(மக்களின் செயற்பாடே
வரலாற்றைப் படைக்கிறது என்கிற மார்க்சிய கருத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, இதற்கு
அடுத்துக் கூறப்பட்டுள்ளதை, சிலர் பார்க்கத் தவறுகின்றனர்.. தமது வரலாற்றுக்கெல்லாம்
அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச்
சக்திகளைத் தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்தரம் பெற்றிருக்கவில்லை என்பதையும்
மார்க்சியம் வலியுறுத்துகிறது. மனிதர்களின் செயற்பாடு, இருக்கக் காண்கிற சூழ்நிலைமைளாலும்
ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகளாலும் அவர்ளுக்கு முன்பே இருந்து வரும்
சமுதாய வடிவத்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்களின் செயற்பாடு எதன் அடிப்படையில் நடைபெறுகிறது என்பதையும்
மார்க்சியம் தெளிவுபடுத்துகிறது. இதில் தான் வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக்
கண்ணோட்டம் அடங்கியிருக்கிறது.
புறநிலையின் நிர்ணய
பாத்திரத்தையும், மேற்கட்டுமானம் அடித்தளத்தின் மீது செலுத்தும் தாக்கத்தையும்
மார்க்சியம் கணக்கில் கொண்டே “அடித்தளம்
மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாட்டை அமைத்துள்ளது. அடித்தளம் என்றால் வாழ்நிலை,
மேற்கட்டமைப்பு என்றால் சிந்தனை வடிவங்கள். வாழ்நிலை
தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை
என்பதே மார்க்சியத்தின் வரலாறு (சமூகம்) பற்றிய இயக்கவியல் பொருள்முதல்வாதக்
கண்ணோட்டமாகும்.
ஆனால், பலர் புறநிலையின்
தீர்மானகரத் தன்மையைப் பற்றி பேசினால், இயக்கமறுப்பியல் என்று கூறுகின்றனர்.
இந்தக் கூற்று மார்க்சின் இயக்கவியலை புரிந்து கொள்ளாமையின் வெளிப்படாகும்.)
“என்ன
வடிவத்திலிருந்தாலும் சரியே, சமுதாயம் என்பது என்ன?
மக்களின் பரஸ்பரச்
செய்கையின் விளைபொருள். மனிதர்கள் தாங்களாகவே ஏதாவதொரு சமுதாயத்தைத் தேர்ந்து
கொள்ளச் சுதந்தரம் பெற்றிருக்கிறார்களா?
நிச்சயமாக இல்லை. மனிதர்களின்
உற்பத்தி சக்திகளில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அனுமானித்துக் கொள்ளுங்கள், வர்த்தகம்
நுகர்வு பற்றிய ஒரு குறிப்பிட்ட வடிவம் உங்களுக்குக் கிடைக்கும். உற்பத்தியிலும் வர்த்தகத்திலும்
நுகர்விலும் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களை அனுமானித்துக் கொள்ளுங்கள், அவற்றிற்குப்
பொருத்தமான ஒரு சமுதாய அமைப்பு முறையும் ஒரு பொருத்தமான குடும்ப அமைப்பும் படிப்பிரிவுகளின்
அல்லது வர்க்கங்களின் அமைப்பும் - சுருங்கச் சொன்னால், ஒரு பொருத்தமான குடியுரிமைச்
சமுதாயம் - உங்களுக்குக் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட குடியுரிமைச் சமுதாயத்தை அனுமானித்துக்
கொள்ளுங்கள். அந்தக் குடியுரிமைச் சமுதாயத்தின் வெறும் அதிகாரபூர்வமான வெளிப்பாடாக
இருக்கிற குறிப்பிட்ட அரசியல் அமைப்பு உங்களுக்குக் கிடைக்கும். இதைத் திரு. புரூதோன்
என்றைக்கும் புரிந்து கொள்ள மாட்டார். ஏனெனில் அரசு எனும் நிலையில் நின்றுகொண்டு சமுதாயத்துக்கு
- அதாவது, சமுதாயத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான பொழிப்பின் நிலையில் நின்று கொண்டு அதிகாரபூர்வமான
சமுதாயத்துக்கு – வேண்டுகோள் விடுப்பதில் தாம் பெரிதாக ஏதோ செய்வதாக அவர் நினைத்துக்
கொள்கிறார்.
தமது வரலாற்றுக்கெல்லாம்
அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச் சக்திகளைத் தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்தரம்
உள்ளவர்களாயில்லை என்று மேற்கொண்டு சொல்லத் தேவையில்லை, ஏனெனில் ஒவ்வொரு உற்பத்திச்
சக்தியும் பெறப்பட்ட சக்தியாகும், முந்தைய நடவடிக்கையின் விளைபொருளேயாகும். எனவே உற்பத்திச்
சக்திகள் மனிதர்களின் நடைமுறை ஆற்றலின் விளைவாகும்; ஆனால் இந்த ஆற்றலுங்கூட மனிதர்கள்
இருக்கக் காண்கிற சூழ்நிலைமைளாலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகளாலும்
அவர்ளுக்கு முன்பே - அவர்களால் படைக்கப்படாமல் முந்தைய தலைமுறையினரால் விளைவிக்கப்பட்டு
- இருந்து வரும் சமுதாய வடிவத்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னிட்டு வரும் ஒவ்வொரு
தலைமுறையும் முந்தைய தலைமுறையால் பெறப்பட்ட உற்பத்திச் சக்திகளைக் கைவரப் பெறுகிறது,
அது புதிய உற்பத்திக்குரிய மூலப் பொருளாக அதற்குப் பயன்படுகிறது, இந்த எளிய உண்மையின்
காரணமாக மனித வரலாற்றிலே ஒரு கூட்டுப்பொருத்தம் உண்டாகிறது, மனித குலத்தின் வரலாறு
உருப்பெறுகிறது, மனிதனின் உற்பத்திச் சக்திகளும் எனவே அவனுடைய சமுதாய உறவுகளும் எவ்வளவுக்கெவ்வளவு
அதிகமாக வளர்க்கப் பெற்றுள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு வரலாறானது மனிதகுல வரலாறாக அமைகிறது.
எனவே, மனிதர்களின் சமுதாய வரலாறு எனப்பட்டது எப்போதும் அவர்களின் தனிநபர் வளர்ச்சியின்
- அதை அவர்கள் உணர்ந்திருந்தாலும் உணராவிட்டாலும் சரி - வரலாறு தவிர வேறில்லை. அவர்களின்
பொருளாயத உறவுகளே அவர்களின் உறவுகளனைத்துக்கும் அடிப்படை. இந்தப் பொருளாயத உறவுகள்
அவசியகரமான வடிவங்கள் மட்டுமே, அவற்றில் அவர்களுடைய பொருளாயத மற்றும் தனிநபர் வகைப்பட்ட
செயல்கள் நடக்கின்றன.”
(பா.வ.ஆன்னெகவுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம்- டிசம்பர் 28 -
1846)
No comments:
Post a Comment