாறாக, "முன்னுக்குப் போக ஆசைப்படுகிற நல்லெண்ணங்கள் விவரமான அறிவின் இடத்தைப் பிடித்திருந்த அந்தக் காலத்தில் லேசான தத்துவஞான முலாம் பூசப்பட்ட பிரெஞ்சு சோஷலிசம், கம்யூனிசத்தின் எதிரொலி, Rheinische Zeitung பத்திரிகையில் குறிப்பிடத்தக்க விதத்தில் தென்பட்டது. 

இந்த மேம்போக்கான அறிவுக்கு (dilettantism) என்னுடைய மறுப்பைத் தெரிவித்தேன் என்றாலும் Allgemeine Zeitung" என்ற அவுக்ஸ்ப ர்க் நகரப் பத்திரிகையோடு நடத்திய விவாதத்தில் பிரெஞ்சுக்கொள்கைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி ஏதாவது அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு எனது கடந்த கால ஆராய்ச்சிகள் அனுமதிக்கவில்லை என்பதை அதே சமயத்தில் வெளிப் படையாக ஒத்துக்கொண்டேன். Rheinische Zeitung பத்திரிகையை வெளியிட்டவர்கள், தங்கள் பத்திரிகையில் மேலும் பணிவான கொள்கையைக் கடைப்பிடித்தால், அதன் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படலாம் என்ற நப்பாசைக்கு ஆளாகிய பொழுது, நான் அந்த வாய்ப்பை ஆர்வத்தோடு பற்றிக் கொண்டேன்; பொது அரங்கத்திலிருந்து விலகி என்னுடைய ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.

என்னை வாட்டிய சந்தேகங்களைப் போக்கிக் கொள்வதற்காக நான் செய்த முதல் ஆராய்ச்சி, சட்டம் பற்றிய ஹெகலின் தத்துவத்தை விமர்சன ரீதியாக மறு பரிசீலனை செய்ததாகும்; இந்தப் புத்தகத்துக்கு நான் எழுதிய அறிமுகம் 1844 ஆம் வருடத்தில் பாரிஸ் நகரத்தில் Deutsch - Frarizosische Jahrbucher' என்ற இதழில் வெளியிடப்பட்டது. சட்ட உறவுகளையோ அல்லது அரசியல் வடிவங்களையோ, தனித்தனியாகவோ அல்லது மனித அறிவின் பொதுவான வளர்ச்சிப் போக்கு என்று சொல்லப்படுகிற அடிப்படையைக் கொண்டோ புரிந்துகொள்ள முடியாது; அதற்கு மாறாக, அவை வாழ்க்கையின் பொருளாயத் நிலைமைகளில் பிறக்கின்றன; இவற்றின் முழுத்தொகுதியையே ஹெகல், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் உதாரணத்தைப் பின்பற்றி "சிவில் சமூகம்” (Civill society) என்ற வார்த்தைகளில் அடைக்கிறார்; எனினும் இந்த சிவில் சமூகத்தின் உள்ளமைப்பை அரசியல் பொருளாதாரத்தில் தேட வேண்டும் - என்னுடைய ஆராய்ச்சியின் பலனாக மேற்கூறிய முடிவுகளுக்கு வந்தேன். 

பாரிசில் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஆனால் திரு.கிலோ என்னை பிரான்சிலிருந்து வெளியேற்ற உத்தர விட்டபடியால், இந்த ஆராய்ச்சியை பிரஸ்ஸல்ஸ் நகரத்தில் தொடர்ந்து செய்தேன். இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களில் இருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. 

மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதி லிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது. 

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது, இயற்கை அறிவியல் போன்று துல்லியமாகச் சொல்ல முடிகிற உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் மனிதர் தம் உணர்நிலைக்குள் மோதல் உண்டாகி மாற்றியமைக்கப்படுகிற சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞான - சுருக்கமாகச் சொல்வதென்றால் கருத்து நிலை வடிவங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும். ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது, அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்தச் சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்திச் சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள், பழைய சமூகத்தின் சுற்று வட்டத் துக்குள் தாம் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவு களை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாத படி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம்பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும் விரிவான உருவரையில் ஆசிய, பண்டைக்கால், நிலப்பிரபுத்துவ, நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளைச் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கும் சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ உற்பத்தி முறை தான் உற்பத்தியின் சமூக நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம் - முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல', தனிநபர்களின் ஜீவனோபாயத்தின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே. ஆனால் முதலாளித்துவச் சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாயத நிலைமைகளையும் உருவாக்குகின்றன, எனவே இந்தச் சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.

பிரெடெரிக் எங்கெல்ஸ் பொருளாதார வகையினங்களைப் பற்றிய விமர்சனம் என்ற மிகச் சிறந்த கட்டுரையை வெளியிட்டது முதல் (Deutsch - Franzosische Jahrbucher இதழில் அச்சிடப்பட்ட து) நான் அவருடன் கடிதங்களின் மூலமாகத் தொடர்ந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே அவரும் இதே முடிவுக்கு வேறு வழியின் மூலமாக வந்தார் “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்க த்தின் நிலை " (The corndition of the Working class in England) என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கவும்). 1845 ஆம் வருடத்தின் வசந்த காலத்தில் அவரும் பிரஸ்ஸல்ஸ் நகரத்தில் குடியேறிய பிறகு நாங்களிருவரும் ஜெர்மன் தத்துவஞானத்தின் சித்தாந்தத்துக்கு எதிராக எங்களுடைய கருதுகோளை விளக்கி எழுதுவதென்று, அதாவது எங்களுடைய கடந்த காலத் தத்துவஞான மனசாட்சியோடு கணக்குத் தீர்த்துக் கொள்வதென்று முடிவு செய்தோம். ஹெகலுக்குப் பிந்திய தத்துவஞானத்தின் விமர்சனம் என்ற வடிவத்தில் இந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டோம். அச்சுக் காகிதத்தில் எட்டில் ஒரு பங்கின் அளவில் இரண்டு புத்தகங்களாக இருந்த இந்தக் கையெழுத்துப் பிரதியை' வெஸ்ட்ஃபாலியாவிலிருந்த வெளியிட்டாளர் களுக்கு அனுப்பி வெகு காலமான பிறகு, சூழ்நிலை மாறி விட்ட படியால் அதை அச்சிட அவர்களால் முடியாது என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கையெழுத்துப் பிரதியை எலிகளின் கொறிக்கும் விமரிசனத்துக்கு நாங்கள் மகிழ்ச்சியோடு கொடுத்து விட்டோம். ஏனென்றால் சுயவிளக்கம் என்ற எங்களுடைய முக்கிய மான நோக்கம் நிறைவேறிவிட்டது. 

அந்த நாட்களில் எங்களுடைய கருத்துகளில் ஏதாவதொரு அம்சத்தைப் பொதுமக்களுக்கு விளக்கி நாங்கள் வெவ்வேறு சமயங்களில் வெளியிட்ட புத்தகங்களில், நானும் எங்கெல்சும் கூட்டாக எழுதிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (Manifesto of the communist Party), நான் வெளியிட்ட சுயேச்சை வணிகம் பற்றிய சொற்பொழிவு (Discours sur le libre echange) ஆகியவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எங்களுடைய கருத்து களின் முக்கிய மான அம்சங்கள் கோட்பாட்டளவிலானாலும் வாதம் புரிவதற்காக எழுதப்பட்ட மெய்யறிவின் வறுமை (The Poverty of Philosophy) என்ற புத்தகத்தில் முதல் தடவையாகச் சொல்லப்பட்டன, புரூதோனுக்கு மறுப்பாக எழுதப்பட்ட இந்த நூல் 1847 ஆம் வருடத்தில் வெளியிடப் பட்டது. நான் ஜெர்மன் மொழியில் எழுதிய கூலி உழைப்பு (Wage Labour) என்ற புத்தகத்தில் பிரஸ்ஸல்சிலுள்ள ஜெர்மன் தொழி லாளர்கள் சங்கத்தில் இதே பொருளில் நான் நிகழ்த்திய சொற் பொழிவுகளைப் பயன்படுத்திக் கொண்டேன். பிப்ரவரி புரட்சி யினாலும் அதன் காரணமாக பெல்ஜியத்திலிருந்து என்னைப் பலாத் காரமாக வெளியேற்றி விட்டதனாலும் அதைப் பிரசுரமாக வெளி யிடுவது தடைப்பட்டது.

1848, 1849 ஆம் வருடங்களில் Neue Rheinische Zeitung இதழை வெளியிடும் பணிகளும், அதன் பிறகு ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் என்னுடைய பொருளாதார ஆராய்ச்சிகளை நிறுத்தி விட்டன. 1850 ஆம் வருடத்தில் லண்டன் நகரத்தில்தான் என்னுடைய ஆராய்ச்சிகளை மறுபடியும் தொடர்ந்து செய்ய முடிந்தது. பிரிட்டிஷ் மியூசியத்தில் அரசியல் பொருளாதார வரலாறு பற்றிச் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான விவரத் தொகுப்புகளும், முதலாளித்துவச் சமூகத்தை ஆராய்வதற்கு லண்டன் ஒரு வசதியான மையம் என்பதனாலும், கடைசியாக கலிபோர்னியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டதன் விளைவாக இந்தச் சமூகம் ஒரு புதிய வளர்ச்சிக் கட்டத்தை எட்டிவிட்டது போலத் தோன்றியதும் என்னை மறுபடியும் ஆரம்பத்திலிருந்து தொடங்குமாறும், புதிதாகக் கிடைத்திருக்கும் விவரங்களைக் கவனத்தோடு ஆராயுமாறும் தூண்டியது. 

இந்த ஆராய்ச்சிகள் வெளித்தோற்றத்தில் சற்று அப்பாற்பட்ட விஷயங் களுக்கும் என்னைத் தாமாகவே இழுத்துச் சென்றபடியால், நான் அதற்கும் ஓரளவு நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் குறிப்பாக, என்னுடைய வாழ்க்கைக்கு நான் சம்பாதித்துத் தீரவேண்டிய அத்தியாவசியமான நிலை, இந்த ஆராய்ச்சிக்குச் செலவிடக் கூடிய நேரத்தைக் குறைத்தது. New York Daily Triburne என்ற பிரபலமான ஆங்கிலோ-அமெரிக்கப் பத்திரிகையில்" நான் கடந்த எட்டு வருடங் களாக எழுதி வருகிறேன். ஆனால் செய்திக் கடிதம் என்ற அடிப் படையில் மட்டுமே நான் எழுதியபடியால் என்னுடைய ஆராய்ச்சி களை மிகவும் அதிகமான அளவுக்குப் பிரித்துக் கொடுக்க நேர்ந்தது. பெரும்பாலான கட்டுரைகளில் பிரிட்டனிலும், ஐரோப்பாக் கண்டத்திலும் நடைபெறும் முக்கியமான பொருளாதார சம்பவங்களைப் பற்றியே எழுத வேண்டியிருந்தது. எனவே நடைமுறையிலிருக்கும் சில்லரை விவரங்களையும் கூட (அறுதியிட்டுச் சொல்வதென்றால் இவை அரசியல் பொருளாதார தத்துவத்தின் உலகத்துக்கு அப்பாற் பட்டவை) நான் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாயிற்று.

அரசியல் பொருளாதாரம் என்ற துறையில் என்னுடைய ஆராய்ச்சிகளின் போக்கின் முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டுகின்ற இந்தக் கட்டுரையில் என்னுடைய கருத்துகள் -அவற்றை எப்படி மதிப்பிட்ட போதிலும் அந்தக் கருத்துக்கும் ஆளும் வர்க்கங்களின் காரணம் நிறைந்த வெறுப்புக்கும் சிறிதும் பொருத்தமில்லாத போதிலும் - கடந்த பல ஆண்டுகளாக நான் செய்து வந்திருக்கிற நேர்மையான ஆராய்ச்சியின் விளைவாகும். நரகத்தின் வாயிலில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைப் போல விஞ்ஞானத்தின் வாயிலிலும் இந்தக் கோரிக்கை வற்புறுத்தப்பட வேண்டும்:

இங்கே அவநம்பிக்கைகளை அகற்றி விடுங்கள்; எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்து விடுங்கள். 
[Dante Divina Commedia]

லண்டன், ஜனவரி 1859

Tuesday, 24 April 2018

சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் தேசிய கடமையைப் பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”:-


“முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.

பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் - முதலாளித்துவ வர்க்கம் பலவந்தமாக வீழ்த்தப்பட்டு, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் கட்டம்வரையில் - நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்.”
(கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை- மார்க்ஸ், எங்கெல்ஸ்)

Tuesday, 27 March 2018

புரட்சிகரமான போராட்டத்தை முன்வைத்து ஜனநாயகப் போராட்டத்தை மறுக்கிற இடதுதிரிபையும், ஜனநாயகப் போராட்டத்தில் முடங்கி புரட்சிகரமான போராட்டத்தை மறுக்கிற வலதுதிரிபையும் எதித்து- லெனின்


“...சோஷலிசப் புரட்சி தனி ஒரு செய்கை அல்ல, ஒரே ஒரு முனையில் நடக்கும் ஒரே ஒரு போர் அல்ல, அது கடுமையான வர்க்க மோதல்களைக் கொண்ட முழுமையான ஒரு சகாப்தம். எல்லா முனைகளிலும் அதாவது, எல்லாப் பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் மீதும் நடக்கும் நீண்ட போர்களின் தொடராகும், முதலாளி வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதிலேதான் இந்தப் போர்கள் போய் முற்றுப்புள்ளி பெற முடியும். ஜனநாயகத்திற்கான போராட்டம் தொழிலாளி வர்க்கத்தைச் சோஷலிசப் புரட்சியிலிருந்து திசை திருப்பிவிடவோ, அதை மறைத்து மூடிவிடவோ வல்லது என்று நினைப்பது கொடிய பிழையாகும்.

அதற்கு மாறாக, முழுமையான ஜனநாயகத்தைச் செயல் படுத்தாத வெற்றிகரமான சோஷலிசம் எப்படி இருக்க முடியாதோ அதே போல் ஜனநாயகத்திற்காக ஒரு முழு வடிவான, முரணற்ற, புரட்சிகரமான போராட்டம் இல்லாமல் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் மீது தான் வெற்றி பெறுவதற்குத் தயார் செய்ய முடியாது.”
(சோஷலிசப் புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்”-
1918 ஜனவரி-பிப்ரவரியில் எழுதியது(75).
நூல் தொகை, தொகுதி 22, ஆங்கிலம் பக்கம் 144.)

Friday, 23 March 2018

சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள் பற்றி லெனின்


வர்க்கங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஆதரித்தல், சோஷலிசப் புரட்சி, புரட்சிகரப் போராட்ட முறைகள் ஆகிய கருத்தைக் கைவிடல், முதலாளி வர்க்க தேசியவாதத்துக்கு உகந்தாற் போல் தகவமைத்துக் கொள்ளுதல்,  தேசிய இன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல், முதலாளி வர்க்கச் சட்ட முறையை மூடபக்தியுடன் வழிபடுதல், “மக்கள் தொகையில் விரிவான திரள்கள்” (குட்டி முதலாளிகள்தான் இவ்விதம் குறிக்கப்படுகிறார்கள்) மிரண்டு விடுவார்களோ என்று அஞ்சி வர்க்கக் கண்ணோட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் விட்டொழித்தல்- சந்தேகத்துக்கு இடமின்றி இவையேதான் சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள்.
(சோஷலிஸ்ட் அகிலத்தின் நிலையும் கடமைகளும் – நவம்பர் 1, 1914,-
சர்வதேசத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி – லெனின் பக்கம் -171-172)

Monday, 19 March 2018

உற்பத்தியும் மறுவுற்பத்தியும்- குலமரபுக் குழுக்களின் சிதறல்- பற்றி எங்கெல்ஸ்


“பொருள்முதல்வாதக் கருத்தமைப்பின்படி - கடைசியாகப் பார்க்கும் பொழுது - உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானகரமான காரணியாகும். ஆனால் இது இருவகையான தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வது - அதாவது உணவு, உடை, வீடு ஆகிய வற்றையும் அவற்றைப் பெறுவதற்குத் தேவையான கருவிகளையும் உற்பத்தி செய்வது; மறு பக்கத்தில், மனிதர்களையே உற்பத்தி செய்வது - அதாவது மனித இனத்தைப் பெருக்குவது. ஒரு திட்டவட்டமான வரலாற்றுச் சகாப்தத்தைச் சேர்ந்த, ஒரு திட்டவட்டமான நாட்டைச் சேர்ந்த மக்கள் எந்த சமூக அமைப்பின் கீழ் வாழ்ந்து வருகிறார்களோ அந்த சமூக அமைப்பை உற்பத்தியின் இரண்டு வகைகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு பக்கத்தில் உழைப்பின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் மறு பக்கத்தில் குடும்பத்தின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் இந்த அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன.

எந்த அளவுக்கு உழைப்பின் வளர்ச்சி குறைவாக இருக்கிறதோ, எந்த அளவுக்கு உழைப்பின் உற்பத்தியளவு குறுகியதாகவும் அதன் காரணமாக சமூகத்தின் செல்வமும் குறுகியதாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு சமூக அமைப்பின் மீது குலமரபு உறவுகள் ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றும். எனினும் குலமரபு உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூகக் கட்டுக் கோப்புக்குள்ளாகவே உழைப்பின் உற்பத்தித் திறன் மேன்மேலும் வளர்கிறது; அத்துடன் கூடவே தனிச்சொத்தும் பரிவர்த்தனையும் வளர்கின்றன; செல்வத்தில் வேற்றுமைகளும் மற்றவர்களுடைய உழைப்புச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பும், அதன் மூலம் வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையும் வளர்கின்றன. இவை புதிய சமூக அம்சங்கள்; இவை தலைமுறைக்குப் பின் தலைமுறையாக பழைய சமூகத்தின் கட்டுக்கோப்பைப் புதிய நிலைமைகளுக் கேற்பத் திருத்தியமைக்க முயல்கின்றன. முடிவில், அவ்விரண் டிற்கும் இடையிலுள்ள பொருந்தா நிலை ஒரு முழுமையான புரட்சிக்கு இட்டுச் செல்கிறது.

புதிதாக வளர்ச்சியடைந்த சமூக வர்க்கங்களின் மோதலில் குலமரபுக் குழுக்களின் அடிப்படையில் அமைந்திருந்த பழைய சமூகம் வெடித்துச் சிதறி விடுகிறது. அந்தப் பழைய சமூகத்தின் இடத்தில் அரசாக அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய சமூகம் தோன்றுகிறது. அந்த அரசின் கீழ் நிலை அங்கங்களாக குலமரபுக் குழுக்கள் (kinship groups) இனி இல்லை, வட்டார அடிப்படையில் அமைந்த குழுக்களே இருக்கின்றன. இந்தப் புதிய சமூகத்தில் சொத்துடைமை அமைப்பு குடும்ப அமைப்பின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் இந்த சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டங்களும் இப்பொழுது சுதந்திரமாக வளர்கின்றன. இந்த வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டங்களுமே இதுவரை ஏடறிந்த எல்லா வரலாற்றுக்கும் உள்ளடக்கமாக இருக்கின்றன.

நமது ஏடறிந்த வரலாற்றின் இந்த வரலாற்றுக்கு முந்திய அடிப்படையின் முக்கியமான அம்சங்களைக் கண்டு பிடித்து மறுபடியும் நிர்மாணித்துக் கொடுத்தது தான் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும். மேலும் மிகவும் தொன்மையான கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய வரலாற்றின் இதுவரை விடுவிக்க முடியாதிருந்த மிகவும் முக்கியமான புதிர்களை விடுவிப்பதற்குரிய வழியை வட அமெரிக்க செவ்விந்தியர்களின் குல உறவுகளில் கண்டுபிடித்ததும் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும். எனினும் அவருடைய நூல் ஒரே நாள் வேலையல்ல. அவர் தன்னுடைய விவரத் தொகுப்பைப் புரிந்து கொள்வதற்கு நாற்பது ஆண்டுகள் போராடிக் கடைசியில் முழு வெற்றி பெற்றார். அதனால் தான், நம் காலத்தில் வெளியிடப்பட்டிருக்கின்ற, சகாப்தத்தைப் படைக்கின்ற நூல்களில் அவருடைய நூலும் இடம் பெற்றிருக்கிறது..
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் முன்னுரை 1885)