Friday 19 August 2022

பாட்டாளியினுடைய உழைக்கும் சக்தியின் மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுவதைப் பற்றி மார்க்ஸ்:-

 

“ஒவ்வொரு சரக்கின் மதிப்பையும் போலவே, உழைப்புச் சக்தியின் மதிப்பும் இந்தத் தனிவகைப் பண்டத்தின் உற்பத்திக்கும், ஆகவே மறுவுற்பத்திக்கும் [reproduction] - கூட அவசியமான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அது மதிப்பைப் பெற்றுள்ளதென்ற அளவில் அதில் சேர்ந்துள்ள சராசரி சமுதாய உழைப்பின் திட்டமான அளவையன்றி வேறு எதையும் குறிப்பதில்லை.

 உழைப்புச் சக்தி இருப்பது உயிருள்ள தனியாளின் ஆற்றல் அல்லது சக்தியாகவே. ஆதலால் அவர் இருந்தாலன்றி அதன் உற்பத்தி சாத்தியமன்று. தனியாள் இருக்க, உழைப்புச் சக்தியின் உற்பத்தி அவர் தன்னையே மறுவுற்பத்தி செய்து கொள்வதில், அதாவது அவரது பராமரிப்பில் அடங்கியுள்ளது. அவரது பராமரிப்புக்கு குறிப்பிட்ட அளவிலான வாழ்வுச் சாதனங்கள் அவருக்குத் தேவைப்படுகின்றன. எனவே உழைப்புச் சக்தியின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரம் என்பது அந்த வாழ்வுச் சாதனங்களின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரமாகி விடுகிறது; வேறு விதமாகச் சொன்னால், உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது உழைப்பாளியின் பராமரிப்புக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களின் மதிப்பே. ஆயினும் உழைப்புச் சக்தி எதார்த்தமாவது அதன் பிரயோகத்தின் வாயிலாகவே. அது தன்னைச் செயல்படுத்திக் கொள்வது வேலை செய்வதன் மூலமே. ஆனால், இவ்வழியில் மனிதத் தசை, நரம்பு, மூளை முதலானவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவு செலவழிகிறது; செலவழிந்த இவற்றை மீட்டமைக்க வேண்டும். இவ்வகையில் செலவு கூடினால் வருமானமும் கூட வேண்டும்.

உழைப்புச் சக்தியின் உடைமையாளர் இன்று வேலை செய்கிறார் என்றால், ஆரோக்கியம், வலிமை ஆகியவை தொடர்பான அதே நிலைமைகளில் அதே நிகழ்முறையை நாளை மீண்டும் நிகழ்த்த அவருக்கு சக்தியிருக்க வேண்டும். எனவே, அவரது வாழ்வுச் சாதனங்கள் தொடர்ந்து அவர் உழைப்பாளிக்குரிய இயல்பான நிலையில் இருப்பதற்குப் போதுமானவையாக இருக்க வேண்டும்.

உணவு, உடை, எரிபொருள், உறைவிடம் போன்ற அவரது இயற்கைத் தேவைகள் அவரது நாட்டின் வெப்பதட்ப நிலைமைகளுக்கும் பௌதிக நிலை மைகளுக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. மறு புறம் அவரது அவசியத் தேவைகள் என்பவற்றின் தொகையும் அளவும், அதே போல் அவற்றை நிறைவு செய்கிற முறைகளும் வரலாற்று வளர்ச்சியிலிருந்து விளைகிறவை; எனவே, அவை பெருமளவுக்கு நாடு நாகரிக வளர்ச்சியில் எந்நிலையை அடைந்துள்ளது என்பதையும், இன்னும் குறிப்பாக, எப்படிப்பட்ட நிலைமைகளிலும் ஆகவே எம்மாதிரியான பழக்க வழக்கங்களுடனும் வசதிகளின் வளர்ச்சி நிலையுடனும் சுதந்தரத் தொழிலாளர்களின் வர்க்கம் உருவெடுத்தது என்பதையும் பொறுத்தவை. எனவே, ஏனைய சரக்குகளின் மதிப்பு நிர்ணயத்தில் போலல்லாமல், உழைப்புச் சக்தியின் மதிப்பு நிர்ணயத்தில் வரலாற்று-தார்மிகக் கூறு ஒரு காரணியாக இடம் பெறுகிறது. எனினும் குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட காலத்தில், உழைப்பாளிக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களின் சராசரி அளவு நடைமுறை வாயிலாகத் தெரிந்து விடுகிறது.”

(மூலதனம் 1 பக்கம்236-237)

No comments:

Post a Comment